Sunday, February 27, 2011

ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!


ஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா!

 
இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.

இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை!

ஆம்... எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.
 
இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை!


அமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் என்பவர் இதனை நிரூபித்துள்ளார்.

சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்க மொத்தம் ஐந்து வழிகள் உள்ளனவாம். அதில் முக்கியமானது எலுமிச்சைச் சாறு அதிகமாகப் பருகுவது.

பொதுவாகவே பழச்சாறுகளை அதிகமாகப் பருகுவதன் மூலம் உடலில் உப்பு சேர்வதை தவிர்க்க முடியும். அதிலும் சிட்ரிக் அமிலத் தன்மை கொண்ட பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். எலுமிச்சையில்தான் அதிகளவு சிட்ரைட் உள்ளது.

எனவே எலுமிச்சைச் சாறு மூலம் சிகிச்சை தருகிறார்கள். இதற்கு லெமனேட் தெரபி என்று பெயர்.

தேவையான அளவு எலுமிச்சையை சாறு பிழிந்து இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து, வேளைக்கு நான்கு அவுன்ஸ் வீதம் திமும் பருகுவதுதான் இந்த லெமனேட் தெரபி. செலவு அதிகம் பிடிக்காத, தொந்தரவில்லாத, சுவையான சிகிச்சை.

இந்த லெமனேட் தெரபியால் சிறுநீரகத்தில் கல் உருவாவதை 1.00 லிருந்து 0.13 விகிதமாகக் குறைவது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிட்ரைட் இல்லாத பழங்களை அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கச் சொல்கிறார் ரோஜர் சர். காரணம் இந்தப் பழங்களில் கால்ஷியம் சத்து அதிகம் இருக்கும். சிறுநீரகக் கல் உருவாகக் காரணமே, கால்ஷியம் ஆக்ஸலேட்தான்.

பெரும்பாலானோருக்கு சிறுநீரகத்தில் சிறு சிறு கற்கள் இருந்து கொண்டுதான் உள்ளனவாம். இது அவர்களுக்கே தெரிவதில்லையாம்.

சிறுநீரகக் கல் பிரச்சினை எப்போது தெரியும்?

சிறுநீரகக் கல் பிரச்சினை இருப்பதை மூன்று அறிகுறிகள் மூலம் உணரலாம். இதுபற்றி ரோஜர் சர் கூறுகையில்,
"கால்சியம் வகைக் கற்கள் சிறுநீரகத்திலிருந்து, வெளியேறும் இடத்துக்கு நகரும் போதுதான் முதுகு வலி, சிறுநீரில் ரத்தம், காய்ச்சல் போன்ற அறிகுறிகளை உணர முடியும். அப்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

யூரிக் ஆசிட் வகைக் கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன. சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்தான் இதுவும். ஆனால் இந்த கழிவு அதிகமாக உடலில் சேரும்போது, முழுமையாக வெளியேறாமல் சிறுநீரகத்தில் தங்கி கற்களாக உருவாகிவிடும். அதிக புரோட்டீன் உணவுகளை உண்பவர்களுக்கு இந்த மாதிரி கற்கள் உருவாகுமாம்.

இன்னொரு வகை சிறுநீரகக் கற்களுக்கு மான்கொம்பு கற்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மானின் கொம்பு போன்ற தோற்றத்தில் இந்தக் கற்கள் இருக்குமாம். கிறிஸ்டைன் என்ற வகை அரிய கற்களும் சிறுநீரகத்தில் உருவாகின்றன.

ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் - ஆனால் தொந்தரவில்லாமல்- இருந்தால், அவர்கள் உடனடியாக முன்தடுப்பு சிகிச்சைகளில் தீவிரமாக இறங்க வேண்டும். காரணம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இன்னும் ஒரு கல் உருவாகிவிடும் வாய்ப்பு உள்ளது.

கற்கள் பெரிதாகி, வேறு வழியில்லாத நிலை தோன்றும்போது, அறுவைச் சிகிச்சைதான் வழி. லித்தோட்ரிஸ்பி (lithotripsy), பெர்குடானியஸ் நெப்ரோலிதோடமி (percutaneous nephrolithotomy) மற்றும் லேசர் லித்தோட்ரிஸ்பியுடன் கூடிய யூரேடெரோஸ்கோபி (ureteroscopy with laser lithotripsy) என மூன்று சிகிச்சைகள் உள்ளன.

இந்த சிக்கல்களுக்குள் போகாமல் தவிர்த்துக் கொள்ள ஆரம்பத்திலிருந்தே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிட்ரஸ் அடங்கிய பழங்கள், பழச்சாறுகள் பருக வேண்டும்.

"திரும்பத் திரும்ப இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகளில் மாட்டிக் கொள்ளாமல் நோயாளிகளைத் தடுப்பதே நமது நோக்கம். ஒரு முறை அறுவை செய்து அகற்றப்பட்ட கற்கள், மீண்டும் சிறுநீரகத்தில் உருவாகாமல் தடுப்பது மிக முக்கியம். இப்போது இதற்கான சாத்தியம் 50 சதவிகிதமாக உள்ளது. விரைவில் அது பூஜ்யமாக மாறும்" என்கிறார் ரோஜர் சர்.

அதற்காகத்தான் இதுபோன்ற இயற்கை சிகிச்சை முறைகளை ஆராய்ந்து, மக்களுக்கு சிபாரிசு செய்து வருகிறாராம் அவர்.

முதுகுவலி,மூட்டுவலி தொல்லை? ஏன்? தீர்வு?

பிப்.27:முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்புவலி, மூட்டுவலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறுவயதிலேயே 'இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள்.




அதற்குக் காரணமே சிறுவயதிலேயே டூவீலர், கார் ஓட்டுதல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் முறையாக உட்காராமல் இருப்பது போன்றவைதான்.

முதுகுத் தண்டுவடத்தில் எலும்புகள் மணி கோர்த்தது போன்று இருக்கும். வாகனங்களில் இருக்கும் ஷாக் அப்செர்ப் போல தண்டுவட எலும்புகளுக்கும் நடுவில் டிஸ்க்கு (வட்டுகள்)கள் இருக்கும்.







மேற்கண்ட ஏதோ ஒரு காரணத்தினால் டிஸ்க்குகள் வலுவிழந்து பக்கத்திலிருக்கும் நரம்புகளை நசுக்குவதால்தான் முதுகுவலி ஏற்படுகிறது.

அதுவும் முக்கிய நரம்பான ‘Sciatica’ எனப்படும் நரம்பு நசுங்கினால் கால்குடைச்சல், கால் மரத்துவிடுதல், முதுகுவலி, கால் பலமிழந்து போதல் என வேதனைகள் புகுந்து இம்சிக்கும். இதை சிலர் `கேஸ் ப்ராப்ளமா இருக்கும்' என்று அலட்சியமாக விட்டுவிடுவார்கள். இது தவறு.

வலி, பிடிப்பு இருந்தால் `ஆரம்பநிலை'யில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு ரெஸ்ட் எடுத்தாலே போதும்.

ஆனால், ரெஸ்ட் எடுத்தும் திரும்பத் திரும்ப வலி, பிடிப்புகள் ஏற்பட்டால் `இரண்டாவது நிலை'

இதற்கு வலி மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம். இதில் கால்குடைச்சலும் சேர்ந்து கொண்டு உங்களை கதி கலங்க வைத்துவிடும். திரும்பத் திரும்ப மாத்திரைகள் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்படும்.

மூன்றாவது நிலை, தான் கொஞ்சம் அபாயகரமான நிலை. அதாவது தண்டுவடத்திலுள்ள `டிஸ்க்'கானது வலுவிழந்து அருகில் செல்லும் முக்கிய நரம்பை அதிகமாக அழுத்தினால் தாங்கவே முடியாத வலி ஏற்படும்.

கால் குடைச்சல், மரத்துப்போதல், நின்றால் நடந்தால் என வலியும் ஜாஸ்தியாகிக் கொண்டே இருக்கும். வலி மாத்திரைகள் ம்ஹூம்... சாப்பிட்டாலும் அப்படியேதான் இருக்கும்.

ஆக, இரண்டாவது நிலை, மூன்றாவது நிலையிலுள்ளவர்கள் பிஸியோதெரபி சிகிச்சை செய்துகொள்வது நல்லது.

இதற்கு பிஸியோதெரபியில் எப்படி ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது என்கிறீர்களா?
முதலில் ரெஸ்ட், அப்புறம் எலக்ட்ரோதெரபி மின்னியல் சிகிச்சை செய்யப்படும். இதில் பிரச்னைக்கேற்ப அல்ட்ராசானிக், ஐ.எஃப்.டி (நடுத்தர மின்னோட்டம்), ஐ.ஆர்.ஆர். (அகச்சிவப்புக் கதிர்கள்) என சிகிச்சை செய்து டைட்டாகிப்போன மசில்ஸை லூஸாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்தால்தான் வலி குறைய ஆரம்பிக்கும்.




இரண்டாவதாக, நரம்பு நசுங்கியிருந்தால் நரம்பை ரிலீஸ் பண்ண Traction (இழு கிசிச்சை) ட்ரீட்மெண்ட் ஒரு பத்துப் பதினைந்து முறை என இரண்டு வாரம் செய்தால் போதும். வலி படிப்படியாகக் குறையும்.

