Tuesday, May 31, 2011

மரியம் பிச்சை விபத்து வழக்கு-பிடிபட்ட லாரி டிரைவரிடம் தீவிர விசாரணை

சென்னை: தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை சாலை விபத்து வழக்கில், ஆந்திராவில் வைத்துப் பிடிபட்டுள்ள லாரி டிரைவர் ஷேக் ரகமதுல்லாவிடம் சிபிசிஐடி போலீஸார் சென்னையில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுச்சூழல் அமைச்சராக நியமிக்கப்பட்ட மரியம் பிச்சை, எம்.எல்.ஏ பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக திருச்சியிலிருந்து கார் மூலம் சென்னை புறப்பட்டார். வழியில் பாடாலூர் என்ற இடத்தில் அவரது கார் வந்தபோது கண்டெய்னர் லாரி ஒன்று அமைச்சரின் கார் மீது மோதியது. இதில் மரியம் பிச்சை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


வழக்கமாக இதுபோல விபத்துக்களில் சிக்கும் லாரிகளின் டிரைவர்கள், உடனடியாக லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விடுவார்கள் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்குப் போய் சரணடைவார்கள். ஆனால் இந்த விபத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக சம்பந்தப்பட்ட லாரி டிரைவர் லாரியுடன் தப்பி விட்டார்.

இதனால் இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கேள்விகள் எழுந்தன. இதையடுத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையில் லாரியின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட லாரி ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்ததாகும். அந்த லாரியை அன்றைய தினம் ஓட்டி வந்தவர் விஜயவாடாவைச் சேர்ந்த ஷேக் ரகமதுல்லா ஆவார்.

அன்றைய தினம் தூத்துக்குடியில் ஜிப்சம் ஏற்றிக் கொண்டு வந்தபோது பாடாலூர் அருகே அமைச்சரின்கார் மீது மோதி விட்டார் ரகமதுல்லா. பின்னர் அவர் நேராக விஜயவாடா விரைந்தார். அங்கு தனது உரிமையாளரிடம் லாரியை ஒப்படைத்து நடந்ததைக் கூறினார்.

இதையடுத்து ரகமதுல்லாவை அவரது வீட்டில் போய் இருக்குமாறு கூறிய அவரது உரி்மையாளர், லாரியுடன் மேற்கு வங்கம் சென்று ஜிப்சத்தை இறக்கினார்.

இந்த நிலையில் போலீஸாருக்கு தகவல் கிடைத்து அவர்கள் ரகமதுல்லாவை பிடித்தனர். தற்போது அவரை சென்னைக்குக் கொண்டு வந்து விட்டனர். இங்குள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் வைத்து அவரிடம் கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் மற்றும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


விசாரணைக்குப் பின்னர் விபத்து நடந்த இடத்திற்கு ரகமதுல்லாவை அழைத்துச் சென்று நேரில் விசாரணை நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் பிடிபட்டுள்ள லாரியும் தற்போது சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு வருகிறது. இதற்காக தனிப்படை போலீஸார் அங்கு விரைந்துள்ளனர்.


Wednesday, May 25, 2011

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .

1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு,
சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி:
94440 52530
3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை - 06
4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை - 06
5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை - 06
(ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)
6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம்
நெடுஞ்சாலை, சென்னை - 34
7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34
8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை - 02
9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி.
10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை
- 03
11. தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்க வெல்பர் டிரஸ்ட், டி - பிளாக் 10 ( 23
) 11 வது தெரு, அண்ணா நகர் - சென்னை 40 போன் 98400 80564
12. அஸ்மா காசிம் அறக்கட்டளை ,மாண்டியத் சாலை, எழும்பூர் - சென்னை – 08
13. ராஜகிரி பைத்துல்மால், கீழத் தெரு, ராஜகிரி - 614 207
14. டாம்கோ 807, - அண்ணா சாலை, 5 வது சாலை, சென்னை
15. ஹாஜி. அஹமது மீரான், Managing Director Professional Courier's
16. 7 மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை - சென்னை – 18
17. மியாசி, புதுக் கல்லூரி வளாகம், பீட்டர்ஸ் ரோடு சென்னை – 14
18. S I E T கே.பி. தாசன் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18

B.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு படிக்க

விருப்ப படிப்பாக மாறிவருகின்றது. தமிழகத்தில் 12 கல்லூரிகளில் மட்டும்தான்
இந்த படிப்பு உள்ளது. அதில் 2 கல்லூரிகள் (chennai New
College,Keelakarai Sathak,mohamed Sathak A,J Academy of arch,chennai)
முஸ்லீம்களால் நடத்த படுகின்றன. B.Arch படிப்பில் சேர அண்ணா பல்கலை
கழகம் வருட வருடம் கலந்தாய்வு (counseling) நடத்துகின்றது. அதற்க்கான
விண்ணப்பம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது, விண்ணப்ப படிவம் சென்னை
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் மட்டும்தான் கிடைக்கும். விண்ணப்பத்தை
பெறுவதற்க்கு NATA தேர்வில் தேர்சி பெற்று இருக்க வேண்டும். NATA தேர்வின்
முழுவிபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. NATA தேர்வின் மதிப்பெண் சான்றிதழுடன்
(Score card) சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்திற்க்கு சென்று
விண்ணப்பத்தை பெற வேண்டும்.

*B.Arch கலந்தாய்வு (counseling) முறை :* +2 தேர்வில் எடுத்த மொத்த
மதிப்பெண்ன்னையும், NATA தேர்வில் எடுத்த மதிப்பெண்ணையும் வைத்து கட் ஆப்
மதிப்பெண் கணக்கிட படுகின்றது. அதாவது +2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண்ணை 6
- ஆல் வகுத்துகொள்ள வேண்டும், அதனுடன் NATA தேர்வின் மதிப்பெண்ணை கூட்டினால்
வருவதுதான் B.Arch கட் ஆப் மதிப்பெண். இது 400 மதிப்பெண்ணுக்கு இருக்கும்.

உதாரணத்திற்க்கு ஒரு மாணவர் +2 தேர்வில் 1050 மதிப்பெண்னும், NATA தேர்வில் 130
மதிப்பெண்னும் எடுத்து இருந்தால், அவரின் கட் ஆப் மதிப்பெண் 305 ஆகும்.

இந்த கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை பட்டியல் (Rank list)
தயாரிக்கப்பட்டு மாணவர்கள் கலந்தாய்விற்க்கு (counseling) அழைக்கப்படுவார்கள்.
இந்த B.Arch கலந்தாய்வில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது.

*NATA (National Aptitude Test in Architecture)தேர்வு*

இது ஒரு கட்டிட நிர்மான கலை திறன் ஆய்வு தேர்வாகும். இதை எழுதுவதர்க்கு
தமிழகத்தில் 15 மையங்கள் உள்ளன. அங்கு சென்று NATA தேர்வு எழுத நாம் பதிவு
செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்து ஒருவாரம் அல்லது 10 நாளில் தேர்வு
எழுதலாம். தேர்வு கட்டணம் ரூ.800 . தேர்வு எழுதிய ஒரு நாளில் மதிப்பெண்
சான்றிதழ் (Score card)வழங்கப்படும். இந்த தேற்விற்க்கு தயாராவதற்க்கு
புத்தகங்கள் உள்ளன. இந்த தேர்வு எழுதுவதற்க்கு பயிற்சியும் அளிக்கப்படுகின்றது,
ஆனால் பயிற்சி கட்டணம் ரூ.6000 முதல் ரூ.8000 வரை இருக்கும்.

NATA தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. ஒன்று Online தேர்வு 100 மதிப்பெண்
கொண்டது, (Chose the best answer type) மற்றொன்று வரைதல் தேர்வு (Drawing
Test) 100 மதிப்பெண் கொண்டது. மொத்தம் 200 மதிப்பெண், இரண்டு தேர்விலும்
சேர்த்து குறைந்தது 80 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். 80 -க்கும் குறைவாக
மதிபெண் எடுத்தால் மீண்டும் இந்த தேர்வை எழுதலாம். ஆனால் அதிக பட்சமாக 3
முறைக்கு மேல் எழுத முடியாது. அதாவது மூன்று முறை NATA தேர்வு எழுதி 80
மதிப்பெண் எடுக்காவிடால் நடப்பு ஆண்டில் (Current year) B.Arch படிக்க
முடியாது. அடுத்த ஆண்டில் தேர்வு எழுதி படிக்கலாம். NATA தேர்வு எழுத
தமிழகதில் உள்ள 15 மையங்கள் மற்றும் NATA தேர்வு பற்றிய இதர விபரங்கள் இந்த
www.nata.in இணையதளத்தில் உள்ளன.

Saturday, May 21, 2011

வெந்தயம் தரும் வனப்பு

1.வெந்தயத்தை உணவாக, மருந்தாக, உடலுக்கு வனப்பு தரும் பொருளாக பயன்
படுத்தலாம். [1 வது வகை பொடி]ஒரு கரண்டி [100கிராம்] வெந்தயத்தை
வெறும் வாணலியில் வறுத்து [பொன் கலரில் பொரியும]. அதை ஆற வைத்து மிக்ஸியில் பொடி
செய்து, பொடி ஆறிய பின் பாட்டிலில் போட்டு வைத்து பயன் படுத்தவும். இது நீண்ட
நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

2. [2 வது வகை பொடி] கட்டி பெருங்காயத்தை சிறிய தட்டி கொண்டு,[50கிராம்]
100 கிராம்
வெந்தயத்தையும் போட்டு வறுத்தால் இரண்டும் நன்கு பொரிந்துவிடும்.

அதை மிக்ஸியில் பொடி செய்து ஆற வைத்து வேறு பாட்டிலில் போட்டு வைத்து
கொண்டால் பலவிதங்களில் நமக்கு பயன்படும்.
3. வயிறு உப்புசமாகவோ,பொருமலாகவோ இருந்தால் மோரில் இந்த [2வது] வகை பொடியை
1ஸ்பூன்+கொஞ்சம் உப்பு போட்டு கலந்து குடிக்க உடனே சரியாகும்.

4. தினமும் காலையில் [1வது] வகை பொடியை மோரிலோ, தண்ணீரிலோ கலந்து குடிக்க ப்ளட்
சுகர் கட்டுபாடாகும்.இதை வெறும் வயிற்றில்தான் குடிக்கனும்.

5. பேதி போகும்போது மோரில் [1வது] பொடியை 1 மணிக்கு ஒரு முறை 3 முறை குடித்தால்
பேதி நின்றுவிடும்.

6. முட்டு வலி இருப்பவர்கள் [சுகர் இல்லாதவர்கள்]1 ஸ்பூன் [1வது] வகை பொடி + சிறிய
வெல்ல கட்டி கலந்து உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.

7. சிலருக்கு் வெளியூர் செல்லும் சமயம்தான் அடிக்கடி பாத்ரூம் போக தோன்றும். அந்த
சமயம் [1 வது வகை] பொடியை 1/2 ஸ்பூன் 1/2 டம்ளர் நீரில் கலக்கி குடித்தால் வயிறு
கலாட்டா செய்யாது. கிளம்பும் சமயம் சிறிய டப்பாவில் இந்த பொடியை எடுத்து
செல்லவும்.

