பருப்பைப் பதுக்கி வைத்திருக்கும் கள்ள வியாபாரிகளைவிட, மாட்டுக் கறி உணவு அருந்துபவர்களைத்தான் மிகப் பெரும் கொடியவர்களாக, சமூக விரோதிகளாகச் சித்திரிக்கின்றன மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும். பருப்பைப் பதுக்கி வைத்த கள்ள வியாபாரிகளுக்கு உடனடி தண்டனை வழங்கப்பட்ட செய்தி எதுவும் இதுவரை நமக்குக் கிட்டவில்லை. ஆனால், பசு மாட்டிறைச்சியைச் சாப்பிட்டதாக பழிபோடப்பட்ட 50 வயதான முகம்மது அக்லக் செங்கற்களால் அடித்தே கொல்லப்படுகிறார்; பசு மாட்டினைக் கொன்றதாகப் பழி போடப்பட்ட 24 வயதான ஜாஹித் அகமது பட் உயிரோடு எரித்துக் கொல்லப்படுகிறார்; மாடுகளை இறைச்சிக்காகக் கடத்திச் செல்வதாகப் பழி போடப்பட்ட 28 வயதான நோமன் அக்தர் அடித்துக் கொல்லப்படுகிறார்.
உ.பி மாநிலம் தாத்ரி பகுதியிலுள்ள பிஸாரா கிராமத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் கைக்கூலிகளால் சதித்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்ட முகமது அக்லக்
ஜம்மு காஷ்மீரிலுள்ள உதம்பூரைச் சேர்ந்த ஜாஹித் அகமதும், உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த நோமன் அக்தரும் தமக்கு முன்பின் அறிமுகமில்லாத இந்து மதவெறிக் கும்பலால் கொல்லப்பட்டனர். ஆனால், உ.பி. மாநிலம், தாத்ரி பகுதியிலுள்ள பிஸாரா கிராமத்தைச் சேர்ந்த முகம்மது அக்லக், தனது சொந்த கிராமத்திலேயே, தனது வீட்டின் எதிரிலேயே, தனது மனைவி, தாய், மகள் ஆகியோரின் கண் முன்னாலேயே, அதே கிராமத்தைச் சேர்ந்த, அக்லக்கின் குடும்பத்தினருக்குத் தெரிந்த, அவர்களோடு பழகிவந்த ‘இந்து’க்களாலேயே அடித்துக் கொல்லப்படுகிறார். இந்த மதவெறி எந்த அளவிற்கு இரக்கமற்றது, கண்மூடித்தனமானது என்பதற்கு அக்லக்கின் படுகொலை இன்னொரு சான்று. அது மட்டுமின்றி, மேற்கு உ.பி.யை இந்து மதவெறியின் புதிய சோதனைச்சாலையாக ஆர்.எஸ்.எஸ். கும்பல் உருமாற்றியிருப்பதையும் அக்லக் படுகொலை எடுத்துக் காட்டுகிறது.