மூன்றாவதாக, ஸ்ட்ரென்த்தனிங் எக்ஸர்ஸைஸ். இதில் வீட்டிலேயே செய்யக்கூடிய ஹோம் எக்ஸர்ஸைஸ், கருவிகளைக் கொண்டு செய்யப்படும் ஃபிட்னஸ் எக்ஸர்ஸைஸ் என இருவகை உண்டு

சிகிச்சையெல்லாம் ஆர்வத்தோடு எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் பலர் இந்த உடற்பயிற்சி முறைகளை மட்டும் சரியாக கடைப்பிடிப்பதில்லை. என்னதான் மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் என்று செய்தாலும் அதற்கேற்ற உடற்பயிற்சியும் முக்கியம்

அதோடு கார்போஹைட்ரேட், ஃபேட் நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட்டு புரோட்டின், விட்டமின், மினரல்ஸ், பருப்பு, தானிய வகைகள், கீரை, காய்கறி, பழங்கள் கொண்ட உணவுகளைச் சாப்பிட்டால்தான் முன்பிருந்த பலத்தை திரும்பப் பெற முடியும். இல்லையென்றால் சிகிச்சையின் முழு பலனை பெற முடியாது.

மேலும் டூவீலர், கார்களில் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும். குறிப்பாக டயரில் காற்று குறைந்திருப்பது, தேய்ந்துபோன டயர், ஷாக் அப்சர்ப்-ல் குறைபாடு, குஷன் மற்றும் சீட், ஹேன்ட்பார்கள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலமைப்புக்கேற்ற வண்டியாகவும் இருக்க வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பே கம்ப்யூட்டரில்தான் இருக்கிறது. ஆக, கம்ப்யூட்டரில் அமர்ந்து பணிபுரிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கொருமுறை எழுந்து சென்று ஐந்து நிமிடம் ரெஸ்ட் எடுத்துக் கொண்ட பிறகு சரியான பொஸிஷனில் வந்து அமர வேண்டும்.




உட்காரக்கூடிய சேர் முதுகுப்பகுதிக்கு முழுவதுமாக சப்போர்ட்டாக இருக்க வேண்டும்.

லைட் வெளிச்சமானது நமது பின்புறத்தில் இருப்பது நல்லது. என்னதான் வாழ்க்கையில் பிஸியாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிம்பிளான வாக்கிங்+உடற்பயிற்சிகள்; அதோடு அரைமணி நேரம் அவுட்டோர் கேம்ஸ் விளையாடுவது என வழக்கப்படுத்திக் கொண்டால் முதுகுவலி, மூட்டுவலி பிரச்னைகள் உங்களை நெருங்க யோசிக்கும்.
 
நன்றி :பாலைவனத் தூது

காமன்வெல்த் போட்டி ஊழல்: கல்மாடி இன்று கைதாகிறார்?

டெல்லி: காமன்வெல்த் போட்டிகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் பல கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி இன்று கைதாவார் என்று தெரிகிறது.

காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளை கவனித்த இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடியும், அவர் கீழ் பணியாற்றியவர்களும் ஊழலில் ஈடுபட்டது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. போட்டிகளுக்கான உபகரணங்கள் வாங்கியது, ஒளிபரப்பு உரிமை கொடுத்தது, வீரர்களுக்கு உணவு தயாரிக்க ஒப்பந்தம் விட்டது உள்பட எல்லாவற்றிலும் சுரேஷ் கல்மாடி பல கோடி ரூபாய் சுருட்டியது தெரியவந்துள்ளது.


காமன்வெல்த் ஊழல் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். போட்டி அமைப்பு குழு அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி வேட்டை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியது. அவற்றை ஆய்வு செய்த போது ரூ. 2 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து போட்டி அமைப்புக்குழு நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சுரேஷ் கல்மாடி அனுமதி கொடுத்ததன் பேரில் நடந்து கொண்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.


இதனால் கடந்த ஒரு மாதமாகவே சுரேஷ்கல்மாடி கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியானபடி உள்ளது. இந்த நிலையில் சுரேஷ் கல்மாடி நேற்று முன்தினம் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், காமன்வெல்த்தில் ஊழல் குறித்து மத்திய அமைச்சர்கள் மற்றும் டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்த சுரேஷ் கல்மாடியை கைது செய்யும் நடவடிக்கையை சி.பி.ஐ. தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது. ராஞ்சியில் இன்று மாலை தேசிய விளையாட்டு நிறைவு விழா நடக்கிறது. அது முடிந்ததும் சுரேஷ் கல்மாடி எந்த நேரத்திலும் கைதாவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


Saturday, February 26, 2011

ரயில்வே பட்ஜெட் -தமிழகத்துக்கான ரயில்கள்

புது தில்லி, பிப். 25: இரு துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்கள், 7 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் என தமிழகத்துக்கான பல்வேறு அறிவிப்புகள் ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கின்றன.

துரந்தோ எக்ஸ்பிரஸ்:
1. மதுரை - சென்னை வாரம் 2 முறை
2. சென்னை - திருவனந்தபுரம் வாரம் இருமுறை
விவேக் எக்ஸ்பிரஸ்:
1. திப்ரூகர் - திருவனந்தபுரம்
-கன்னியாகுமரி வாராந்திர ரயில்
2. துவாரகா - தூத்துக்குடி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்
ஜன்ம பூமி கெüரவ் சுற்றுலா ரயில்கள்:
1. சென்னை - புதுச்சேரி - திருச்சிராப்பள்ளி - மதுரை - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் - எர்ணாகுளம் - சென்னை



எக்ஸ்பிரஸ் ரயில்கள்:
1. சென்னை - ஷீரடி வாராந்திர
எக்ஸ்பிரஸ் (பெங்களூர் வழி)
2. கோயம்புத்தூர் - தூத்துக்குடி இணைப்பு எக்ஸ்பிரஸ்
3. மைசூர் - சென்னை வாராந்திர
எக்ஸ்பிரஸ்
4. வாஸ்கோ - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ்
5. கரக்பூர் - விழுப்புரம் வாராந்திர
எக்ஸ்பிரஸ் (வேலூர் வழி)
6. புரூலியா - விழுப்புரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (வேலூர் வழி)
7. தில்லி - புதுச்சேரி வாராந்திர
எக்ஸ்பிரஸ்
பாசஞ்சர் ரயில்:
1. கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் (வாரத்தில் 6 நாள்)
ரயில் மோட்டார் சேவை:
தர்மபுரி - பெங்களூர்
மின் ரயில் சேவை:
கொல்லம் - நாகர்கோவில்
நீட்டிக்கப்பட்ட ரயில் சேவைகள்:
1. சென்னை எழும்பூர் - நாகூர்
எக்ஸ்பிரஸ் காரைக்கால் வரை
நீட்டிக்கப்படுகிறது.
2. நாகர்கோவில் - திருவனந்தபுரம் பாசஞ்சர் ரயில் கொச்சுவேலி வரை
நீட்டிக்கப்படுகிறது.
சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட ரயில்கள்:
1. வாரம் ஒருமுறை இயக்கப்பட்டுவரும் சென்னை - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் தினசரி சேவையாக மாற்றப்படுகிறது.
2. வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும் திருச்சி - கரூர் பாசஞ்சர் தினசரி சேவையாக மாற்றப்படுகிறது.

கொழும்பு – தூத்துக்குடி கப்பல் போக்குவரத்து முஸ்லிம்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!


தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் பொருளீட்டும் வழிமுறைகள் கடந்த 200 ஆண்டுகளாக பல மாற்றங்களை சந்தித்து வந்துள்ளது. அடிப்படையில் முஸ்லிம்கள் தொடக்க காலம் முதல் வியாபார ரீதியான சமுதாயம் என்பதில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. பொருள் வாங்கி விற்பதன் மூலம் உழைத்துச் சம்பாதிப்பதை உயர்வாகவும் பாதுகாப்பகவும் முஸ்லிம் சமுதாயம் கருதுகிறது.


இன்றைய முதலாளித்துவம் வலியுறுத்தும் எல்லையற்ற, முறைகேடான இலாபம் என்ற கீழ்த்தரமான தத்துவமும் குறுகியகாலத்தில் வளர்ச்சி என்ற விவேகமற்ற போக்கும் முஸ்லிம் சமுதாயத்தில் குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக சுரண்டல் மற்றும் பதுக்கலில் ஈடுபடாத நேர்மையான வியாபரிகள் என்றுதான் இன்றளவும் முஸ்லிம் சமுதாயம் தன்னை முன்னிலைப்படுத்துகிறது.






வரலாறு முழுவதும் கடலோர முஸ்லிம்கள் அரபு நாடுகள், இலங்கை மற்றும் கீழ்திசை நாடுகளுக்கு வியாபாரம் செய்யும் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள். தமிழகத்தின் உள்பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் மாட்டு வண்டிகள் மூலம் கடற்கரை பட்டிணங்களுக்கு கொண்டு வரப்பட்டு அது கடலோர முஸ்லிம்களால் கொள்முதல் செய்யப்பட்டு இந்தியப் பெருங்கடலின் கரையோர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இன்றைக்கும் கூட இதற்கான அடையாளங்களை கடற்கரையோர முஸ்லிம் கிராமங்களில் காண முடிகிறது. இப்படி கொடி கட்டிப் பறந்த வியாபாரத்தை போர்சுகீஸ் மற்றும் பிரிட்டிஷார் வந்துதான் நாசமாக்கினார்கள்.


இறைவன் படைத்த கடலுக்கு எல்லைகள் வகுத்து தமிழர்களின் மீன்பிடித் தொழிலுக்கும் முஸ்லிம்களின் வியாபாரத்திற்கும் நெருக்கடி கொடுத்தனர். பிரிட்டிஷாருக்கு தெரியாமல் இலங்கை சென்று வியாபாரம் செய்தவர்களை (Smugglers) கடத்தல்காரர்கள் என்ற படத்தைச் சூட்டினார்கள். சென்ற நூற்றாண்டு வரை கூட இலங்கைக்கான வியாபாரங்கள் தொடர்ந்து வந்தன. 1914 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு அதிகாரப்பூர்வமான கப்பல் போக்குவரத்து என்று சொல்லி தனுஷ்கோடிக்கும் – தலை மன்னாருக்கும் இடையே கப்பல் விட்டனர்.