8. ப்ளட்சுகர்+ ப்ளட் பிரஷர் குறைய, முழு வெந்தயம்- ஸ்பூன்,பாசிபயறு- 2 ஸ்பூன்,
கோதுமை-2 ஸ்பூன், இவற்றை முதல்நாள் இரவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து அது ஊறும்
அளவு நீர் ஊற்றி, மறுநாள் காலை மிளகு-2, சிறிது கல் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து
மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் தோசை ஊற்றி
[நல்லெண்ணெய்]
காலை உணவாக சாப்பிட்டால் பி.பி, சுகர் நன்றாக குறையும்

9.வெந்தயத்தை கறுப்பாக வறுத்து காப்பிபொடியில் கலந்து காபி போட்டு் கொடுக்கலாம்.
சுகர் உள்ளவர்களுக்கு நல்லது.

10.வெந்தய கீரையை சுத்தம் செய்து நறுக்கி,மிளகாய்பொடி,மஞ்சள்பொடி,
பெருங்காயதூள்,உப்பு இவை எல்லாம் கொஞ்சம் கோதுமை மாவில் போட்டு கலந்து நீர்விட்டு
பிசைந்து சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம். இதற்கு தக்காளி சட்னி,
வெங்காயம்+ தயிர்
சேர்த்து சாப்பிட ருசி சூப்பர்.

11. எந்த வகை ஊறுகாய்க்கும் [2 வது வகை] பொடி சேர்க்கவும்.
12. 3 டம்ளர் இட்லி அரிசி, 1/2 டம்ளர் வெந்தயம் போட்டு ஊற வைத்து நன்கு ஊறிய பின்
நைசாக அரைத்து தோசை ஊற்றி சாப்பிட பொன் கலரில் இருக்கும். வாசனையாகவும்
இருக்கும்.உடலுக்கு நல்ல குளுமை.

13. 3 டம்ளர் புழுங்கல் அரிசியுடன்,1/2 டம்ளர் உளுந்ந்து, 1/2 டம்ளர் வெந்தயம்
இவற்றை ஊற வைத்து உப்பு சேர்த்துஅரைத்து அடுத்த நாள் இட்லி ஊற்றினால் நல்ல பூப்
போன்ற இட்லி தயார். இதற்கு எல்லா வித சட்னியும் சுவையாக இருக்கும். நோய்
வந்தவர்கள்
அடிக்கடி இந்த இட்லி சாப்பிட இழந்த ஆரோக்கியம் பெறலாம். எப்போதுமே இட்லிக்கு ஊற
வைக்கும்போது 2- ஸ்பூன் வெந்தயம் ஊற வைப்பது நல்லது.

14. தினமும் காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் [வெந்தயம் + கொழுந்தாக
இருக்கும்
கறிவேப்பிலையை தயிரில்+ துளி கல் உப்பு கலந்து ]ஊற வைத்து சாப்பிட தோலில்
மினுமினுப்பு வரும். தலையில் முடி கொட்டாது.

15.மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு,
வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

16.வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில்
இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.

17.ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான
பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்

18.பெண்களுக்கு முடியழகுதான் முதன்மையானது. முடி கொட்டாமல் செழித்து வளரவும்,
தலைக்கு குளுமையளிக்கவும் வெந்தயத்தை சீயாக்காயோடு சேர்த்து அரைத்து வைத்துக்
கொண்டு தலைக்குக் குளித்து வருவது கைமேல் பலந்தரும்

19.அளவுக்கு மிஞ்சி நிறைய முடி உதிர்ந்து என்ன செய்வது என்று கவலைப்
படுபவர்களுக்கு
உதவுவதும் வெந்தயம்தான். வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போன்று
அரைத்து தலையில் தேய்த்து வைத்து அரைமணிநேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். ஓரிரு
முறையிலேயே உடனடி பலனை எதிர்பாராமல் தொடர்ந்து சில மாதங்களுக்கு வாரம் ஓரிரு முறை
வீதம் பின்பற்றவேண்டும்.

20.பருவ வயதில் முகத்தில் நிறைய பருக்கள் வந்து தாங்கமுடியாத எரிச்சலிருந்தால்
வெந்தயத்தை அரைத்து அப்பேஸ்ட்டை அப்பி வைத்து வந்தால் எரிச்சல் அடங்குவதோடு
பருக்களும் காணாமல் போய்விடும். பருவ வயது தாண்டிய பிறகு உடல்
உஷ்ணத்தால் பருக்கள்
வந்தால் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கப் தயிரில் ஊறவைத்து குறைந்தது மூன்று
நான்கு நாட்களுக்காவது அதிகாலையில் எழுந்ததும் குடித்து வரவேண்டும்.

Monday, May 16, 2011

அல்-காய்தா, தாலிபான் உருவாக்கமும்: ஒரு சுருக்கமான வரலாறு!

சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளாயிருந்த மத்திய ஆசிய நாடுகள்
மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் நிலங்களின் அடியில் அள்ள அள்ளக் குறையாத
இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. உஸ்பெகிஸ்தானில் கொட்டிக் கிடக்கும்
தங்கம், தஜிகிஸ்தானில் புதைந்து கிடக்கும் ஏராளமான வெள்ளி, கஜாக்கிஸ்தானின்
யுரேனிய இருப்பு ஆகிவற்றைக் கடந்து, இந்நாடுகளின் நிலத்தினடியில் ஏராளமான
இயற்கை எரிவாயு ரிசர்வும் உள்ளது. கஜாக்ஸ்தான், துர்க்மெனிஸ்தான், அசர்பெய்ஜான்
ஆகிய நாடுகளில் மட்டும் சுமார் 6.6 டிரில்லியன் கன மீட்டர் எரிவாயு
நிலத்தினடியில் இருக்கிறது.

கிழக்கிலும் தெற்கிலும் பாகிஸ்தான், மேற்கே ஈரான், வடமேற்கே துர்க்மெனிஸ்தான்,
வடக்கே உஸ்பெக்கிஸ்தான் மற்றும் தாஜிகிஸ்தான், வட கிழக்கே சீனாவின் ஜின்சியாங்
மாநிலம் ஆகியவற்றைத் தன் எல்லைகளாகக் கொண்டிருக்கும் ஆப்கான் போர்தந்திர
ரீதியில் ஒரு புவியியல் கேந்திரமான இடத்தில் அமைந்துள்ளது. மத்திய ஆசியாவின்
எரிவாயுவை ஐரோப்பியச் சந்தைக்குக் கடத்திச் செல்ல வேண்டுமானால் ஒன்று ஈரான்
வழியே கொண்டு சென்றாக வேண்டும் அல்லது ஜார்ஜியா வழியே கொண்டு சென்றாக வேண்டும்.


ஈரான் அமெரிக்காவுக்குப் படியாத நாடு என்பதைக் கடந்து, ஈரான் வழியே துருக்கியை
குழாய் மூலம் இணைப்பது என்பது துருக்கிக்கும் ஈரானுக்கும் பொருளாதாரத்தின்
அடிப்படையில் வலுவானதொரு நட்புறவு தோன்றி விட அடிப்படையாய் அமைந்து விடும்.
ஈரானைத் தனிமைப்படுத்துவதைத் தனது அடிப்படையான மத்தியகிழக்குக் கொள்கையாகக்
கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்த
கதையாகி விடும்.

ஜார்ஜியா வழியே குழாய் அமைக்கலாம் என்றால் அங்கே ஆயுந்தாங்கிய மாஃபியா
கும்பலின் தொல்லை. அதுவுமின்றி ஜார்ஜியாவின் தெற்கு எல்லைப் பிராந்தியமான
ஒஸ்ஸேடியாவை ரசியா சொந்தம் கொண்டாடுகிறது. இவ்விரு நாடுகளுக்குள்ளும் இருக்கும்
எல்லைத் தகறாரின் காரணமாக ரசியா அவ்வப்போது ஜார்ஜியாவின் மேல் ராணுவத்
தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. ஜார்ஜியாவை நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில்
இணைப்பதையும் ரசியா எதிர்த்து வருகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் ரசியாவுக்கும்
ஜார்ஜியாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சினையாகத் தோற்றமளித்தாலும்,
ஜார்ஜியாவின் ஊடாக மேற்கு நாடுகள் எண்ணைக் குழாய் அமைத்து விடக் கூடாது
என்பதில் ரசியா குறிப்பாக இருப்பது புரியும்.


இவ்விரு பாதைகளும் அடைபட்டதும் அமெரிக்காவின் முன் இருக்கும் எஞ்சிய வாய்ப்பு
ஆப்கான் – பாகிஸ்தான் – அரபிக்கடல் என்கிற குழாய்ப் பாதை தான். மேலும் இது
மேலே சொல்லப்பட்ட இரண்டு பாதைகளையும் விட குறைந்த செலவு பிடிக்கக் கூடியது.
அரபிக்கடலில் இருந்து ஐரோப்பியச் சந்தைக்கும் இந்தியச் சந்தைக்கும் கப்பல்
மூலம் எண்ணையை ஏற்றுமதி செய்வது சுலபம். இறுதியாக அமெரிக்காவின்
போட்டியாளர்களாக உருவெடுத்து வரும் ரசியா, சீனா இரண்டு நாடுகளையும்
கண்காணிப்பதற்கும், பயமுறுத்துவதற்கும், தேவையான இராணுவத் தளங்களை ஆப்கானில்
வைத்திருப்பதும் முக்கியமானது.

ஆப்கானின் புவியியல் கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்திருந்ததால் தான்
பனிப்போர் காலத்திலேயே சமூக ஏகாதிபத்தியமாய் சீரழிந்திருந்த சோவியத்திற்கும்
அமெரிக்காவுக்கும் இடையே ஆப்கானைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இந்தப்
போட்டியில் எழுபதுகளின் இறுதியில் ரசியாவின் கை ஓங்கியிருந்தது. அப்போது
அங்கிருந்து ரசியாவை விரட்ட அமெரிக்கா பெற்றெடுத்த சொந்தப் பிள்ளைகள் தான்
தாலிபானும் அல்-காய்தாவும்.

நாத்திகர்களான கம்யூனிஸ்ட்டுகளை இசுலாமிய மண்ணான ஆப்கானில் இருந்து
விரட்டுவதற்காகப் பல்வேறு இசுலாமிய நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட
ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பாகிஸ்தானில் குவித்தது அமெரிக்க உளவுத்துறையான
சி.ஐ.ஏ. அங்குள்ள மதரஸாக்களில் வைத்து அவர்களுக்கு சித்தாந்தப் பயிற்சியும்
ஆயுதப் பயிற்சியும் அளித்தது பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. இதற்கு
தேவையான நிதி உதவியை அமெரிக்க அடிமைகளான சவுதி ஷேக்குகள் அளித்தனர்.
இப்படியாகத் தான் அரபு நாடுகளில் கட்டுமானத் தொழிலின் மூலம் பெரும் செல்வம்
ஈட்டி சவூதி அரச குடும்பத்துக்கு நிகரான பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒசாமா
பின்லேடன் ஆப்கான் வந்திறங்கினார்.

பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒசாமாவே சுகவாழ்க்கையை விடுத்து நாத்திகர்களை
எதிர்த்து ஜிஹாத்தில் குதித்துள்ளார் என்கிற பிரச்சாரம் ஏழை முசுலீம்களிடம்
சிறப்பாக எடுபடும் என்பது அமெரிக்காவின் கணக்கு. அமெரிக்காவின் அந்தக் கணக்கு
தப்பவில்லை; ஆனால், அவர்கள் கணக்குப் பண்ணிப் பார்க்க வேண்டும் எண்ணியிராத
எதிர்பாராத ஒரு இலக்கிலிருந்து தான் அடுத்த தாக்குதல் இறங்கியது. கம்யூனிச
'அபாயத்தைக்' களையும் நோக்கத்திற்காகப் அமெரிக்கா பெற்றுப் போட்ட தாலிபானும்,
அல்-காய்தாவும் தமது பிறவி நோக்கத்தை செவ்வனே நிறைவேற்றினர். எண்பதுகளின்
இறுதியில் சோவியத் படைகள் ஆப்கானில் இருந்து பின்வாங்கின.


அல்-காய்தாவுக்கும் ஆப்கான் போரில் பங்கேற்க முஜாஹிதீன்களைத் திரட்டவும்
இசுலாமிய நாடுகளின் இளைஞர்களிடையே ஒரு பிரச்சார முழக்கமாக அமெரிக்கா
முன்வைத்திருந்த சித்தாந்தமான இசுலாமிய சர்வதேசியம் பூமராங் போல் திருப்பித்
தாக்கும் சந்தர்பமும் உடனடியாக வந்து சேர்ந்தது அமெரிக்காவே எதிர்பார்த்திராத
ஒரு சுவாரசியமான திருப்பம். ஆப்கான் போர் முடிந்து சவூதி திரும்பிய பின்லேடனை
ஈராக்கின் குவைத் ஆக்கிரமிப்பு எதிர்கொள்கிறது.

இவ்விவகாரத்தில் அமெரிக்கத் தலையீட்டை பின்லேடன் எதிர்க்கிறார். ஈராக்கை தனது
அல் காய்தாவையும் முஜாஹித்தீன்களையும் வைத்தே எதிர்கொள்ளலாம் என்கிற
பின்லேடனின் விருப்பம் நிராகரிக்கப்படுகிறது. மேலும் சவூதி அரசின் அமெரிக்க
விசுவாசமும் சவூதியில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகளும், வரலாற்று
ரீதியிலான யூத இசுலாமிய முரண்பாடுகளின் பின்னணியில் பின்லேடனுக்கு இருந்த
இசுரேல் எதிர்ப்பும், அதற்கு எண்ணை வார்க்கும் இசுரேலின் பிராந்திய
ரவுடித்தனமும், அந்த ரவுடித்தனத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கும்
அமெரிக்காவின் தாதாத்தனமும் பின்லேடனுக்குள் ஆழமான அமெரிக்க எதிர்ப்புணர்வை
உண்டாக்குகிறது. இது பின்லேடனுக்குள் மட்டுமல்ல மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க
அடிமை ஆட்சியாளர்களைத் தவிர்த்த இசுலாமிய மக்கள் அனைவருக்குள்ளும் உருவாகிறது.

என்னதான் அமெரிக்கத் தயாரிப்பாக இருந்தாலும் – அமெரிக்கப் பாடதிட்டமான
இசுலாமிய சர்வதேசியத்தைப் பயின்றிருந்தாலும் பின்லேடன் அதை உணர்வுப்பூர்வமாக
பற்றி நின்றிருக்கிறார். இங்கே பின்லேடனிடம் வெளிப்படும் அமெரிக்க
எதிர்ப்புணர்வும் பொதுவில் உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்டுகள் மற்றும் ஜனநாயக
சக்திகளிடம் வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வும் அடிப்படையிலேயே வேறு
வேறானது.


பின்லேடனிடமோ தாலிபானிடமோ வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வு என்பது மக்கள்
விடுதலை உரிமை என்கிற அடித்தளத்தின் மீது கட்டப்பட்டதல்ல – அது அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் இடத்தில் இசுலாமை மாற்றீடு செய்ய வேண்டும் – இழந்த தமது
மேண்மையை மீட்க வேண்டும் என்கிற நோக்கத்தின் மீது கட்டப்பட்டது. அரபுலகில்
மக்களது ஜனநாயகம் தழைக்க வேண்டுமென்பது அல் காய்தாவின் கோரிக்கையல்ல.
அங்கிருக்கும் ஆட்சியாளர்களைத் துறத்திவிட்டு தூய இசுலாமிய சர்வாதிகாரத்தை
நிறுவுவதுதான் அவர்களது நோக்கம்.

அதன் பின் 1996-ல் ஆப்கான் திரும்பும் ஒசாமா, தாலிபான்களின் பராமரிப்பில் தனது
அமெரிக்க எதிர்ப்புப் போருக்கு ஆயத்தமாகிறார். தாலிபானின் பச்சையான மனித உரிமை
மீறல்கள் மற்றும் காட்டுமிராண்டித் தனமான சட்டங்களின் காரணமாக அமெரிக்காவால்
ஆப்கான் அரசை வெளிப்படையாக அங்கீகரிக்க முடியா விட்டாலும் அமெரிக்க
அடிவருடிகளான பாகிஸ்தானும் சவூதியும் ஆப்கானை அங்கீகரித்திருந்தன. இவர்கள்
மூலம் அமெரிக்கா ஆப்கானுடன் தொடர்புகளைப் பேணிக் கொண்டிருந்தது. எண்ணை
ஒப்பந்தங்களுக்காக தாலிபான்களின் பிரதிநிதிகள் அமெரிக்காவுக்கும் சென்றுள்ளனர்.

வெளிப்படையான அமெரிக்க எதிர்ப்பு மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பின்லேடனின்
போரை ஆரம்பத்தில் தாலிபான்கள் தங்கள் சொந்தப் பிரச்சினையாகக் கருதவில்லை.
முல்லா ஓமர் 98-ன் மத்தி வரையில் பின்லேடனின் இந்த முடிவை எதிர்த்துள்ளதாக அவரை
மூன்று முறை பேட்டி கண்ட பாக்கிஸ்தான் பத்திரிகையாளர் ரஹிமுல்லாஹ் யூஸுஃப்ஸாய்
தெரிவிக்கிறார். ஆனால் இந்த முரண்பாடு ஓரளவுக்கு மேல் நீடிக்க முடியவில்லை.


தூய இசுலாமிய அடிப்படைவாதத்தின் மேல் கட்டப்பட்ட தாலிபான்களும் அவர்களின்
முஜாஹித்தீன்களும் ஓரளவுக்கு மேல் அமெரிக்காவோடு உறவாடுவது அவர்களின்
அடிப்படையையே அசைத்து விடக்கூடிய அபாயம் கொண்ட விளையாட்டு. தொண்ணூறுகளின்
இறுதிப் பகுதியில் ஆப்கானில் இருந்தவாறே பின்லேடன் அமெரிக்கத் தூதரகங்களின்
மேல் தொடுத்த தாக்குதல்களை தாலிபான்கள் தடுக்கவில்லை. பின்லேடனின் சர்வதேசிய
இசுலாமிய முன்னணியின் செயல்பாட்டையும் முடக்கவில்லை.


இது ஆப்கானை எளிதில் மேய்ந்து விட்டுப் போய்விடலாம் – அதைத் தொடர்ந்து மத்திய
ஆசிய எண்ணை வயல்களை சுலபத்தில் வளைத்துப் போட்டு விடலாம் – என்றெல்லாம்
நாக்கில் எச்சில் ஊற கணக்குப் போட்டுக் காத்திருந்த அமெரிக்காவுக்கு
ஆத்திரத்தைக் கிளப்புகிறது. தொண்ணூறுகளின் இறுதியிலிருந்தே ஆப்கானைத் தாக்கிக்
கைப்பற்ற அமெரிக்கா தருணம் பார்த்துக் காத்துக் கிடந்த நிலையில் தான் இரட்டை
கோபுரத் தகர்ப்பு நடக்கிறது.

உலக வரலாற்றில் மிகவும் ஆச்சரியப்படவைக்கும் இந்தத் தாக்குதலை அல் காய்தா
நிறைவேற்றியதாக சொல்லப்படுகிறது. அதே நேரம் இந்த தாக்குதல் நடப்பதை அமெரிக்க
அறிந்து தனது அரசியல் நோக்கத்திற்காக வேண்டுமென்றே நடக்க அனுமதித்தது
என்றெல்லாம் கூட சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ* இந்த தாக்குதலை வைத்து
அமெரிக்கா அறுவடை செய்த அரசியல் நடவடிக்கைகள்தான் நம்மைப் பொறுத்த வரை
முக்கியமானது.*


ஆப்கானின் மேலான அமெரிக்க நிலைப்பாடு பற்றியெறியத் தயாரான நிலையில் இருந்த
காய்ந்து போன வைக்கோல் போர் என்றால், இரட்டை கோபுரத் தகர்ப்பு என்பது அதன் மீது
விழுந்த சிறு பொறி. அதன் பின் அமெரிக்கா தீவிரவாதத்திற்கு எதிரான தனது போரைத்
துவக்குகிறது. அதுவரை தானே தனது நலனுக்காக ஊட்டி வளர்த்த இசுலாமிய
சர்வதேசியத்தையும் முஜாஹிதீன்களையும் இப்போது புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனது
நலனுக்காகவே வில்லனாகச் சித்தரிக்கத் துவங்கியது அமெரிக்கா. இப்படித்தான்
விடுதலைப் போராளிகள், பயங்கரவாதிகளாக மறு நாமகர்ணம் சூட்டப்பட்டார்கள்.

தீவிரவாத ஒழிப்பு என்கிற பெயரில் முதலில் ஆப்கான் மேலும் அதைத் தொடர்ந்து ஈராக்
மேலும் குண்டுகளைப் பொழிந்ததும், அவற்றைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில்
கொண்டு வந்ததையும், அப்போரில் அநியாயமாய்க் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான
அப்பாவிகள் பற்றியும் நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்க மாட்டீர்கள் –
ஆனால், இதில் நீங்கள் கேள்விப்படாத இன்னொரு அம்சமும் இருக்கிறது. ஆப்கான்
போருக்காக மட்டும் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை
அமெரிக்கா செலவிட்டு வருகிறது. இன்றைய நிலையில் ஈராக் மற்றும் ஆப்கான்
போர்களுக்காக சுமார் 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.


அமெரிக்கர்களின் வரிப்பணத்திலிருந்து செலவிடப்படும் இத்தொகையானது ஆயுதக்
கம்பெனி முதலாளிகளும், கட்டுமானக் கம்பெனி முதலாளிகளுக்கும், எண்ணைக்
கம்பெனிகளுக்கும் தான் பாய்ச்சப்படுகின்றன. இது இந்தப் போரின் பொருளாதார முகம்
என்றால், இந்தப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிறுவியுள்ளது அதன் இராணுவ
முகம்.