தனிப்படட முறையில் மரக்கலன் வைத்து ஏற்றுமதி செய்து வந்த முஸ்லிம்கள் பிரிட்டிஷ் அரசு கப்பல் போக்குவரத்தைத் துவங்கியதால் அதைப் பயன்படுத்தி இலங்கை சென்று வியபாரம் செய்து வந்தனர். இந்த கப்பல் போக்குவரத்து 50 ஆண்டுகள் நீடித்தது. 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று ஏற்பட்ட கடுமையான புயலால் தனுஷ்கோடி நகரமே அழிந்தது. சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு வந்த இந்தோ – சிலோன் போட் மெயில் என்ற இரயில் 110 பயணிகளுடன் பாம்பனிலிருந்து தனுஷ்கோடி இரயில்வே ஸ்டேஷன் நுழைய இருந்த நேரத்தில் மிகப்பெரிய கடல் அலையால் தாக்கப்பட்டு 110 பேரும் 5 பணியாளர்களும் உயிரிழந்தனர். கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.


புயலுக்குப் பிறகு கப்பல் போக்குவரத்து துவங்கப்பட்டு 1983 ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்டது. 
1980 களில் இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தை அடைந்த நேரத்தில் வட இலங்கையில் வியாபாரம் செய்து வந்த முஸ்லிம்கள் அனைவரும் ஒரே இரவில் விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்டனர். அனைத்தையும் இழந்து அகதிகளாக இராமேஸ்வரத்தில் வந்து இறங்கினார்கள் முஸ்லிம்கள். அதோடு கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.


வேறு வழியில்லாமல் அப்போது முதல் அரபு நாடுகளுக்கு அடிமை வேலை செய்திட புறப்பட்ட பெருவாரியான முஸ்லிம் சமுதாயம் இன்று வரை அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. வியாபார ரீதியாக தனது பாரம்பரியத்தை அறியாத மக்களாக மாதச் சம்பளத்திலேயே காலத்தை கடத்தி வருகின்றனர்.


இப்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தூத்துக்குடி மற்றும் இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை அடுத்த மாதம் முதல் தொடங்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வாய்ப்புகளை முஸ்லிம் சமுதாயம் மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கையில் இனக் கலவரம் முடிந்து அமைதி திரும்பியுள்ள சூழலில் அங்கே வியாபாரத்திற்கும் விவசாயத்திற்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இருந்து பெரிய அளவிற்கு இலங்கைக்கு ஏற்றுமதி செய்து வரும் நிறுவனங்களுக்கு இந்த கப்பல் போக்குவரத்து சற்று பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது உண்மை. ஆனால் நடுத்தர மற்றும் சிறு வியாபாரிகள் மூலம் வியாபாரம் செழித்து வளரும் என்பதும் உண்மை. தமிழகத்தின் புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் உள்ள மக்கள் இலங்கையின் தற்போதைய தேவையை உணர்ந்து வியாபாரம் செய்ய தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.


மேலும் இலங்கையிலும் தமிழகத்திலும் வாழும் முஸ்லிம் சமுதாயம் தொலைநோக்குப் பார்வையுடன் முன்னேற்றத்திற்கான சில அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தமிழக முஸ்லிம்களின் மக்கள் தொகை 60-75 இலட்சம். இலங்கை முஸ்லிம்களின் மக்கள் தொகை 20-25  லட்சம். ஆக மொத்தம் 1 கோடி மக்கள் தொகை.


இவ்விரு நாடுகளிலும் வாழும் முஸ்லிம்களின் மொழி, உணவு, உடை, கலாச்சாரம், பண்பாடு எல்லாமே 95 விழுக்காடு ஒன்றுதான். எல்லாவற்றையும் விட இவர்களின் இறைவழிபாட்டுக் கொள்கை 100 விழுக்காடு ஒன்றுதான். அதனடிப்பபடயில் இவர்களின் முன்னேற்றத்திற்கான சிந்தனையும் ஒன்றுதான். நாடுகளுக்கு மத்தியிலான எல்லைகளால் கடந்த 60 ஆண்டுகளாக பிளவுபட்டுக் கிடக்கும் இந்த ஒரே சமூகம் ஒன்றோடு ஒன்றாக கலக்க வேண்டும். தாய்மொழியான தமிழின் வளர்ச்சிக்கும் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக வலிமை பெறுவதற்கும் இந்த சமூகக் கலப்பு மிகப் பெரிய பங்களிப்பை செய்யும்.


கடந்த 30 ஆண்டுகளில் இந்தியா அடைத்துள்ள கல்வி, மற்றும் பொருளாதார வளர்ச்சியை இலங்கை முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை தமிழக முஸ்லிம் சமூகம் ஏற்படுத்தித் தர வேண்டும். அதே போல இலங்கையின் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறையை இரு சமூகங்களும் சேர்ந்து பயன்படுத்திட தேவையான பொருளாதாரம் மற்றும் வழிகாட்டுதலை இலங்கை முஸ்லிம் சமுதாயம் ஏற்படுத்திட வேண்டும்.


அதற்கு இரு நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், சமூக ஆய்வாளர்கள், பொருளியல் வல்லுனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு அது சமுதாய முன்னேற்றம் என்ற அடிப்படையில் உழைத்திட வேண்டும்.
- CMN சலீம்


http://www.samooganeethi.org/?p=875

Friday, February 25, 2011

அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி: பேச்சுவார்த்தை தொடங்கியது


சென்னை,பிப்.24: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட தே.மு.தி.க. முடிவு செய்துள்ளது. அக் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் இதை அதிமுக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
கூட்டணி தொடர்பாக அதிமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் தேமுதிக குழுவினர் வியாழக்கிழமை மாலை ஆலோசனை நடத்தினர். சுமார் ஒன்றேகால் மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், திமுக ஆட்சியை வீழ்த்த அதிமுக அணியில் கூட்டு சேர்ந்து தேமுதிக போட்டியிடும் என்று கூறினார்.
முதல் கட்டப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது என்றும் விரைவில் அடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வியாழக்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில் தே.மு.தி.க. சார்பில் அக் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன், மாநில இளைஞர் அணிச் செயலாளர் எல்.கே. சுதிஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
அதிமுக தரப்பில் பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது:
இரு கட்சிகளும் வரும் பேரவைத் தேர்தலை சந்திப்பது குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் முதல் சுற்று பேச்சு சுமுகமாக நடந்தது. மீண்டும் அடுத்த சுற்று பேச்சு விரைவில் தொடங்கும்.

தமிழக மக்களின் விருப்பம், எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் எதிர்கட்சிகள் அனைத்தையும் ஒரே அணியில் திரட்டி, தேர்தலைச் சந்திக்க உள்ளோம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற வகையில்தான், மக்களின் விருப்பப்படி அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர தே.மு.தி.க. முன் வந்தது. இது வெற்றிக் கூட்டணி.
எத்தனை தொகுதிகள் முக்கியம் என்பதைவிட, தி.மு.க.வை ஆட்சியில் இருந்து வீழ்த்துவதே லட்சியம் என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
தேமுதிக இதுவரை கடந்துவந்த பாதை: 2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேமுதிக இதுவரை தனித்துதான் தேர்தல்களைச் சந்தித்து வந்தது. 2006 சட்டப்பேரவை பொதுத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், 2009 மக்களவை தேர்தல் ஆகியவற்றிலும், இடையில் சில சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களிலும் இக் கட்சி தனித்தே போட்டியிட்டு வந்தது.
மக்களுடனும் கடவுளுடனும்தான் கூட்டணி என்று கூறி தனித்தே தேர்தலைச் சந்தித்தார் இக் கட்சியின் தலைவர் விஜயகாந்த்.
திமுக, அதிமுக அணிகளுக்கு மாற்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இளைஞர்களின் ஆதரவு இக் கட்சிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. படிப்படியாக இக் கட்சியின் வாக்கு வங்கி அதிகரித்து சுமார் 10 சதவீத அளவில் இப்போது இருக்கிறது.
மாநிலம் முழுக்க பரவலாக வாக்கு வங்கி உள்ள கட்சி என்பதால், தேமுதிக ஆதரவைப் பெற்றால் கணிசமான தொகுதிகளை வெல்ல முடியும் என்ற எதிர்பார்ப்பு இரு அணிகளிலும் உள்ளது.
சேலத்தில் கடந்த ஜனவரியில் நடந்த மாநில மாநாட்டில் பேசிய விஜயகாந்த், திமுக ஆட்சியை வீழ்த்த மற்ற கட்சிகள் ஓர் அணியில் திரள வேண்டும் என்று பேசினார். கட்சி நிர்வாகிகளும் கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவதே நல்லது என்று தலைமையை வற்புறுத்தி வந்தனர்.

ஜெயலலிதாவும் அவருடைய கட்சி நடத்திய பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் நீங்கள் விரும்பும் கூட்டணி அமையும் என்று பேசி வந்தார்.

அதிமுக தலைவர்களுடன் தேமுதிக தரப்பினர் பல மாதங்களாகப் பேசி வந்தனர். இருந்தாலும் தேமுதிகவைத் தனித்துப் போட்டியிடவைக்க திமுக தரப்பில் முயற்சிக்கப்படுகிறது என்றும் தகவல்கள் பரவின. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிமுகவுடன்தான் கூட்டணி என்று இப்போது தேமுதிக அறிவித்துள்ளது.
அதிமுக அணியில் ஏற்கெனவே ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன.
தேமுதிக தன் நிலையை அறிவித்ததைத் தொடர்ந்து திமுக அணியில் புதிதாக கட்சிகள் சேருவதற்கு வாய்ப்பு இருக்காது என்பதால் மற்ற கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு சுறுசுறுப்பாகும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…!