ஆக, இசுலாமிய தீவிரவாதம் என்கிற வளர்த்த கடா அமெரிக்கா விரும்பிய திசையில்
பாய்ந்த போதும் சரி – திரும்பி அமெரிக்காவின் மார்பிலேயே பாய்ந்த போதும் சரி;
அதன் பலன்கள் என்னவோ அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அதன் ஆன்மாவாக
இருக்கும் அமெரிக்க முதலாளிகளுக்கும் தான்.


இந்தப் போரின் ஒரு இடைக்கட்டமாக இப்போது ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக
அமெரிக்கா அறிவித்திருந்தாலும், அந்த வாக்கியத்தின் இறுதிப் பகுதியான
'தீவிரவாதத்திற்கு எதிரான போர் இன்னமும் ஓயவில்லை' என்பதே நமது அக்கறைக்கும்
கவனத்திற்கும் உரியதாகும். கடந்த பத்தாண்டுகளாக போதுமான அளவிற்கு ஒசாமா
பின்லேடன் என்கிற பூச்சாண்டியைக் காட்டிக் காட்டியே அமெரிக்கர்களிடம் பயபீதியை
உண்டாக்கி ஒரு பொதுக்கருத்தை கட்டமைத்து போர் நடத்தியாகிவிட்டது. இப்போது
எதார்த்தம் சாமானிய அமெரிக்கர்களைச் சுடும் நேரம் வந்து விட்டது.

இனிமேலும் இந்தப் பூச்சாண்டியைக் காட்டி கிளைமேக்சே இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும்
அமெரிக்க பட்ஜெட்டிலும் மக்கள் நலத்திட்டங்களைச் சுருக்கி நூற்றுக்கணக்கான
பில்லியன் டாலர்களை முதலாளிகளுக்குப் படையலிட்டுக் கொண்டிருக்க முடியாது.
அதவாது மக்கள் தொட்டறியத்தக்க ஒரு வெற்றி வேண்டும். ஆக, அமெரிக்கா நடத்தி வரும்
மெகா சீரியலில் இப்போதைக்கு ஒரு வில்லனைக் காவு கொடுத்து நேயர்களை கொஞ்சம்
மகிழ்ச்சிப் படுத்தியாக வேண்டிய தருணம் வந்துள்ளது – ஒசாமா வதமும்
நிகழ்ந்துள்ளது.


பின்லேடன் கொல்லப்பட்டதை அறிவித்த பராக் ஒபாமா, அந்த வாக்கியத்தின் இறுதியிலேயே
போர் இன்னமும் முடியவில்லை என்பதைத் தெளிவாக அறிவித்திருக்கிறார். இனிமேல்
வெறுமனே தீவிரவாதத்தை மட்டுமே எதிர்த்துப் போர் புரிந்து கொண்டிருப்பது என்பது
சராசரி அமெரிக்கர்களின் பொதுக்கருத்தைத் திரட்டுவதற்குப் போதுமான அளவுக்குப்
பயனளிக்காது. எனவே, தீமையை அழித்த நன்மையானது அடுத்து தனது நிலையை
ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டுமல்லவா? எனவே எங்கெல்லாம் நன்மை போதுமான
அளவுக்கு இல்லையோ அங்கெல்லாம் அமெரிக்க ஏவுகணைகள் நன்மையின் நற்செய்தியைச்
சுமந்து செல்கின்றன. லிபியாவிலும், சிரியாவிலும் அமெரிக்கத் தலையீடுகள்
இப்படித்தான் நியாயப்படுத்தப்படுகின்றன – அதாவது 'மனிதாபிமான அடிப்படையிலான'
தலையீடு.


சீரியலின் ஒரு எபிசோடில் இருந்து அடுத்த எபிசோடுக்குச் செல்லும் முன் ஒரு சுப
முடிவு தேவை – அந்த சுப முடிவு தான் தீமையின் வடிவமான ஒசாமா பின்லேடனின் கொலை.
இதில் ஒசாமா இப்போது செத்தாரா முன்பே செத்தாரா என்பதற்குள் நாம் விரிவாக ஆராயத்
தேவையில்லை. இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின் கடந்த பத்தாண்டுகளில் ஒசாமா
பின்லேடன் என்கிற பெயர் அமெரிக்காவுக்கு அள்ளிக் கொடுத்தது என்னவென்பதும்
இப்போது கொல்லப்பட்ட பின் அள்ளிக் கொடுக்கப்போவது என்னவென்பதும் தான் நமது
கவனத்திற்குரியது. ஒருவேளை முன்பே செத்திருந்தாலும் அது அமெரிக்க நலன்களுக்கே
பயன்பட்டுள்ளது – இப்போது செத்ததும் அமெரிக்க நலன்களுக்கே பயன்படப் போகிறது.

கடந்த பத்தாண்டுகளாக அமெரிக்க முதலாளிகளுக்குப் பொன்முட்டையிடும் வாத்தாக
இருந்த அமெரிக்காவின் தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கான ஒரு நொண்டிச் சாக்காக
ஒசாமா இருந்தார் என்றால் இனி அடுத்து வரப்போகும் 'நல்லெண்ண அடிப்படையிலான'
போர்களுக்கு அமெரிக்கர்களை உளவியல் ரீதியில் தயார்படுத்த இப்போது செத்துள்ளார்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல் ஒசாமா
பின்லேடனின் வாழ்வும் அமெரிக்க நலன்களுக்குச் சேவை செய்வதாகவே இருந்தது –
இப்போது அவரது சாவும் அமெரிக்க நலன்களுக்குச் சேவை செய்வதாகவே அமைந்துள்ளது.

சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவி

2011-2012 ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு உதவிபெறும் மற்றும்
அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மத்திய அரசால்
அறிவிக்கப்பட்ட சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவியை
தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது.
11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், இளங்கலை,
முதுகலை, ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றை பயிலும்
மாணவர்கள் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெறத் தகுதி
பெறுவார்கள்.11 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 30.06.2011க்குள்
கல்வி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.டிப்ளமோ, தொழிற்பயிற்சி
கல்வி,இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், ஆசிரியர்
பயிற்சி மற்றும் ஆராய்ச்சி படிப்பு உட்பட பயிலும் மாணவர்கள் கல்வி
உதவித் தொகை 15.07.2011க்குள் கல்வி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்க
வேண்டும்.பெற்றோர் பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு லட்சத்திற்கு
மிகாமல் இருத்தல் வேண்டும்.முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் 50 விழுக்காடு
மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்றிருத்தல்
வேண்டும்.பிற்படுத்தப்பட்டோர், ஆதி
திராவிடர் இதர துறைகள் மற்றும் நலவாரியங்கள் மூலம் 2011 12 ஆம் ஆண்டில்
கல்வி உதவித் தொகை பெறுதல் கூடாது.
பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் மாணவ, மாணவியர்களிடமிருது
பெறப்படம் விண்ணப்படிவங்களை சரிபார்த்து, மாணவ மாணவியரின் 1-) பெயர், 2)
பிறந்த தேதி 3) மதம் 4) தந்தை அல்லது பாதுகாவலர் பெயர் 5) ஆண்டு வருமானம்
6) பள்ளி கல்லூரியின் முகவரி 7) பின்கோடு 8) தொலைபேசி எண் 9)
மாணவர்களின் முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் மொத்தம் 50 விழுக்காடு 10)
சேர்க்கை கட்டணம் 11) கற்பிப்புக் கட்டணம் 12)
தேர்வுக் கட்டணம், ஆய்வக¢கட்டணம் 13) இதர பராமரிப்பு கட்டணம் 14) மாணவர்
விடுதியில் தங்கி பயில்பவரா அல்லது தங்காமல் பயில்பவரா 15) மாணவர்களின்
வங்கி சேமிப்பு விபரங்கள் 16) வங்கியின் பெயர் ஆகியவற்றை
புதுபிப்பித்தலுக்கான கேட்புபட்டியலை 10&07&2011 அன்றுக்குள்ளும்
புதியதற்கான கேட்பு பட்டியலை 25.07.2011 தங்களது மாவட்ட எல்லைக்குட்பட்ட
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலருக்கு சமர்பித்து அதற்கான ஒப்புகைச் சான்று
பெற வேண்டும்.
மேலதிக விபரங்களை http://tnminoritiesscholarship.in/ என்ற

Sunday, May 15, 2011

அத்துமீறிப் பறந்தால் சுட்டுத்தள்ளுவோம்: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் மிரட்டல்

இஸ்லாமாபாத், மே 14: தங்கள் நாட்டின் வான் எல்லை மீது அத்துமீறி பறந்து தாக்குதல் நடத்தினாலோ, டுரோன் ரக ஆள் இல்லாத விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்கினாலோ தகுந்த பதில் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அமெரிக்காவையும் நேடோ படைகளையும் பாகிஸ்தான் நாடாளுமன்றம் எச்சரிக்கிறது.

11 மணி நேர நீண்ட விவாதத்துக்குப் பிறகு பாகிஸ்தான் நாடாளுமன்றம் சனிக்கிழமை நிறைவேற்றிய ஒரு மனதான தீர்மானத்தில் இந்த எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.



"பாகிஸ்தான் எல்லை மீது ஒருதலைப்பட்சமாக டுரோன் ரக விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டால் நேடோ படைகள் பாகிஸ்தான் எல்லையில் தங்கி இளைப்பாறவும், எரிபொருள் நிரப்பவும் தரப்படும் வசதிகள் நிறுத்தப்படும்' என்று தீர்மானம் எச்சரிக்கிறது.





 சர்வதேச பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட ஒசாமா பின் லேடனை தலைநகர் இஸ்லாமாபாத் அருகில் உள்ள அபட்டாபாத் நகரிலேயே ஹெலிகாப்டரில் தரை இறங்கி வீட்டுக்குள் புகுந்து அமெரிக்க கடற்படை கமாண்டோக்கள் சுட்டுக்கொன்றதை நேரடியாகக் கண்டிக்க முடியாமல் பாகிஸ்தான் நாடாளுமன்றம் இத் தீர்மானத்தை இயற்றியிருக்கிறது.



 "அபட்டாபாத் நகரில் மே 2-ம் தேதி காலை நடந்த அமெரிக்க கமாண்டோ தாக்குதல் குறித்து சுயேச்சையான குழு விசாரிக்க வேண்டும். அப்படி நம்முடைய வான் எல்லையில் அத்துமீறிப் பறக்கவும் நினைத்த இடத்தில் இறங்கித்தாக்கவும் அவர்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? அப்படி அவர்கள் அனுமதி இல்லாமல் இறங்கியிருந்தால் அவர்களைத் தடுக்கத் தவறியது யார்?



 பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதன் மூலம் பாகிஸ்தானின் இறையாண்மையை அலட்சியம் செய்திருக்கிறார்கள்? சர்வதேசச் சட்டத்தையே மீறியிருக்கிறார்கள்.





 அபட்டாபாதில் நடந்த தாக்குதலும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய எல்லைப்புற மாகாணத்தில் பாகிஸ்தானியப் பழங்குடிப் பகுதிகள் மீது டுரோன் ரக விமானங்கள் மூலமும் அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களை இனியும் சகித்துக்கொள்ள முடியாது. இது தொடர்ந்தால் நேடோ படைகளுக்கு அளித்துவரும் இடை தங்கல் வசதிகளைத் திரும்பப் பெற நேரிடும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது.



 பாகிஸ்தானில் பின் லேடன் தங்கியிருந்ததைக் கண்டுபிடிக்கத் தவறியதற்காக தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலகத் தயார் என்று பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் அகமது ஷுஜா பாஷா முன்வந்தாராம். அவரையும், ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் அஷ்பக் நதீம் அகமது, விமானப்படை துணைத் தளபதி ஆசிம் சுலைமான் ஆகியோரையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கேள்விகளால் துளைத்தெடுத்தனர் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.


அமெரிக்க கடற்படை கமாண்டோ படை தாக்குதல் குறித்து விசாரணை நடத்தவுள்ள குழுவை பிரதமரும் தாமும்சேர்ந்து தேர்வு செய்யப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் செüத்ரி நிசார் அலி கான் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.



 டுரோன் ரக விமானங்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த 2 வழிகள் உள்ளன. அப்படி தாக்குதல் நடத்தும் டுரோன்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை திருப்பித் தாக்குவது, அல்லது நேடோ படைகளுக்கு அளித்துவரும் இடை தங்கல் வசதிகளை நிறுத்திவிடுவது என்று செய்தித்துறை அமைச்சர் பிர்தெüஸ் ஆஷிக் அவான் சுட்டிக்காட்டினார்.



 பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறவர்கள் மீது எல்லை தாண்டி தாக்குவதில் தவறு இல்லை என்ற சர்வதேச நிலைப்பாட்டை ஒட்டியே தாங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் அதற்குத் தங்களுக்கு முழு உரிமை உண்டு என்றும் அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்திருக்கிறது.



 இந்த எச்சரிக்கைக்குப் பிறகு டுரோன் தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்தாது என்று பாகிஸ்தானுக்கும் தெரியும். நாட்டு மக்களைச் சமாதானப்படுத்துவதற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.  



Saturday, May 14, 2011

அதிமுக கூட்டணிக்கு 203 இடங்களில் அமோக வெற்றி-திமுக கூட்டணிக்கு 31

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 147 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இந்தத் தேர்தலில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் மிக அதிக அளவாக 78.80 சதவீதம் வாக்குகள் பதிவாயின.


மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 204 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 150 தொகுதிகளில் வென்றுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 41,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

234 தொகுதிகளின் முடிவுகளும் நேற்று நள்ளிரவு வாக்கில் தெரிய வந்தன.

அதிமுக கூட்டணிக் கட்சிகள் வென்ற இடங்கள் (போட்டியிட்ட இடங்கள் அடைப்புக் குறிக்குள்):

அதிமுக- (160)- 150
தேமுதிக-(41)- 28
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் -(12)- 09
இந்திய கம்யூனிஸ்ட்- (10)- 08
மனிதநேய மக்கள் கட்சி- (03)- 02 சமத்துவ மக்கள் கட்சி- (03)- 02
புதிய தமிழகம்- (03)- 02
கொங்கு இளைஞர் பேரவை- (01)- 01
இந்திய குடியரசு கட்சி- (01)- 01
பார்வர்டு பிளாக்- (01)- 01
சேதுராமனின் மூவேந்தர் முன்னணி கழகம்- (01)- 00

திமுக கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 31 இடங்களில் தான் வென்றுள்ளது. திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் கருணாநிதி 50,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திமுக கூட்டணிக் கட்சிகள் வென்ற இடங்கள் (போட்டியிட்ட இடங்கள் அடைப்புக் குறிக்குள்):
திமுக- (119)- 23
காங்கிரஸ்- (63)- 05
பாமக- (30)- 03
விடுதலை சிறுத்தைகள்- (10)- 00
கொங்கு முன்னேற்றக் கழகம்- (07)- 00
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- (03)- 00
வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம்- (01)- 00
பெருந்தலைவர் மக்கள் கட்சி- (01)- 00

பாஜகவும் படுதோல்வி:

193 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவும் அதனுடன் கூட்டணி அமைத்து 10 தொகுதிகளில் போட்டியிட்ட சுப்பிரமணிய சாமியின் ஜனதா கட்சி, 5 தொகுதிகளில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.


இதேபோல் 142 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய ஜனநாயகக் கட்சி, 25 தொகுதிகளில் போட்டியிட்ட புரட்சி பாரதம், 230 தொகுதிகளில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் ஆகியவையும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.


Friday, May 13, 2011

நல்ல திட்டங்களை நிறைவேற்றியும் திமுக தோல்வியடைய என்ன காரணம்?

சென்னை: அதிமுகவின் பெரும் வெற்றியை விட, திமுகவின் மிகப் பெரிய தோல்விக்கு என்ன காரணம் என்பது அனைவருக்கும் ஆச்சரியமாகவே உள்ளது.

திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். காரணம், திமுக தரப்பு கடைசி நேரத்தில் செய்த கடுமையான பிரசாரம். ஆனால் மக்கள் தீர்க்கமான ஒரு முடிவைத் தெரிவித்து விட்டனர்.

திமுகவின் தோல்விக்கு ஒரு காரணமல்ல, பல காரணங்களைக் கூறலாம்:
1. மின்வெட்டு

தமிழக மக்கள் திமுகவுக்கு எதிராக ஆவேசமாக திரும்ப முக்கியக் காரணம் மின்வெட்டுப் பிரச்சினைதான். வரலாறு காணாத மின்வெட்டை ஒட்டுமொத்த தமிழகம் - தலைநகர் சென்னையை மட்டும் தேர்தல் முடியும் வரை விட்டு வைத்திருந்தனர் - கண்டது திமுக ஆட்சியில்தான்.

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலும் மின்வெட்டு கடுமையாகவே இருந்தது. தினசரி பல மணி நேரத்திற்கு மின்சாரம் இல்லாமல் போனதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.


தொழில் உற்பத்தி முடங்கிப் போனது. குறிப்பாக சிறு தொழில் செய்வோர் கடும் பாதிப்பை சந்தித்தனர். கொங்கு மண்டலத்திலோ தொழில் வளர்ச்சியும், உற்பத்தியும் சுத்தமாக நசிந்து போனது. பெரும் நஷ்டத்தை அவர்கள் சந்தித்தனர்.

கச்சாப் பொருட்களின் விலையேற்றம் ஒருபக்கம், மின்வெட்டு மறுபக்கம் என பெரும் அவதிக்குள்ளாகி விட்டனர் அவர்கள்.

அதேபோல சாதாரண மின் நுகர்வோர்களும் மின்வெட்டால் கடும் பாதிப்பை சந்தித்தனர். தொடர் மின்வெட்டால், மக்கள் பட்ட அவதி சொல்லொணாதது.

அதை விட மக்களை அதிகம் கோபத்துக்குள்ளாக்கிய விஷயம், சென்னைக்கு மட்டும் தடையில்லாமல் மின்சாரத்தை வழங்கிய அரசின் செயல்தான்.

2. விலைவாசி உயர்வு

இதேபோல மக்களை மிகவும் கவலைக்குள்ளாக்கிய, கோபத்திற்குள்ளாக்கிய விஷயம் விலைவாசி உயர்வுப் பிரச்சினை. குறிப்பாக வெங்காய விலை உயர்வும், காய்கறிகளின் விலையும், தக்காளி விலை உயர்வும் மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கி விட்டது.


விலைவாசி உயர்வைத் தடுக்காமல், அந்த மாநிலத்தில் இல்லையா, இந்த மாநிலத்தில் இல்லையா என்று முதல்வர் கருணாநிதி பட்டியலைக் காட்டி விலைவாசி உயர்வு நியாயமானதுதான என்பது போலப் பேசியதும் மக்களை கோபத்திக்குள்ளாக்கி விட்டது.

3. குடும்பத்தினரின் ஆதிக்கம்

முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் இதுவரை இல்லாத அளவு, வரலாறு காணாத வகையில், இந்த ஆட்சியின்போது மிகப் பெரிய அளவில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்தியதை யாரும் மறுக்க முடியாது.

முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஒரு பக்கம் ஆதிக்கம் செலுத்த, மு.க.அழகரி மறுபக்கம் ஆதிக்கம் செலுத்த, கனிமொழியின் ஆதிக்கம் ஒரு பக்கம் என குடும்ப அங்கத்தினரின் ஆதிக்கம் வரலாறு காணாத அளவுக்கு கொடி கட்டிப் பறந்தது.


மதுரையில் ஒரு தூசி நகர்ந்தாலும் கூட அது அழகிரிக்குத் தெரிந்தாக வேண்டும் என்ற அளவுக்கு அங்கு அவரது ஆதிக்கமும், அதிகாரமும் கொடி கட்டிப் பறந்தது.

இப்படி கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கத்தால் மக்கள் பட்ட அவதிகளும் நிறைய - நேரடியாகவும், மறைமுகமாகவும்.

4. திரைத்துறையில் கருணாநிதி குடும்ப ஆதிக்கம்

அதேபோல திரைப்படத் துறையிலும் கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கம் இதுவரை இல்லாத அளவு மிக மிக அதிகமாகவே இருந்தது.

கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோரின் சன் பிக்சர்ஸ் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவை விழுங்கி விட்டது என்றே கூறலாம். பெரிய பெரிய நடிகர்களை எல்லாம் வற்புறுத்தியும், மிரட்டியும் இவர்கள் தங்களது படங்களில் நடிக்க வைத்தார்கள் என்று குற்றச்சாட்டு உள்ளது. இதை வெளியில் கூற முடியாமல் அந்த நடிகர்களெல்லாம் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல.

அதேபோல அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், தமிழரசுவின் தயாரிப்பு நிறுவனம், அவரது மகன் அருள் நிதி நடிகராக்கப்பட்டது, கருணாநிதியின் இன்னொரு பேரன் குணாநிதி திரைத்துறையில் தயாரிப்பில் இறங்கியது என எங்கு பார்த்தாலும் கருணாநிதி குடும்பத்தாரின் முகங்களாகவே தெரிந்தது. இவர்களைத் தாண்டி யாரும் படம் எடுக்க முடியாது, நடிக்க முடியாது என்ற நிலையும் ஏற்பட்டது.


கருணாநிதி குடும்பத்தாரின் ஆதிக்கத்தை மனதில் வைத்தே நடிகர் அஜீத், முதல்வர் கருணாநிதி முன்னிலையிலேயே தங்களை மிரட்டுவதாக குமுறியது நினைவிருக்கலாம்.

அதேபோல கருணாநிதிக்காக தொடர்ந்து விழாக்களை எடுக்க திரைத்துறையினர் நிர்ப்பந்திக்கப்பட்டனர். மேலும் இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பெரிய நடிகர்களை வலுக்கட்டாயமாக கலந்து கொள்ள நிர்ப்பந்தித்தனர்.

ரஜினிக்கு அடுத்து பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டுள்ள நடிகர் விஜய்க்கு, திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட நெருக்கடியும் அனைவரும் அறிந்ததே. அவரது படங்களுக்கு முட்டுக்கட்டை போட முயற்சித்தது, மிரட்டியது, வழக்குகளைக் காட்டி பணிய வைக்க முயன்றது என நிறைய விஷயங்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் நடந்தது.