வரலாறு அபாயகரமானது. பிசாசாக உருமாறி மக்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைப்பது. நம் நாட்டின் வரலாறு என்னும் பெயரில் எழுதப்பட்டிருப்பது, பரப்பப்படுவது பெரும்பாலும் கடந்த காலத்தின் உண்மையான சித்தரிப்பு அல்ல.

எழுதுபவர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, அவர்களது குறுகிய சாதி, சமய, அரசியல் தேவைகளுக்கு ஏற்றவண்ணம் திரித்து, மறைத்து, கூட்டிக்கழித்து எழுதப்பட்டிருப்பது.
சமுதாயப் பொறுப்புணர்வு இல்லாமல், தங்கள் துவேஷங்களையே வண்ணக் கலவையாக்கி வரலாற்றைத் தீட்டியிருக்கிறார்கள் பல மேதாவிகள்.

‘நம் நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் இருவேறுபட்ட இனங்கள், வேறுபட்ட கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள்… அவர்களிடையே பாலமிட முடியாத பிளவுகள் காலங்காலமாக இருந்திருக்கின்றன…’ என்பவை போன்ற மதவாதக் கருத்துகள் இத்தகைய வக்கரித்த வரலாற்றின் வார்ப்புகள் தாம்.


ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நம் நாட்டின் வரலாறு சொல்லொணாச் சிதைவுக்கு
உள்ளாயிற்று. தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மக்களைப் பிரித்தாளும் ராஜதந்திரத்தின் அற்புதக் கருவியாக வரலாற்றை ஆங்கிலேயர் பயன்படுத்தினர்.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்தை வலியுறுத்த, அதற்கு முன்னர் முஸ்லிம்கள் ஆண்ட காலத்தை இருண்ட காலமாகச் சித்தரித்தனர்.

முஸ்லிம் மன்னர்களைக் கொடுங்கோலர்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும் மதவெறியர்கள் என்றும் இந்தியக் கலாச்சாரத்தைச் சீரழித்தவர்களென்றும் காட்டி, அவர்களது கொடிய ஆதிக்கத்திலிருந்து இந்துக்களை மீட்கவந்த ரட்சகர்களாகவும் கருணா மூர்த்திகளாகவும் தங்களைச் சித்தரித்துத் தங்கள் ஆதிக்கத்தை நியாயப்படுத்தினர்.

திட்டமிட்டு, நாசூக்காக வரலாற்றில் விஷத்தைக் கலந்தனர்.
இப்படி விஷமத்தில் பிறந்த வரலாறு, நம் நாட்டின் சில தலைவர்களுக்கும் மதவாதப் பிரச்சாரகர்களுக்கும் மிகச்சிறந்த கருவியாகப் பயன்பட்டது.

இன்று நம் நாட்டில் தலை விரித்தாடிக்கொண்டிருக்கும் மதத் துவேஷமும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் குடித்துள்ள மதக் கலவரங்களும் இத்தகைய வரலாற்றுத் தத்துவம் மக்களிடையே பரப்பப்பட்டதன் விபரீத விளைவுகள்தாம்.

முஸ்லிம் மன்னர்கள் மதவெறியின் காரணமாக ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்களை இடித்தார்கள் என்பது இன்று அனைத்து மக்களாலும் நம்பப்படும் ‘உண்மை’யாகிவிட்டது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அதைச் சரியான கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
பல முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோயில்களைக் கட்டியும் உள்ளனர்.

மகதராஷ்டிரத்தின் மராத்துவாடா இந்து, முஸ்லிம் கலாச்சாரங்கள் பெருமளவு ஒன்றாகக் கலந்த பகுதி. இப்பகுதியில் மிகப் பெரிய மதவெறியராகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஓளரங்கசீப் எண்பதுக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களைக் கட்டியுள்ளார். அவர் இப்பகுதியில் கட்டிய மசூதிகளை விடக் கோயில்கள் தான் அதிகம்.


ஓளரங்கசீப் சதாராவிலிருந்த இந்துக் கோயிலை இடித்தார் என்பது உண்மை. அதற்குக் காரணம் மதவெறியல்ல. அக்கோயிலில் பெருமளவு நிலைபெற்றிருந்த தேவதாசி முறைதான்  காரணம் என டாக்டர். பி.வி. ரானடே என்னும் வரலாற்று அறிஞர் குறிப்பிடுகிறார்.
ஜெய்னா என்னும் ஊரில் உள்ள கணபதி கோயிலுக்கு ஓளரங்கசீப் தானப் பத்திரம் எழுதி அளித்தார்.

புனே மாவட்டத்தில் சின்சுவாட் என்னும் இடத்தில் உள்ள கணபதி கோயிலை 16ஆம் நூற்றாண்டில் கட்டியவர் பிஜாப்பூர் சுல்தான் இப்ராஹிம் ஆதில்ஷா.
தௌலதாபாத்தில் உள்ள சரஸ்வதி பௌதி என்னும் புண்ணியக் கிணற்றை கி.பி.1335ஆம் ஆண்டு கட்டுவித்தவர் முகமது பின் துக்ளக். இதில் விடுவதற்கான தண்ணீரை  துக்ளக் பிரயாகையிலுள்ள திரிவேணி சங்கமத்திலிருந்து வருவித்தார்.

டெல்லி சுல்தானிய அரசை நிறுவிய முகமது கோரி வெளியிட்ட ஒரு நாணயத்தில் லக்ஷ்மி உருவமும் மற்றொன்றில் சிவனின் ரிஷப வாகனமும் பொறிக்கப்பட்டிருந்தன.
முஸ்லிம் மன்னர்கள் பலர் இந்துப் பெண்களை – குறிப்பாக ராஜபுதனத்து அரச குடும்பத்துப் பெண்களை – மணந்து கொண்டனர் என்பது நமது பள்ளிகளில் கூடக் கற்பிக்கும் வரலாற்றுப் பாடம்.

ஆகவே முஸ்லிம் மன்னர் பரம்பரையிலேயே இந்து ரத்தம் கலந்திருந்தது.
இதே போன்று இந்து மன்னர்களும் மசூதிகளை ஆதரித்தனர்.
சிவாஜியின் பேரன் சத்ரபதி ஷாஹூ குல்தாபாத்தில் இருக்கும் ஔரங்கசீபின் சமாதிக்குப் பெருமளவு தானம் அளித்தார் என்பதைப் பத்திரங்களின் ஆதாரத்துடன் ரானடே கூட்டிக்காட்டுகிறார்.

நாம் நினைவில் கொள்ள வேண்டியது இன்னொன்று.
கோயில்கள் இடிக்கப்பட்டதன் காரணம் மதவெறியல்ல. ஆக்கிரமிக்க முற்படும் மன்னர்கள், தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் எதிரியை அவமானப்படுத்தவும் எதிரிநாட்டின் முக்கிய ஸ்தலங்களை நாசப்படுத்துவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மன்னர்களின்

ஆளுமையை நிலைநாட்டும் முக்கியச் சின்னங்களாகக் கோயில்கள் திகழ்ந்தன.
ஆகவே தான் தங்கள் பெருமையைப் பறைசாற்ற அரசர்கள் கோயில்கள் கட்டினர். இதன் காரணமாகவே கோயில்கள் அந்நியத் தாக்குதல்களுக்கு முக்கிய இலக்குகளாயின. கோயில்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த செல்வத்தைக் கொள்ளையடிப்பதும் இதன் நோக்கம்.

இந்துக் கோயில்களை இடித்துத் தகர்த்த இந்து மன்னர்களும் உண்டு! எதிரி நாட்டு மசூதிகளை இடித்த முஸ்லிம் மன்னர்களும் உண்டு!

நம் நாட்டில் வரலாற்றுக்கான இலக்கணத்துடன் எழுதப்பட்ட முதல் வரலாற்று நூல் என்று கருதப்படுவது கல்ஹனா எழுதிய ராஜதரங்கிணி என்னும்  காஷ்மீரத்தின் வரலாறு.
அதில் ஹர்ஷர் என்ற இந்து மன்னர் காஷ்மீரத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் இருந்த எல்லாத் தெய்வச்சிலைகளையும் நொறுக்கி நாசம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த

மன்னரின் அமைச்சரவையில் சிலைகளை உடைப்பதற்காகவும் அவற்றை உருக்கி, விலையுயர்ந்த ஊலோகத்தைச் சேகரிப்பதற்காகவும் தனிப்பொறுப்பு வகித்த இந்து அமைச்சர் ‘தேவோத்பாதநாயகா’ (தெய்வத்திற்குத் துன்பம் விளைவிக்கும் அதிகாரி) எனப் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார் என்று புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் கோசாம்பி குறிப்பிடுகிறார்.
மற்றொரு வரலாற்று அறிஞர் ஆர்.எஸ்.சர்மா இன்னொரு உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார்.
கஜினி முகமது, கோரி முகமது, தைமூர் ஆகிய முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டின் மீது படையெடுத்து வந்து, அக்கிரமங்கள் புரிந்ததைப் பற்றிச் சொல்லும்போது, இதே மன்னர்கள் மத்திய ஆசியாவிலிருந்த முஸ்லிம் ராஜ்யங்களின் மேல் படையெடுத்துச் சென்று, அங்கிருந்த மசூதிகளை நாசம் செய்ததையும் அந்நாடுகளின் முஸ்லிம் மக்களுக்குச் சொல்லொணாத் துன்பங்களை விளைவித்ததையும் மறந்துவிடக் கூடாது எனக் கூறுகிறார்.