இப்படி கருணாநிதி குடும்பத்தாரின் ஆதிக்கத்தால் திரைத்துறையினரும் புழுக்கத்துடன்தான் இருந்தனர். இவற்றை எதிர்க்கட்சிகள் மக்களிடம் எடுத்துக் கூறி செய்த பிரசாரம் நல்ல பலனைக் கொடுத்துள்ளது என்பது முடிவுகளில் தெரிகிறது.

5. ஈழத் தமிழர் பிரச்சினை

ஈழத் தமிழர் பிரச்சினையும் திமுகவின் அஸ்தமனத்திற்கு ஒரு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.

ஈழத்தில் கொத்துக் கொத்தாக தமிழ் உயிர்களை சிங்களக் காடையர்கள் கொத்திக் குதறிப் போட்டபோதெல்லாம் அவர்களுக்காக திமுக குரல் கொடுக்கவில்லை என்பது, கண்மூடித்தனமாக காங்கிரஸை ஆதரித்தது, எதிர்த்துக் குரல் கொடுக்க தயங்கியது என திமுக மீது சரமாரியான புகார்கள் உள்ளன.



உலகத் தமிழர்கள் எல்லாம், கலைஞர் இப்படி அமைதி காத்து விட்டாரே, அவர் நினைத்திருந்தால் ஒட்டுமொத்த உயிர்ப்பலியையும் தடுத்திருக்கலாமே, தமிழர்களின் தலைவர் என்று அவரை அன்போடு அழைத்ததெல்லாம் வீணாகி விட்டதே என்று வெம்பிப் புலம்பி வேதனையில் மூழ்கும் அளவுக்கு அமைதி காத்தார் கருணாநிதி.

ஈழத்தில் கடைசிக் கட்டத்தில் நடந்த மிகப் பெரிய உயிர்ப் பலியின்போதும் கூட திமுக சற்றும் கலங்காமல், காங்கிரஸுக்கு சாதமாகவும், சோனியாவின் மனம் நோகக் கூடாது என்ற நோக்கிலும், பேசி வந்ததும், உண்ணாவிரதம் என்ற பெயரில் அவர் நடத்திய மிகக் குறுகிய போராட்டமும் ஈழத் தமிழர்களை மட்டுமல்லாமல், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் அவப்பெயரையே ஏற்படுத்தியது.

சோனியா காந்தி மனம் நோகக் கூடாது, காங்கிரஸைப் பகைத்துக் கொள்ளக் கூடாது, கனிமொழிக்கும் தனது குடும்பத்துக்கும் ஆபத்து வந்து விடக் கூடாது என்ற நோக்கில் மட்டுமே கருணாநிதி செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு சரிதான் என்று தமிழக மக்கள் தங்களது தீர்ப்பின் மூலம் காட்டி விட்டனர்.

6. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்
திமுக அரசின் மீதான பல முக்கியக் குற்றச்சாட்டுக்களில் ஒன்று ஸ்பெக்ட்ரம் ஊழல். அதாவது திமுகவின் ஊழலாக மட்டும் இதை மக்கள் பார்க்கவில்லை. மாறாக கருணாநிதி குடும்பத்தினர் மொத்தமாக அரங்கேற்றிய மிகப் பெரிய ஊழலாக இது மக்கள் மனதில் பதிந்து போய் விட்டது.

இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ரூ.1,76,000 கோடி அளவிலான இந்த ஊழல் மக்கள் மனதில் குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள், படித்தவர்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.


இந்த ஊழலில் ராசாவை மட்டும் சிறைக்கு அனுப்பி விட்டு தனது மனைவி தயாளு அம்மாள், கனிமொழியைக் காக்க கருணாநிதி போராடியதும் திமுகவினருக்கே அதிர்ச்சியாக அமைந்தது என்பதே உண்மை.

குற்றச்சாட்டுக்களில் கரைந்து போன நலத் திட்டங்கள்:

முதல்வர் கருணாநிதியின் பிடியில் இந்த ஆட்சியின்போது திமுகவும் இல்லை, அவரது குடும்பத்தினரும் இல்லை என்பதே பொதுவான திமுகவினரின் வருத்தமாக உள்ளது. ஆளாளுக்கு நாட்டாமை செய்ததும், ஆடியதுமே இன்று ஆட்சியைப் பறி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மிகப் பெரிய தோல்வியையும் சந்திக்க நேரிட்டு விட்டதாக உண்மையான திமுகவினர் வருத்தத்துடன் கூறுகின்றனர்.


இதுவரை எந்த தமிழக அரசும் செய்யாத பல அற்புதமான திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசுதான் என்று கூறும் அவர்கள், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் பயனடைந்த ஏழைகள் எத்தனையோ பேர் உள்ளனர். 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை பாராட்டாத வாய்களே இல்லை, இலவச டிவி திட்டம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ஒன்று, அதேபோல கான்க்ரீட் வீடு கட்டி்த தரும் திட்டம் மிக அற்புதமான திட்டம். இப்படி பல நலத் திட்டங்களை திமுக அரசு அறிமுகப்படுத்தி, அதை வெற்றிகரமாகவும் செயல்படுத்திக் காட்டியது.

ஆனால் இந்த நலத் திட்டங்களையெல்லாம் மறைக்கும் அளவுக்கு ஊழல் புகார்களும், குடும்பத்தினரின் ஆதிக்கமும் அதிகரித்துப் போனதால் திமுகவின் ஆட்சிக்கு முடிவு ஏற்பட்டு விட்டதாக திமுகவினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.


ஜெயலலிதா மாபெரும் வெற்றி: 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட திமுக!

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

கூட்டணி கட்சிகளின் தயவின்றி, தனித்தே அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது அதிமுக. இதனால் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனித்தே ஆட்சியமைக்கவுள்ளார்.


மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதில் அதிமுக மட்டும் தனித்து 152 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

விஜயகாந்தின் தேமுதிக யாரும் எதிர்பாராத வகையில் 26 இடங்களில் வென்றுள்ளது. இதன்மூலம் 2வது இடத்தைப் பிடித்து சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் பதவியை அந்தக் கட்சி கைப்பற்றவுள்ளது.


மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சி 8 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களிலும், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், புதிய தமிழகம் 2 தொகுதிகளிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், கொங்கு இளைஞர் பேரவை 1 தொகுதியிலும், பார்வர்ட் பிளாக் 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன. மொத்தத்தில் இந்தக் கூட்டணி 201 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.


ஆட்சியமைக்க 118 இடங்களே தேவை என்ற நிலையில், அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் தனித்தே ஆட்சியைப் பிடிக்கிறது. கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக 61 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

3வது இடத்துக்கு தள்ளப்பட்ட திமுக:

திமுக கூட்டணி 33 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதில் திமுக 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், பாமக 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

இந்தக் கூட்டணியில் இடம் பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

வெறும் 24 இடங்களை மட்டுமே பிடிப்பதன் மூலம் தேமுதிகவுக்கு அடுத்த இடத்தையே திமுக எட்டியுள்ளது. இதனால் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சி என்ற அந்தஸ்தைக் கூட இழந்துள்ளது.

கூட்டணி ஆட்சி இல்லை-அதிமுக:

இந் நிலையில் அதிமுக தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை கூறுகையில், ஆட்சியை கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக பகிர்ந்து கொள்ளாது. அதிமுக முழு பெரும்பான்மை பெற்றுள்ளது. எனவே அம்மா தனியாகவே அமைச்சரவையை அமைப்பார் என்றார்.

இதுவரை முடிவு அறிவிக்கப்பட்டவை-224:

அதிமுக 147
தேமுதிக 25
சிபிஎம் 8
சிபிஐ 7
மமக 2
சமக 2
கொங்கு இளைஞர் பேரவை 1
புதிய தமிழகம் 2
குடியரசுக் கட்சி 1
பார்வர்ட் பிளாக் 1

திமுக 21
காங்கிரஸ் 5
பாமக 2

இது தவிர மேலும் 5 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து கொண்டுள்ளது.
ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர், மதுரை கிழக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு மற்றும் மேலூர் ஆகிய 5 தொகுதிகளில் வாக்கு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்பட்டது. இங்கு திமுக, அதிமுக இரு தரப்பினருடனும் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகிறார்கள்.

Thursday, May 12, 2011

உச்ச நீதி மன்றத்தின் தடை ஆறுதல் அளிக்கிறது!! பாப்புலர் பிரான்ட்!!


May 11, புதுடெல்லி: இடிக்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தை மூன்றாக பங்குவைத்து அளிக்கவேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியது.

இந்த கேலிக்கூத்தான தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்த நடவடிக்கையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்றுள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பை விசித்திரமானது என குறை கூறிய உச்சநீதிமன்றம் வழக்கை மறுபடியும் விசாரிக்கவேண்டும் என கருத்துத்தெரிவித்துள்ளது.

வகுப்புவாத சிந்தனையுடன் அளிக்கப்பட்ட பாரபட்சமான அலகபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பைக்குறித்து கவலைக்குள்ளான மதசார்பற்ற வட்டாரங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை ஆறுதலை அளிக்கும்விதமாக அமைந்துள்ளது.

பாப்ரி மஸ்ஜித் நில உரிமையியல் தொடர்பான வழக்கில் 60 ஆண்டுகளுக்கு பிறகு அலகபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பாரபட்சமானதும், நீதியற்றதுமாகும். நீதியை தாமதிப்பது நீதியை மறுப்பதற்கு சமம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இவ்வழக்கை விரைவாக விசாரணையை நடத்தி தீர்ப்பு அளிக்கும் என நம்புவதாக கே.எம்.ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவிடுவீர்!


அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

நம் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக!

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை, வாத்தியாப் பள்ளித் தெரு, எண் 1, ஃபாத்திமா நகர் முகவரியில் வசிக்கும் திருமதி ஏ.கே. மைமூன் பீவிஅவர்களின் கீற்று வேயப்பட்ட வீட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (08.05.2011) நண்பகல் 1:30 மணியளவில் சமையல் செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று தீப்பிடித்து மளமளவென்று வீடு முழுவதும் பரவியது.


வெறும் சுவர்கள் மற்றும் மண் பாத்திரங்கள் போன்றவற்றை மட்டும் விட்டுவிட்டு வீட்டில் உள்ள பீரோக்கள், அலமாரிகள், கட்டில், மெத்தை, தொலைக்காட்சி பெட்டி, எமர்ஜென்சி விளக்கு, மின்விசிறிகள், டேபிள் ஃபேன், ரேடியோ, கிரைண்டர், மிக்ஸி, கதவுகள், ஜன்னல்கள், சுவிட்சு பெட்டிகள், எலெக்ட்ரானிக் மீட்டர், சைக்கிள், டேபிள், நாற்காலிகள், துணிமணிகள், உணவுப் பொருட்கள், கூரை, கீற்று, மூங்கில்கள் என அனைத்தையும் ஒரு சில நிமிடங்களில் தீ தின்று தீர்த்து விட்டது.

இத்துடன் வீட்டை சரி செய்வதற்காக கடனாக வாங்கி வைத்திருந்த 55,000 ரூபாய் ரொக்கப் பணம், பொருட்கள் வாங்கிக் கொடுப்பதற்காக வைத்திருந்தநான்கு ரேஷன் (குடும்ப) அட்டைகள்குழந்தைகளின் காது நகைகள் (சுமார் 1 பவுன்)என அனைத்தையும் நெருப்பு தின்று விட்டது. 


சிறுகச் சிறுகச் சேமித்து குடும்பத் தேவைக்காக வைத்திருந்த இந்தப் பொருட்களின் மதிப்பு ஏறக்குறை 5 இலட்சத்திற்கும் அதிகம். இதற்கெல்லாம் மேலாக வீட்டில் உள்ளோர் உடுத்தியிருந்த துணிகள் மட்டுமே மிஞ்சியது. மாற்றுத் துணிகள் ஒன்றுகூட இல்லாமல் அனைத்தும் தீயில் கருகிவிட்டது.

கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் ஒரு மகனார், அவரின் மனைவி, இரண்டு சிறு பிள்ளைகள் (ஒரு பெண் பிள்ளை வயது 5 மற்றும் ஒரு ஆண் பிள்ளை வயது 4), ஒரு விதவை மகள் (வயது 40) என ஆறு நபர்களின் உயிர்கள் மட்டுமே இந்த சம்பவத்தில் தப்பித்தவை. 

அனைத்தையும் இழந்து நிற்கும் அந்த ஏழைக் குடும்பத்திற்கு உறவினர்கள், ஊர்க்காரர்கள் உட்பட பலர் பல விதங்களில் ஆறுதல் சொல்லி தேற்றினாலும் நாளைய வாழ்விற்கு வழித் தெரியாமல் கலங்கி நிற்கிறது அந்த குடும்பம்.

எனவே, இந்தத் தகவலை வேண்டுகோளாக ஏற்று உள்நாட்டிலும், வெளிவாட்டிலும் வாழும் நல்லுள்ளம் கொண்ட சகோதர, சகோதரிகள், அமைப்புகள், இயக்கங்கள், அறக்கட்டளைகள், நற்பணி மன்றங்கள், சங்கங்கள் அனைவரும் தங்களால் இயன்றளவு பொருளாகவோ, பணமாகவோ அன்பளிப்பாக வழங்கி அந்த ஏழைக் குடும்பத்தின் கண்ணிரை துடைத்திடுமாறும், குடியிருக்க வீடும், குடும்பம் நடத்தத் தேவையான பொருட்களும், உடுத்திக் கொள்ள துணிமணிகளும் வழங்கி அவர்கள் வாழ வழி செய்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

உதவி செய்ய விரும்புவோர் கீழ்க்காணும் முகவரியில் நேரிடையாகவோ அல்லது தொலைபேசி மற்றும் அஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறும், இந்தக் குடும்பத்தின் செய்தியை பிறருக்கும் எடுத்துரைத்து அவர்களும் இந்த நற்காரியத்தில் பங்கெடுக்க வைக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

எல்லாம் வல்ல ஏக இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.

நன்றி. வஸ்ஸலாம்.

திருமதி ஏ.கே. மைமூன் பீவி
எண் 1, ஃபாத்திமா நகர்,
வாத்தியாப் பள்ளித் தெரு,
பரங்கிப்பேட்டை - 608502,
கடலூர் மாவட்டம். 
அலைபேசி: (+91) 9894342457

வங்கிக் கணக்கு விபரம்:
A/c # : 007101000018803
Bank: Indian Overseas Bank
Branch: Portonovo - 0071
District: Cuddalore

மேலதிக விபரங்களுக்கு...
ஏ.கே. அப்துல் பாரீ (அண்ணன்) (+91) 9003608064
எஸ். அப்துல் ஹமீத் (மச்சான்) (+901) 9944030796
ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் (மகன்) (+91) 8870159878
ஏ. லியாகத் அலீ (தங்கை மகன்) (+91) 9597783844

Monday, May 9, 2011

பிளஸ்டூ ரிசல்ட் வெளியீடு-ஓசூர் மாணவி ரேகா முதலிடம், கள்ளக்குறிச்சி வேல்முருகன் 2வது இட

சென்னை: பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், ஓசூர்
மாணவி கே.ரேகா 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தைப்
பிடித்தார்.

ஓசூர் விஜய வித்யாலயா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்தவரான கே.ரேகா பெற்ற மதிப்பெண்கள்

தமிழ் 195, ஆங்கிலம் 196, கணிதம், வேதியியல் இயற்பியல் உயிரியல் தலா 200.

2வது இடத்தில் வேல்முருகன்

கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தவரான வேல்முருகன்
1187 மதிப்பெண்களுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

4 மாணவர்களுக்கு 3வது இடம்

நெல்லை வித்யா சகுந்தலா, பெரியகுளம் ரகுநாதன், நாமக்கல் சிந்து கவி,
ஓசூர் பி.எஸ்.ரேகா ஆகியோர் 3வது இடத்தைப் பிடித்துள்ளனர். இவர்கள் தலா
1186 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7,23,545 மாணவ, மாணவியர் பிளஸ்டூ
தேர்வு எழுதினர். தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள் 57,086 பேர்.

பாபர் மசூதி வழக்கு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது

டெல்லி: பாபர் மசூதி-ராம் ஜென்மபூமி அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பல்வேறு இந்து, முஸ்லீம் அமைப்புகள் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுக்கள் மீதான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் தொடங்குகிறது.

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி அமைந்து இருந்த 2.77 ஏக்கர் நிலத்தை இரண்டு இந்து அமைப்புகள் மற்றும் ஒரு முஸ்லீம் அமைப்புக்கு சமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பு தீர்ப்பளித்தது. மேலும் சர்ச்சைக்குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்றும் அது தெரிவித்தது.

இது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு இந்து, முஸ்லீம் அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளன. இந்த மனுக்கள் அனைத்தும் இன்று  நீதிபதிகள் அப்தாப் ஆலம் மற்றும் ஆர்.எம்.லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வருகின்றன.

நிர்மோகி அகாரா, அகில் பாரத ஹிந்து மகாசபா, ஜமாயத் உலமா இ ஹிந்த், சன்னி மத்திய வக்பு வாரியம் ஆகியவை இந்த அப்பீல் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. அதேபோல பகவான் ராம் விரஜமான் சார்பிலும் மனு தாக்கல் செய்யபப்பட்டுள்ளது.

Saturday, May 7, 2011

யு.எஸ். போல தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகள்-இந்தியாவுக்கு பாக். எச்சரிக்கை

இஸ்லாமாபாத்: பின்லேடனை அமெரிக்கப் படையினர் கொன்றது போல தாங்களும் செய்ய நினைத்தால் இந்தியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். பேரழிவாக அது முடியும் என்று பாகிஸ்தான் மிரட்டியுள்ளது.


பின்லேடன் மீதான தாக்குதல் குறித்து கருத்துத் தெரிவித்திருந்த இந்திய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே.சிங் மற்றும் விமானப்படைத் தலைமைத் தளபதி பி.வி.நாயக் ஆகியோர் கூறுகையில், அமெரிக்கா எப்படி பின்லேடனை போட்டுத் தள்ளியதோ, அதேபோல செய்ய இந்தியாவிடமும் பலம் உள்ளது என்று கூறியிருந்தனர்.

இதனால் பாகிஸ்தான் கடுப்பாகியுள்ளது. இந்தியாவின் இந்த சவால் குறித்து ராணுவத் தலைமைத் தளபதி பர்வேஸ் கயானி தலைமையில் நடந்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் ராணுவத் தரப்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில்,

அபோதாபாத் சம்பவம் போல இனி ஒரு சம்பவம் நடக்க அனுமதிக்க மாட்டோம். எந்த நாடும் தங்கள் இஷ்டத்திற்கு பாகிஸ்தானுக்குள் வந்து போக அனுமதிக்க முடியாது. இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடந்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும்.


அமெரிக்கா மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறிப் புகுந்தால் அதனுடன் இருந்து வரும் உளவுத் தகவல் பரிமாற்ற ஒத்துழைப்பை நிறுத்தி விடுவோம். அதேபோல பாகிஸ்தானில் இருந்து வரும் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கையையும் வெகுவாக குறைத்து விடுவோம்.

இந்திய ராணுவத் தலைவர்கள் கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் கடுமையானவை. அதேசமயம், இதுபோன்று நடக்க அவர்கள் முயற்சித்தாலோ அல்லது கருதினாலோ கூட அவற்றை மிகக் கடுமையாக எதிர்கொண்டு அழிப்போம். அவர்களுக்குக் கொடுக்கப்படும் பதில் மிகக் கடுமையானதாக இருக்கும், பேரழிவுக்கு வித்திடும். அதில் பாகிஸ்தானியர்களுக்கு எந்த சந்தேகமும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதேபோல பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் சல்மான் பஷீர் கூறுகையில், .வீரம் நிறைந்த பூமி பாகிஸ்தான். இங்கு ஏராளமான வீரர்கள் உள்ளனர். எல்லைக்கு அப்பாலிருந்து சிலர் வான் மூலமாகவும், தரை மார்க்கமாகவும் பாகிஸ்தானுக்குள் புகுந்து எதிரிகளை அழிக்க முடியும் என பேசியுள்ளனர். இந்தத் தப்புக்கணக்கை அவர்கள் கைவிட வேண்டும். அப்படி ஏதாவது செய்ய முயற்சித்தால் பேரழிவை அவர்கள் சந்திக்க நேரிடும் என்றார் பஷீர்.

அமெரிக்கப் படைகளைக் குறைக்க பாகிஸ்தான் முடிவு

இஸ்லாமாபாத், மே 6: ஒசாமா பின்லேடனை ரகசியத் தாக்குதல் மூலம் அமெரிக்கா கொன்றுவிட்ட நிலையில், தங்கள் நாட்டுக்குள் இருக்கும் அமெரிக்கப் படைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என பாகிஸ்தான் ராணுவம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.





இதுபோன்ற தன்னிச்சையான தாக்குதலை அமெரிக்கா இன்னொருமுறை நடத்த முயன்றால் அந்த நாட்டுடனான உறவை மறுபரிசீலனை செய்யவும் தயங்க மாட்டோம் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி கயானி அறிவித்திருப்பதாகவும் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியிருக்கிறது. பாகிஸ்தானின் 138-வது படைக் குழுக்களின் கூட்டம் ராவல் பிண்டி ராணுவத் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. தளபதி கயானி தலைமையில் நடந்த இந்தக் கூட்டம், அபோட்டாபாத்தில் அமெரிக்க கமாண்டோக்கள் ஊடுருவி ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்ற விவகாரம் பற்றி விவாதிப்பதற்காகவே நடத்தப்பட்டது.