இதே போன்று, இந்து மன்னர்களால் அழிக்கப்பட்ட இந்துக் கோயில்கள், புத்த, ஜைனக் கோயில்கள், குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் கர்நாடகாவிலும் பல உண்டு. இவர்கள் எல்லோரையும் ஊக்குவித்தது மதவெறியல்ல. அதிகார, ஆக்கிரமிப்பு வெறியேயாகும். அரசியல் வரலாற்றின் இத்தகைய வேட்டைகளுக்கும் கொடுமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் மதச் சாயம் பூச முயல்வது மக்களைப் பிரித்தாளும் சில்லறைத்தனமாகும்.


நமது கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வரலாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்ட பாடமாகிவிட்டது. ஆனால் வரலாறு இன்றி எந்தச் சமுதாயமும் வாழ இயலாது. கல்வி நிறுவனங்கள் விஞ்ஞானரீதியான வரலாற்றைப் புறக்கணித்ததன் விளைவு மதவாதிகள் இன்று அதை ‘ஹைஜாக்’ செய்யும் நிலை உருவாகிவிட்டது.

Thursday, February 24, 2011

விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கவேண்டுமாம்; சொல்கிறார் காங்கிரஸ் பிரமுகர்!


இந்தியாவை பொருத்தமட்டில் விபச்சாரத்தின் மூலம் விளையும் 'எயிட்ஸ்' எனும் உயிர்க்கொல்லி நோயால் மரணிப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்துவரும் நிலையில், விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.பிரியாதத், 
 
''விபசாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும். இந்த தொழிலில் ஈடுபட்டு இருக்கும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களும் இந்த சமூகத்தில் ஒரு அங்கம்தான். எனவே அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்த, விபசாரத்தை சட்டபூர்வமாக்குவதே ஒரே வழி என்றும், விபசாரம் என்பது உலகில் பழமையான தொழில். இதில் ஈடுபடுவோருக்கு, இந்த நாட்டு மக்களுக்கு உரிய அனைத்து உரிமைகளும் இருக்கின்றன. எனவே அவர்களது நலனை பேண வேண்டியது அரசின் கடமை என்றும்  இவர் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.
 

விபச்சாரம் ஒரு தொழில் என்று சொல்லி, உண்மையான தொழிலாளர்களை இழிவுபடுத்துகிறார் இவர். சென்னை போன்ற பெருநகரங்களில், பார்வையிழந்த போதும் பிறரிடம் கையேந்தாமல். கவுரவமாக ரயில்களில் ஏறி இறங்கி பேனா விற்கும் அவர்களை குறித்தோ, குறைவான ஊதியத்திற்கு நாளெல்லாம் மாடாய் உழைக்கும் தொழிலாளிகள் குறித்தோ, இவர் கவலை கொள்ளவில்லை. மாறாக, இறைவன் தந்த அழகை வைத்து, ஆனை மயக்கி சம்பாதிப்பதோடு, உயிர்கொல்லி நோயை விதைக்கும் விபச்சாரம் செய்பவர்களைக் குறித்து கவலைகொள்கிறார். மேலும் இது பழமையான[?] தொழிலாம். எனவே சட்டபூர்வமாக்க வேண்டுமாம். திருட்டு- கொலை- கற்பழிப்பு போன்ற குற்றங்களும் பழமையானவைத்தான். இவைகளும் நாட்டில் தொன்று தொட்டு நடந்துதான் வருகின்றன. இவைகளையும் சட்டப்பூர்வமாக்கிவிடலாம் என்பாரா? இவரைப் போன்றவர்களை வைத்து கட்சி நடத்தும் காங்கிரஸ், இவரது கருத்தை அங்கீகரிக்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
 
 

Monday, February 7, 2011

நான் முஸ்லிம் என்பதால் என் வங்கிக் கணக்கை மூடிவிட்டனர்!


புதுடெல்லி,பிப்.6:தன்னுடைய ஏடிஎம் கார்டு ஏன் வேலை செய்யவில்லை? என்பதை அறிந்து வர வங்கிக்குச் சென்றார் வாலிபர் ஒருவர். அவமதிப்போடும் ஏச்சு பேச்சுகளோடும் திரும்பி வந்தார். காரணம்? அவர் ஒரு முஸ்லிம்!

18 வயதான காலித் அலீ அப்பாஸி, டெல்லியில் ஒரு கலைக் கல்லூரியில் சமூக அறிவியல் பாடம் படித்து வருகிறார். சிண்டிகேட் வங்கியின் யமுனா விஹார் கிளைக்கு தனது ஏடிஎம் கார்டு வேலை செய்யாததைப் பற்றி விசாரிக்கச் சென்றார். கிளை மேலாளர் மஹேஷ் சந்த் ஷர்மாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் காலித். மக்கள் குழுமியிருந்த அந்த இடத்தில் மதத்தைக் காரணம் காட்டி இவரைத் திட்டி அவமதித்திருக்கிறார் கிளை மேலாளர்.

கிளை மேலாளர் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துகளைக் கூறிவிட்டு அப்பாஸியின் வங்கிக் கணக்கை நிரந்தரமாகத் தடை செய்துவிட்டார்.
அவர் முரட்டுத்தனமாக, "உங்கள் முஸ்லிம்களுக்கு ஒன்றும் தெரியாது. நீங்கள் சட்டவிரோதமாக வணிகம் செய்து, பணத்தை வங்கிகளில் சேமிக்கிறீர்கள். இரு... உன் கணக்கை இப்போதே தடை செய்கிறேன்" என்று கத்தினார் மஹேஷ். பின்னர் பாதுகாவலரை அழைத்து காலிதை அப்புறப்படுத்த கட்டளையிட்டார்.

அவரும், "இங்கிருந்து வெளியே சென்றுவிடு முஸ்லிமே" என்று கூறினார். நான் செல்லாமல், "இது போல் செய்யக் கூடாது. எனக்கு என் கணக்கைப் பற்றித் தெரிந்துகொள்ள உரிமை இருக்கிறது" என்று கூறினேன். அதற்கு கிளை மேலாளர், "என் கணக்கை தடைசெய்து விடுவேன் என்று மிரட்டினார்" என்று அப்பாஸி கூறுகிறார்.

மேலாளரிடம் இதுபற்றிக் கேட்டபோது, "இந்தக் குற்றச்சாட்டு தவறானது, இட்டுக் கட்டப்பட்டது" என்று கூறினார்.

முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசியது குறித்துக் கேட்கப்பட்ட போது, "நான் படித்தவன், சமய சார்பற்றவன், பொது இடங்களில் இது போன்ற வார்த்தைகளை விடமாட்டேன்" என்று கூறினார்.

இதுக்குறித்து அப்பாஸி டெல்லி சிறுபான்மையினர் ஆணையத்திலும், இந்திய ரிசர்வ் வங்கியிலும் தனது புகாரைப் பதிவு செய்திருக்கிறார்.

source:ndtv

புஷ்க்கு எதிரான நடவடிக்கை!! சிறப்பாக செயல்படும் அமெரிக்க மனித உரிமை அமைப்புகள்!!


வாஷிங்டன் : குவான்டனாமோ சிறைக் கைதிகளைக் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் தான் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தால், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டார். "குவான்டனாமோ சிறையில் உள்ள, சில கைதிகளை சித்ரவதை செய்யும்படி சிறை அதிகாரிகளுக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உத்தரவிட்டார்' என்று அமெரிக்காவில் இயங்கி வரும் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.


இந்நிலையில், இம்மாதம் 12ம் தேதி சுவிட்சர்லாந்தில் நடக்க உள்ள, ஒரு ஆண்டு விழாவில் முக்கியப் பேச்சாளராக புஷ் கலந்து கொள்ள இருந்தார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், அவர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் அங்கு புஷ் வரும் போது அவரைக் கைது செய்யும் படி அமெரிக்க மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதனால் தான் கைது செய்யப்படுவோம் என்று அச்சம் கொண்ட புஷ், தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
 
 

Saturday, February 5, 2011

இங்கிலாந்தில் இஸ்லாமைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆண்டிற்கு 5000 பேர் மாறுகிறார்கள்

லண்டன்: கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஏராளமானோர் இஸ்லாம்
மதத்தை தழுவியுள்ளனர். ஆண்டுக்கு 5000 பேர் வீதம் இஸ்லாமு மாறி வருகின்றனராம்.

இங்கிலாந்தில் 14 ஆயிரம் முதல் 25,000 பேர் வரை இஸ்லாத்திற்கு வந்துள்ளனர்
என்று முந்தைய கணக்கெடுப்பில் தெரிய வந்தது. ஆனால் பெய்த் மேட்டர்ஸ் நடத்திய
ஆய்வு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 ஆயிரம் பேர் இஸ்லாம் மதத்தில் சேர்வதால் மதம்
மாறியவர்களின் எண்ணிக்கை 1 லட்சம் இருக்கும் என்று கூறுகிறது.

செப்டம்பர் 11 மற்றும் லண்டனில் ஜூலை 7ல் நடந்தத தாக்குதல்களால் இங்கிலாந்தில்
இஸ்லாமோபோபியா பரவியது. எனினும் இதனால் இஸ்லாமிற்கு வருபவர்களின் எண்ணிக்கை
குறையவில்லை.

மோடி குற்றவாளி - சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை!!!

புதுடெல்லி,பிப்.5:2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் அம்மாநில
முதல்வர் நரேந்திர மோடிக்கு தெளிவான பங்கிருப்பதாக உச்சநீதிமன்றத்தால்
நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது.

பாரபட்சமாக நடந்துக்கொண்டும், நடவடிக்கைகள் மேற்கொள்ளாமலும்,
பாதிக்கப்பட்டவர்களை புறக்கணித்தும் கலவரத்திற்கு உதவியதாக மோடி மீது
குற்றஞ்சாட்டி எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

[image: INDIAREACTS.jpg]

2010 ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி விசாரணையை பூர்த்திச் செய்து முத்திரை
வைக்கப்பட்ட உறையில் வைத்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி சமர்ப்பித்த அறிக்கையை
டெஹல்கா பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதிலும், வகுப்புவெறியை தூண்டிவிட்ட
பத்திரிகைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலும் மோடி தோல்வியடைந்தார் என
அவ்வறிக்கை கூறுகிறது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநிலத்தில்
சட்ட-ஒழுங்கு பிரச்சனை திருப்தியாக உள்ளதாக குஜராத் அரசு தவறான அறிக்கை
வெளியிட்டதையும் இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

மோடியை குற்றமற்றவராக்கி எஸ்.ஐ.டி அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக ஏற்கனவே
செய்திகள் வெளியாகியிருந்தன. மோடியின் மீதான நம்பிக்கையை தகர்ப்பதற்கான
முயற்சிகளுக்கு கிடைத்த பதிலடி இவ்வறிக்கை என அப்பொழுது அத்வானி உள்ளிட்ட
பா.ஜ.க தலைவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

பா.ஜ.கவின் எதிர்பார்ப்புகளுக்கு கடுமையான பதிலடி தரும்விதத்தில் முஸ்லிம்
இனப்படுகொலையில் மோடியின் பங்கைக் குறித்து எஸ்.ஐ.டியின் அறிக்கை விரிவாக
கூறுகிறது.

வகுப்புவாத சிந்தனையோடு செயல்பட்டார், உணர்ச்சியைத் தூண்டும் உரைகளை
நிகழ்த்தினார், முக்கியமான ஆதாரங்களை அழித்தார், சங்க்பரிவார உறுப்பினர்களை
அரசு தரப்பு வழக்கறிஞராக நியமித்தார், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை
மறுத்தார், இனப்படுகொலை நிகழும் வேளையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைகளில் சட்ட
விரோதமாக அமைச்சர்களை நியமித்தார். பாரபட்சமின்றி நடந்துக்கொண்ட அதிகாரிகளை
தொந்தரவுச் செய்தார் ஆகிய காரியங்களில் மோடி குற்றவாளி என எஸ்.ஐ.டியின் அறிக்கை
தெளிவுப்படுத்துகிறது.

அரசுத்துறைகள் ஒன்று செயலிழந்து போனது அல்லது கலவரத்தை மேலும்
கொளுந்துவிட்டெரியும் விதத்தில் செயல்பட்டது என அறிக்கை விரிவாக கூறுகிறது.

தீங்கு விளைவிக்கக்கூடிய, குற்றகரமான விமர்சனங்களை முஸ்லிம்களுக்கு எதிராக
தெரிவித்த மோடி உயர்ந்த பதவியிலிருந்துக் கொண்டு சிந்தனையற்ற பொறுப்பற்ற
முறையில் நடந்துக் கொண்டார் என எஸ்.ஐ.டியின் அறிக்கை கூறுகிறது.

*எஸ்.ஐ.டியின் அறிக்கையில் முக்கிய பகுதிகள்*:
1.குல்பர்க் சொசைட்டி, நரோடா பாட்டியா உள்பட மாநிலம் முழுவதும் முஸ்லிம்கள்
கொடூரமாக தாக்கப்பட்ட பொழுது யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல்வரும், அரசும்
நடந்துக்கொண்டது. எல்லா வினைகளுக்கும் எதிர்வினைகள் உண்டு என்று கூறி
முஸ்லிம்களுக்கெதிரான கலவரத்தை நியாயப்படுத்தினார் மோடி. கோத்ராவிலும், அதன்
சுற்று வட்டாரங்களிலும் குற்ற வாசனையுடையவர்கள் இருக்கின்றார்கள் என மோடி
குற்றஞ்சாட்டியது ஹிந்து-முஸ்லிம் பிரிவினரிடையே மேலும் உணர்ச்சியை
தூண்டிவிட்டது.

2.அசோக் பட், ஐ.கே.ஜடேஜா ஆகிய அமைச்சர்களை அஹமதாபாத் நகர போலீஸ் கட்டுப்பாட்டு
அறையிலும், மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலும் நியமித்தார். இனப்படுகொலை
நடைபெறும் பொழுது போலீஸ் நடவடிக்கைகளை இவர்கள் சீர்குலைத்ததற்கு காரணம் உள்துறை
அமைச்சகத்தின் பொறுப்பையும்
ஏற்றுக்கொண்டிருந்த மோடியின் ஆசீர்வாதத்தோடுதான். அசோக் பட் தொடர்ந்து
வி.ஹெச்.பி தலைவர்களுடன் தொடர்புக் கொண்டிருந்தார் என்பதை அவரது மொபைல் ஃபோன்
ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

3.இனப் படுகொலைகள் நடைபெறும் வேளையில் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்ட
நேர்மையான அதிகாரிகளை முக்கியத்துவம் இல்லாத துறைகளுக்கு மாற்றம் செய்தார்.
பா.ஜ.க தலைவர்களின் சொல்லுக்கு கீழ்படியாததால்தான் உள்துறை அமைச்சகத்தின் கீழ்
இந்த இடமாற்றங்கள் நடந்தேறின.

4.இனப்படுகொலை நடந்த வேளையில் பரிமாறப்பட்ட வயர்லெஸ் செய்திகள் அழிக்கப்பட்டன.
இக்காலக்கட்டத்தில் சட்டம் ஒழுங்கைக் குறித்து ஒரு ஆவணமும் மீதம் வைக்காமல்
அழிக்கப்பட்டன.

5.தலைநகரான அஹ்மதாபாத்தில் ஏராளமான முஸ்லிம்கள் கூட்டுப் படுகொலைச் செய்யப்பட்ட
பகுதிகளுக்கு செல்லாமல், ஒரேநாளில் 300 கி.மீ பயணம் செய்து ரெயில் எரிக்கப்பட்ட
கோத்ராவுக்கு சென்று பாரபட்சமாக நடந்துக் கொண்டார். இந்த செயலுக்கு மோடி எந்த
காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

6.வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ் தொடர்புடையவர்களை அரசுதரப்பு வழக்கறிஞர்களாக
நியமித்தார். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களெல்லாம் ஏதேனும் வகையில்
சங்க்பரிவார்களுடன் தொடர்புடையவர்கள்.

7.2002 பிப்ரவரி 28-ஆம் தேதி வி.ஹெச்.பி அறிவித்த சட்டவிரோத முழு அடைப்பினை
தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. முழு அடைப்பிற்கு பா.ஜ.க ஆதரவு
தெரிவித்தது.

8.பிப்ரவரி 28-ஆம் தேதி நரோடாவில் மதியம் 12 மணி தாண்டிய பிறகும், மேகானி
நகரில் மதியம் இரண்டு மணிவரையும் போலீஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை.
அப்பொழுது நிலைமை கைநழுவிப் போனது.

9.நரோடா, குல்பர்க் சொசைட்டி கூட்டுப் படுகொலைகளில் போலீஸ் ஆழமாக
விசாரிக்கவில்லை. வி.ஹெச்.பி, பா.ஜ.க தலைவர்களின் ஃபோன் ஆவணங்களை
பரிசோதிக்கவில்லை.

10.அமைச்சர்களான கோர்தான் ஸதாஃபியா, மாயாபென் கோட்னானி ஆகியோருக்கு எதிராக
தெளிவான ஆதாரங்கள் உள்ளன.

ரெய்டுகள் நடத்துவதற்கும், கைதுச் செய்வதற்கும் அதிகாரமில்லாததால் மோடி
உள்ளிட்டவர்களின் வாக்குமூலத்தை பதிவுச்செய்து, ஆவணங்களை பரிசோதித்தும் அறிக்கை
தயார் செய்ததாக எஸ்.ஐ.டி தெரிவித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Friday, February 4, 2011

உலமாக்களுக்கும், மோதினார்களுக்கும் இலவச சைக்கிள்-தமிழக அரசு முடிவு!

தமிழக அரசு சார்பாக, கோயில் பூசாரிகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு
இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. இதையொட்டி, பள்ளிவாசலில் பணிபுரியும் இமாம்
மற்றும் மோதினார்களுக்கு இதுபோன்று இலவச சைக்கிள் வழங்கவேண்டும்
என்ற கோரிக்கை முஸ்லிம்களால் வைக்கப்பட்டது. அதை நிறைவேற்ற தமிழக அரசு முடிவு
செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பில்,

''தமிழகத்தில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த உலமாக்களுக்கும், பள்ளிவாசல்களில்
பணிபுரியும் மோதினார்களுக்கும், தமிழக கோவில் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள்
வழங்கப்பட்டதை போல இலவச சைக்கிள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை
முதல்-அமைச்சர் கருணாநிதி ஏற்று உலமாக்களுக்கும், மோதினார்களுக்கும் இலவசமாக
சைக்கிள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பை வரவேற்கும் அதே நேரத்தில், உலமாக்களின் ஜீவாதார
கோரிக்கைகளை நலவாரியம் மூலம் நிறைவேற்றிட முதல்வர் கவனம் செலுத்தவேண்டும்.

முஸ்லிம் என்பதால் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்டேன் - அப்துல் கலீம்!!!

கொச்சி,பிப்.3:மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் தன்னை சிக்கவைத்தது
முஸ்லிம் என்ற ஒரேக் காரணத்திற்காகத்தான் என அவ்வழக்கில் சமீபத்தில் விடுதலையான
அப்துல் கலீம் தெரிவித்துள்ளார்.

கொச்சியில் ப்ரஸ் க்ளப்பில் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:


"கடந்த 2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடித்தவுடன் சிலமணி
நேரங்களுக்குள்ளாகவே போலீசார் என்னைத் தேடிவந்தனர். என்னைக் கைதுச் செய்தபிறகு
விசாரணை நடத்த போலீசாருக்கு விருப்பமில்லை. மாறாக, எப்படியாவது குண்டுவெடிப்பை
நடத்தியது நான் என்பதை ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டுமென்பதில் அவர் குறியாக
இருந்தனர்.

இதற்காக அவர்கள் என்னை கொடூரமாக சித்திரவதைக்கு ஆளாக்கினர். என்னை தனிமைச்
சிறையில் அடைத்தனர். ஐந்து அல்லது ஆறுதினங்கள் என்னை அவர்கள் நிர்வாணமாக
சிறையில் அடைத்தனர். எனது மர்மஸ்தானங்களிலும், தலையிலும் எலக்ட்ரிக் ஷாக்
கொடுத்தனர். 18 மாதம் நான் சிறையில் வாடினேன்.

பட்டப்படிப்பை தொடர்ந்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் அவர்கள் என்னைக் கைதுச்
செய்தனர். சிறையிலிருந்து நான் முதலில் விடுவிக்கப்பட்ட போதிலும் போலீசாரின்
கொடுமை தொடர்ந்தது. பின்னர் நான் மருத்துவம் படிப்பதற்கு மெரிட்டில் அட்மிஷன்
கிடைத்தது. ஆனால், என்னை பயங்கரவாதி என அழைத்து போலீஸ் அச்சுறுத்தியதைத்
தொடர்ந்து கல்லூரி அதிகாரிகள் என்னை மருத்துவம் படிக்க அனுமதிக்கவில்லை.

பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்ட எனது சகோதரர் காஜாவை நான் சந்திக்கப் போனபொழுது
என்னை போலீசார் டார்ச்சர் செய்தனர். சிறையில் எனது சகோதரனுக்கு மொபைல் போனை
கொண்டு கொடுத்ததாக கூறி அவர்கள் என்னை மீண்டும் சிறையிலடைத்தனர். எனது
உறவினர்கள் உள்பட பலரையும் பொய்வழக்கில் சிறையிலடைத்தனர்.

வாடகை வீட்டில்தான் நாங்கள் வசித்து வந்தோம். வழக்கில் என்னை குற்றவாளியாக
சேர்த்தபொழுது வீட்டை காலிச் செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஹைதராபாத் சஞ்சல்குண்டா சிறையிலிருக்கும் பொழுதுதான் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுவாமி
அஸிமானாந்தாவை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவர் மிகுந்த சிரமத்திற்கு
ஆளாகியிருந்தார். சக மனிதர்களிடம் நல்லமுறையில் நடந்துக்கொள்ள இஸ்லாம் கற்றுத்
தருகிறது. அதனடிப்படையில்தான் நான் அஸிமானந்தாவுடன் நடந்துக் கொண்டேன். மூன்று
தினங்கள் மட்டுமே எனக்கு அஸிமானந்தாவுடன் பழகுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
அவருடைய மனதை மாற்றியது நானல்ல. அல்லாஹ்தான் மாற்றினான்.

எவரும் தீவிரவாதிகளாக மாறுவதற்கு விரும்புவதில்லை. அவர்களை சமூகம்தான் அவ்வாறு
ஆக்குகிறது. உண்மையான பயங்கரவாதிகளை கைதுச் செய்வதற்கு பதிலாக முஸ்லிம்களை
கைதுச்செய்து பயங்கரவாதிகளாக மாற்ற போலீஸ் முயற்சி செய்கிறது.

நான் இனிமேல் எல்.எல்.பி(சட்டப்படிப்பு) படிப்பை தொடரப் போகிறேன். எனது
அனுபவத்தை உலகம் முழுவதும் அறிவிக்க விரும்புகிறேன்." இவ்வாறு அப்துல் கலீம்
தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Wednesday, February 2, 2011

எகிப்தின் மக்கள் புரட்சி ஒரு பாடமாகட்டும்!!!

எகிப்து ஒரு மக்கள் புரட்சியின் அருகாமையில் உள்ளது. 30 ஆண்டுகளாக தொடரும்
அடக்குமுறை ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர லட்சக்கணக்கான மக்கள்
அணிதிரண்டுள்ளனர். தலைநகரான கெய்ரோவில் மட்டுமின்றி எகிப்தின் பல நகரங்களிலும்
முபாரக்கின் ராஜினாமாவைக்கோரி மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத்
துவங்கிவிட்டனர்.

ராணுவத்தை களமிறக்கிய போதும் அவர்கள் மக்களுடன் இணைகின்றார்கள் என செய்திகள்
வெளிவருகின்றன. ஊரடங்கு உத்தரவு பலனற்று போனது. ஆளுங்கட்சியின் தலைமையகம்
தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.

போராட்டத்திற்கு தலைமையேற்க வந்த அல்பராதி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
இணையதளம் முடக்கப்பட்டது. அல்ஜஸீராவுக்கு தடை விதித்த பொழுதும் தொடர்ந்து
செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டுதான் இருக்கிறது.

பல செப்படி வித்தைகளும் பயனற்று போனதால் நகைச்சுவையான நடவடிக்கையொன்றை
மேற்கொண்டார் முபாரக். அது வேறொன்றுமில்லை, ரகசிய புலனாய்வு பிரிவின் முன்னாள்
தலைவரும், இஸ்ரேலுடனான கடத்தல் தொழிலுக்கு இடைத் தரகராகவும் செயல்பட்டுவந்த
வயது முதிர்ந்த உமர் சுலைமானை துணை அதிபராக நியமித்ததுதான்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு முறைகேடுகள் நிறைந்த தேர்தலை நடத்தி மீண்டும்
பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற அதிபராக எழுந்தருளினார் முபாரக். அவருடைய
'மக்கள் ஆதரவை!' உலகம் தற்பொழுது கண்டுக்கொண்டிருக்கிறது.

கெய்ரோவின் கட்டுப்பாடு முபாரக்கின் கைகளிலிருந்து நழுவிவிட்டது.

1979 ஆம் ஆண்டு ஈரான் புரட்சியுடன் தற்போதைய எகிப்திய மக்கள் திரள் போராட்டத்தை
அரசியல் நோக்கர்கள் ஒப்பிடுகின்றனர்.

1989-இல் ருமேனிய புரட்சியின் ஒரு பகுதியாக ரெவலூஷன் சதுக்கத்தில் திரண்ட
மக்கள் கூட்டத்திற்கு உதாரணமாக கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கம் காட்டப்படுகிறது.

வரலாறு மீண்டும் ஒருமுறை சர்வாதிகாரத்தை பழிவாங்க துவங்கிவிட்டது. 1981 ஆம்
ஆண்டு எகிப்து நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மது ஹுஸ்னி செய்யத்
முபாரக் அதி விரைவாக மக்களின் உள்ளங்களிலிருந்து அகன்றுவிட்டார். இதர
சர்வாதிகாரிகளைப் போலவே முபாரக், மக்களின் விருப்பங்களை அடக்கி ஒடுக்கி,
தேர்தல்களில் முறைகேடுகளை நடத்தி, ஊழலை வழக்கமாக்கி எகிப்தை சுரண்டி சின்னா
பின்னப்படுத்திக் கொண்டிருந்தார்.

ஏகாதிபாத்திய நாடுகளுடனும், சர்வாதிகார அரசுகளுடனும் இணைந்துகொண்டு பொருளாதார
நெருக்கடிகளை சமாளித்துக் கொண்டார்.

ஈரானின் ஷா, ருமேனியாவின் செஷஸ்க்யுவாவைப்போல் மக்களை அடக்கி ஒடுக்கி ஆட்சியில்
தொடரலாம் என கருதிய முபாரக்கின் ஆட்சிக்கு மக்கள் புரட்சியின் வடிவில் உருவான
ஆபத்து அவரை ஆதரித்த அந்நிய சக்திகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளுக்கு மத்தியில் அரபு நாடுகளிலேயே
இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி என்ற பதவியை ஹுஸ்னி முபாரக்கின் எகிப்திய
அரசு தக்கவைத்துக் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் 130 கோடி டாலரை அமெரிக்கா
எகிப்திற்கு உதவித் தொகையாக வழங்கிவருகிறது.

இஸ்ரேலுக்கு அடுத்து அமெரிக்கா வழங்கும் அதிக உதவித் தொகையைப் பெறுவது
எகிப்தாகும். ஆனால், இந்த உதவித் தொகைகள் அனைத்தும் அமெரிக்க கார்ப்பரேட்
நிறுவனங்களுக்குத்தான் செல்கிறது என்பது மற்றொரு உண்மையாகும்.

அடக்குமுறையையும், மக்கள் விரோதத்தையும் வழக்கமாகக் கொண்ட முபாரக் சில
தினங்களுக்கு முன்பாக எகிப்தில் மக்கள் திரள் போராட்டம் உருவாகும் வரை
அமெரிக்காவின் உற்றத் தோழனாகவே இருந்தார். கடுமையான மனித உரிமை மீறல்கள், கொடிய
சித்திரவதைகள், அடக்குமுறைகள் இவையெல்லாம் நிகழும்பொழுது முபாரக்கை
அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் ஆதரித்தே வந்தனர்.

எகிப்தில் நடைபெற்றுவரும் மக்கள் திரள் போராட்டத்தின் முன்னணியிலிருப்பது
இளைஞர்களாவர். எகிப்தின் எதிர்காலம் அவர்களின் கைகளில் செல்லும் வேளையில் அங்கு
மக்கள் விரும்பும் அரசியல் வெற்றியை சந்திக்கும்.

முபாரக்கினால் தடைச் செய்யப்பட்ட இஃவானுல் முஸ்லிமீன் இயக்கம் இந்த மக்கள்
திரள் போராட்டத்திற்கு பின்னணியிலிருந்து ஆதரவை தெரிவித்து வருகிறது என
செய்திகள் கூறுகின்றன.

முபாரக்கினால் சிறையிலடைக்கப்பட்டுள்ள இஃவான்களின் தலைவர்களும்,
உறுப்பினர்களும் இந்த மக்கள் திரள் போராட்டத்தினால் மகிழ்ச்சியில்
ஆழ்ந்துள்ளனர். அல்பராதியின் தலைமையில் புதிய அரசு உருவாக வாய்ப்புள்ளது.
ஆனால், அல்பராதி அமெரிக்க ஆதரவாளராக மாறிவிடுவாரோ என்றதொரு சந்தேகமும்
எழுந்துள்ளது.

எகிப்து நாட்டு மக்கள் சர்வாதிகாரத்திற்கெதிராக தங்களை அர்ப்பணித்து நடத்தும்
போராட்டம் வீணாகிவிடாமல் கவனமாக இருப்பார்கள் என நம்புவோம். இனி முபாரக்கிற்கு
எகிப்தில் இடமிருக்காது. கேவலமடைந்த குற்றவாளியாக முத்திரைக் குத்தப்பட்டு
முபாரக் களத்தை விட்டு வெளியேறும் வேளையில் உலகில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துக்
கொண்டு ஆட்டம்போடும் சர்வாதிகாரிகளுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையவேண்டும்.

ஜனநாயக நாடுகள் என்ற முகவரியில் இன்று உலகில் அறியப்படும் பெரும்பாலான
நாடுகளுக்கு எகிப்தின் மக்கள் புரட்சி ஒரு பாடமாக அமையவேண்டும். எந்த தேசம்
ஊழல்களிலும், முறைகேடுகளிலும் திளைக்கின்றதோ அந்த தேசம் மனித உரிமைகளையும்,
மக்களின் குடியுரிமைகளையும் அடக்கி ஒடுக்கி பின்னர் குற்றவாளி தேசமாக
பரிணமிக்கும்.

இன்று உலகின் பல ஜனநாயக முகமூடியை அணிந்துள்ள நாடுகளின் நிலைமையும் இதுதான்.
மக்களின் விருப்பங்களை விட ஏகாதிபத்திய சக்திகளுக்கும், கார்ப்பரேட்
சக்திகளுக்கும் விருப்பங்களை நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்தியவர் முபாரக்.
ஏராளமான மக்கள் நல ஆர்வலர்களையெல்லாம் சிறையிலடைத்து கொடுமைக்கு ஆளாக்கினார்.
விசாரணையில்லாமலேயே பல ஆண்டுகளாக சிறைவாசத்தை அனுபவிக்கின்றனர் பலர்.
நிரபராதிகளான மக்களை விசாரணை இல்லாமலேயே பல ஆண்டுகள் சிறையிலடைத்தவர்.
கறுப்புச் சட்டங்களைக் கொண்டுவந்து தனக்கு பிடிக்காதவர்களை ஒழித்துவிட அவர்
நினைத்தார்.இவையெல்லாம் சர்வாதிகார ஆட்சியாளர்கள் ஆளும் நாடுகளில் மட்டுமல்ல,
ஜனநாயக முகமூடியை அணிந்துக்கொண்டு ஆட்சி நடைபெறும் நாடுகளிலும் நாம் காண
இயலும்.

இது சற்று குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருக்கலாம். எகிப்து மக்கள் புரட்சியை
கவனத்தில்கொண்டு இந்நாடுகள் தங்களின் செயல்பாடுகளை மீளாய்வுச் செய்யவேண்டும்.
இந்தியா போன்ற உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில்கூட மனித உரிமை மீறல்களும்,
அப்பாவிகளை அநியாயமாக சிறையில் அடைப்பதும், ஏகாதிபத்திய அழிவு சக்திகள்,
கார்ப்பரேட் தரகு முதலாளிகளின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதும்
நடந்துவருகிறதா? என்பதை பரிசோதனைக்கு உட்படுத்த ஆட்சியாளர்கள் தயாராகவேண்டும்.

உதாரணமாக கூறவேண்டுமெனில், சமீபத்தில் ட்ரான்ஸ்ப்ரன்சி இண்டர்நேசனல் வெளியிட்ட
பரிசுத்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு கிடைத்தது 3.3 மதிப்பெண்கள்.
எகிப்திற்கு கிடைத்த மதிப்பெண் 3.1 ஆகும்.இதனை ஆட்சியாளர்கள் கவனத்தில்
கொள்ளவேண்டும்.

மக்களை அந்நியர்களாக மாற்றிவிட்டு ஆட்சியில் நீண்டகாலம் தொடரலாம் என எவரும்
கனவு காணவேண்டாம் என்பதைத்தான் எகிப்தின் மக்கள் புரட்சி நமக்கு உணர்த்துகிறது.

சுய பரிசோதனைக்கு உட்படுத்தி தவறுகளை திருத்துவதற்கு ஆட்சியாளர்கள்
தயாராகுவார்களா?

Tuesday, February 1, 2011

புரோகித் தலைமையிலான ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கிறிஸ்தவர்களையும் கொலைச் செய்துள்ளனர் - ராணுவ புலனாய்வு அறிக்கை

*புரோகித் தலைமையிலான ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் கிறிஸ்தவர்களையும் கொலைச்
செய்துள்ளனர் - ராணுவ புலனாய்வு அறிக்கை *
பாலைவனத் தூது
புதுடெல்லி,ஜன.31:முஸ்லிம்கள்
வாழும் பகுதிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதுடன் ஹிந்துத்துவா பயங்கரவாதி
புரோகித்தும் அவனது பயங்கரவாத குழுவினரும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில்
கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ராணுவ புலனாய்வு அறிக்கை
கூறுகிறது.

ஒரிஸ்ஸாவில் கண்டமால், வடக்கு கர்நாடகா மாநிலத்தில் சில பகுதிகள், புனே,
ஜபல்பூர், போபால் ஆகிய இடங்களில் கிறிஸ்தவர்கள் மற்றும் கிறிஸ்தவ மெஷினரிகள்
மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் புரோகித்திற்கு அவனது பயங்கரவாத கும்பலுக்கும்
தொடர்புள்ளது.

2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரிஸ்ஸாவில் இரண்டு கிறிஸ்தவர்களை கொலைச்
செய்ததில் புரோகித்தின் நெருங்கிய கூட்டாளியும் மலேகான் குண்டுவெடிப்பு
வழக்கில் குற்றவாளியுமான ஸமீர் குல்கர்னிக்கு பங்குண்டு என அவ்வறிக்கை
கூறுகிறது.

ராணுவம் நேரடியாக நடத்திய புலனாய்வு மட்டுமல்லாமல், புரோகித் மற்றும்
பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவல்களும்
அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

மஹாராஷ்ட்ரா மாநிலம் காண்டாலாவில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம்
தேதி மஹாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்புப் படையினருடன் இணைந்து ராணுவம்
புரோகித்திடம் விசாரணை மேற்கொண்டது.

2008 அக்டோபர் மாதம் தான் புரோகித்தை சந்தித்ததாகவும், மலேகானில்
குண்டுவெடிப்பை நடத்தியதாகவும், 2008 ஆகஸ்ட் மாதம் ஒரிஸ்ஸாவில் இரண்டு
கிறிஸ்தவர்களைக் கொலைச் செய்ததாகவும் பிரக்யாசிங் தாக்கூர் வாக்குமூலம்
அளித்துள்ளார்.

வடக்கு கர்நாடகாவில் கிறிஸ்தவ மையங்களுக்கு தீ வைத்ததையும் பிரக்யாசிங்
ஒப்புக்கொண்டுள்ளார். இவற்றையெல்லாம் புரோகித்தும் சம்மதித்ததாக அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது. ஸமீர் குல்கர்னி மூலமாகத்தான் கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குல்கர்னியை புரோகித் 'சாணக்கியன்' என அழைத்திருந்தார்.

தாக்குதல்களைக் குறித்து திட்டங்களை தீட்ட 2008 மார்ச் மாதம் தேசிய புலனாய்வு
ஏஜன்சியால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஹிந்துத்துவா
பயங்கரவாதிகள் சந்தீப் டாங்கேயும், ராம்ஜி கல்சங்கராவும் புரோகித்தின்
பஞ்ச்மஹரியிலுள்ள வீட்டில் வைத்து ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியதாக அறிக்கை
கூறுகிறது.

புனே,ஜபல்பூர்,போபால் ஆகிய இடங்களில் கிறிஸ்தவர்களுக்கெதிராக நடத்தப்பட்ட
தாக்குதல்களில் இவர்களின் பங்கினை குறித்து போலீஸ் அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்களுக்கு எதிராக தாக்குதலை நடத்துவதற்கு தனியாக ஒரு
இயக்கத்தை உருவாக்க புரோகித் திட்டம் தயாரித்துள்ளான்.

2007-08 காலக்கட்டங்களில் அஸிமானந்தா புனேயில் அனில் மகாஜனின் வீட்டில் வைத்து
நடத்திய ரகசிய கூட்டத்தில் புரோகித் பங்கேற்றுள்ளான்.

ஸ்ரீராம சேனாவின் பிரமோத் முத்தலிக், ஹிந்துஸ்தான் ராஷ்ட்ரிய சேனாவின் விலாஸ்
பவார், குஜராத்தைச் சார்ந்த பாரத் ரதேஷ்வர், ஆந்திரபிரதேசத்தைச் சார்ந்த
டாக்டர்.சீதாராமைய்யா, சுதாகர் சதுர்வேதி, அஜய் ராய்வார் ஆகியோர்
பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டங்கள் ஒன்றில் அஸிமானந்தா அபினவ் பாரத்தை இதர
இயக்கங்களுடன் இணைய முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும் அது வெற்றிப்பெறவில்லை என
ராணுவ புலனாய்வு அறிக்கை கூறுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்