அமெரிக்காவுடனான ராணுவ உறவு, பின் லேடன் கொல்லப்பட்டது, அதற்காக அமெரிக்க கமாண்டோக்கள் ரகசியமாக ஊடுருவியது, அவற்றால் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது போன்ற தாக்குதல்கள் பாகிஸ்தானின் இறையாண்மையைப் பாதிக்கும் என்று கூறிய கயானி, மீண்டும் இது போன்ற தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்காவுடனான ராணுவ, உளவு சார்ந்த ஒத்துழைப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

குறைந்தபட்சமாக, இப்போதைக்கு பாகிஸ்தானில் அமெரிக்கா ராணுவ நடமாட்டத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று படைப்பிரிவுத் தளபதிகளை அவர் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. ஒசாமா பின்லேடன் வீட்டைத் தாக்கியது போல பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைகள், மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கயானி பேசியிருக்கிறார். குடியிருப்புப் பகுதிகளைத் தாக்குவது போன்று எளிதாகத் தாக்கும் அளவுக்கு நமது பாதுகாப்பு நிலைகள் இல்லை. அவற்றுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன என்றும் கயானி கூறியதாக அந்த ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இந்தியாவுக்கு... தங்களாலும் இதுபோன்ற தாக்குதல்களை நடத்த முடியும் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் கூறியிருப்பதும் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதம் நடந்தது. இதைக் குறிப்பிட்ட கயானி, அப்படி ஏதாவது சாகசம் செய்ய நினைத்தால் கடுமையான பதிலடி தரப்படும் என்றார்.
அமெரிக்கா கருத்து: அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானில் தொடர்ந்து இருக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது பாகிஸ்தானே என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

கலைஞர் டிவி பண பரிமாற்றத்தில் போலி ஆவணங்கள்-கனிமொழியை சிறையில் அடைக்க வேண்டும்: சிபிஐ

புதுதில்லி, மே 7: 2ஜி வழக்கு தொடர்பாக தம்மைக் கைது செய்யாமலிருக்க கனிமொழி எம்.பி. தாக்கல் செய்திருக்கும் மனுவை தள்ளுபடி செய்துவிட்டு அவரை காவலில் வைக்க உத்தரவிட வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் வாதிடப்பட்டது.

இதனிடையே, கனிமொழியின் ஜாமீன் மனு மீதான உத்தரவு மே 14-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.



2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக தாங்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் சார்பில் இந்திய குற்றவியல் சட்டம் (சி ஆர்.பி.சி) 88சி-யின் கீழ் சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுவை சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி நேற்று விசாரித்தார். குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் நேற்று வாதிட்டனர்.
 இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்றும் தொடர்ந்தது.  விசாரணைக்கு ஆஜராவதற்காக கனிமொழி இன்று காலை 9.40 மணி அளவில் தமிழ்நாடு பவனில் இருந்து பாட்டியாலா வளாகத்துக்கு வந்தார்.
  சிபிஐ சார்பில் வழக்கறிஞர் யூ.யூ.லலித் வாதிட்டார். கலைஞர் டி.வி.யில் அதன் நிர்வாக இயக்குநர் சரத்குமாரைப் போலவே கனிமொழிக்கும் 20 சதவீத பங்குகள் இருக்கின்றன. கனிமொழி வெறும் பங்குதாரராக மட்டுமே இருந்தார் என்பதை ஏற்க முடியாது. கலைஞர் டி.வி.யின் நிர்வாகத்தில் கனிமொழி முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்.
 வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கும் கனிமொழிக்கும் நெருக்கமான தொடர்பு இருந்திருக்கிறது. ராசாவுக்கு தொலைத் தொடர்புத் துறையைப் பெற்றுத் தருவதற்காக அரசியல் தரகர் நீரா ராடியா மூலமாக கனிமொழி பரிந்துரை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.




கலைஞர் டி.வி. தொடங்கப்படும்போது ராசாவுடன் கனிமொழி அடிக்கடி பேசியிருக்கிறார். இவற்றின் காரணமாக எந்த ஆவணமும் இல்லாமல் கலைஞர் டி.வி.க்கு பணம் கைமாறியிருக்கிறது.

கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. அதனால் குற்றவியல் சட்டம் 88சியின் அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டு அவரைக் காவலில் வைக்க உத்தரவிட வேண்டும். வழக்கமான ஜாமீன் மனு தாக்கல் செய்ய மட்டுமே அவர் அனுமதிக்கப்பட வேண்டும் என்று சிபிஐ சார்பில் வாதிடப்பட்டது.

Friday, May 6, 2011

வலுக்கிறது கத்திரி-வெளுக்கிறது வெயில்-இன்றும் பல ஊர்களில் சதம்


சென்னை : தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் பட்டையைக் கிளப்பி வருகிறது. இன்றும் பல ஊர்களில் வெயில் சதத்தைத் தாண்டி வெளுத்துக் கொண்டிருக்கிறது.

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் தமிழகம் முழுவதும் தொடங்கி வெற்றி நடை போட்டு வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய அன்று தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்த போதும் அது வெப்பத்தைக் குறைக்க போதுமானதாக இல்லை. மாறாக, மிகக் கடுமையான வெப்பம் அடித்து வருவதால் மக்கள் மண்டை காய்ந்து போய் உள்ளனர்.

தமிழகத்தின் தலைநகர் முதல் பல நகரங்களிலும் கடும் வெயில் அடித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவு இப்போதே கடும் வெயில் அடிப்பதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் சமீப ஆண்டுகளில் இல்லாத அளவாக தலைநகர் சென்னையில் மிகக் கடுமையான வெயில் அடித்துக் கொண்டுள்ளது. இப்போதே 105 டிகிரி அளவுக்கு வெயில் அடிப்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். கத்திரி உச்சத்தை எட்டும்போது வெயில் மேலும் கடுமையாகுமோ என்று மக்கள் பயப்படுகின்றனர்.

நேற்றைய நிலவரப்படி சென்னையில்தான் அதிக அளவாக 105.44 டிகிரி வெயில் வெடித்தது. வேலூரிலும் இதே அளவிலான வெயில் பதிவானது.

பாளையங்கோட்டையில் 104, நாகையில் 102, கடலூரில் 102, மதுரையில் 99, கன்னியாகுமரியில் 97, சேலத்தில் 97, கோவையில் 95 டிகிரி என வெயில் பதிவானது.

இன்றும் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் வெயில் சதத்தைத் தாண்டிப் போயுள்ளது. சென்னையிலும் வழக்கம் போல வெயில் வெளுத்து வாங்கி வருகிறது.

தென் மேற்குப் பருவ மழை வருகிற 26ம் தேதி தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மழை வந்தால்தான் வெயிலின் தாக்கம் சற்று குறையத் தொடங்கும் என்று தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நேற்று வரை ஜாமீன் கோர மாட்டேன் என்று கூறி வந்த திமுக எம்பி கனிமொழி இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரானபோது அவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி அவருக்கு ஜாமீன் கோரி வாதாடினார்.

கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர் என்ற வகையில் அந்தத் தொலைக்காட்சிக்கு ரூ. 124 கோடியை ஸ்வான் டெலிகாம் தந்த வழக்கில் கனிமொழி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் இன்று ஆஜரானார்.


கனிமொழி சார்பாக பிரபல கிரிமினல் வழக்ககறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதாடி வருகிறார். அவர் கூறுகையில், கனிமொழி தற்போது எம்.பியாக இருக்கிறார். மேலும் அவர் ஒரு பெண். இது மட்டுமல்ல, கலைஞர் டிவியில் அவருக்கு 20 சதவீதம் பங்குகள் தான் உள்ளன.

இவர் பங்குதாரராக இருந்தாலும் கலைஞர் டிவி நிர்வாகத்தை கவனிப்பதில்லை. நிர்வாகத்தின் முழு பொருப்பையும் சரத் குமாரே கவனித்து வருகிறார். கலைஞர் டிவியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்த கனிமொழி 2 மாதத்திலேயே அந்த பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். இப்போது அவர் வெறும் பங்குதாரர் மட்டுமே.

கனிமொழி கலைஞர் டிவி நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கிறார் என்பதற்காகவே அவரை குற்றவாளி என்று கூறி விட முடியாது. மேலும் அவர் எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை, எதையும் அமல்படுத்தவில்லை.

ஸ்பெக்ட்ரம் வழக்கிலும் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியது எல்லாம் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாதான். அவர் தான் அதற்கு முழுக்க முழுக்க பொறுப்பு. அதில் கனிமொழி தலையிடவே இல்லை.
கருணாநிதி மகள் என்பதால் கனிமொழி பழிவாங்கப்படுகிறார். அவர் நீதித்துறையை மதிப்பவர். எங்கும் ஓடி விட மாட்டார். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.

அதே போல சரத்குமாரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

Wednesday, May 4, 2011

பின்லேடன் புகைப்படம் கோரமானது என்பதால் வெளியிட்டால் பிரச்சினை வரும்: அமெரிக்கா

வாஷிங்டன்: பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் பார்க்க மிகவும் கோரமாக இருப்பதால் அவற்றை வெளியிட்டால் பிரச்சினை வரும் என கருதுகிறோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.




பாகிஸ்தானில் நடந்த தாக்குதலின்போது பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார். இதையடுத்து உலகெங்கும் பரபரப்பு ஏற்பட்டது. கொல்லப்பட்ட சில மணி நேரங்களிலேயே பின்லேடன் உடலில் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டு உடலையும் கடலில் வீசி விட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. உண்மையிலேயே பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார அல்லது ஒபாமாவின் செல்வாக்கை அதிகரிப்பதற்காக அவரது நிர்வாகம் டிராமா போடுகிறதா என்ற கேள்விகள் அமெரிக்காவிலேயே எழுந்துள்ளன.


இதையடுத்து புகைப்படங்களை வெளியிடுவது குறித்து யோசித்து வருவதாக அமெரிக்கா கூறியது. இந்த நிலையில் புகைப்படத்தை வெளியிட வாய்ப்பில்லை என்பதை அமெரிக்கா தற்போது மறைமுகமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஒசாமா பின்லேடனை அமெரிக்க வீரர்கள் சுட்டு வீழ்த்தியபோது அவரிடம்  கையில் ஆயுதம் எதுவம் இல்லை. ஆயுதம் இல்லாத நிலையிலும் அமெரிக்க வீரர்களை எதிர்த்து லேசான எதிர்ப்பைக் காட்டினர் பின்லேடன். அதேசமயம், அவர்   அவரது  மனைவியின் பின்னால் ஒளிந்து கொண்டதாக கூறப்படுவதில்லை உண்மை இல்லை. அப்படி அவர்  செய்யவில்லை.

மேலும் அமெரிக்க வீரர்கள் தன்னை சுட முயன்றபோது அவர்களை நோக்கி ஓடி வந்தார்  பின்லேடன். இதையடுத்து அவரது  காலில் வீரர்கள் சுட்டனர். இதனால் அவரால்  ஓட முடியவில்லை. இதையடுத்து அவரை  அமெரிக்க வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

அமெரிக்க வீரர்கள் பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்தபோது எதிரில் தென்பட்டவர்களை துப்பாக்கி முனையில் பிடித்து கைவிலங்கிட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தங்களது குறி பின்லேடன் மட்டும்தான் என்பதில் அவர்கள் தீவிரமாக இருந்தனர். எதிர்ப்பட்டவர்களை எல்லாம் சுடும் நோக்கத்தில் அவர்கள் இல்லை. அமெரிக்க வீரர்கள் வந்த ஹெலிகாப்டர்களில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுதுபட்டு விட்டது.

பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டுத் திரும்பிய அமெரிக்க வீரர்கள் பழுதடைந்திருந்த ஹெலிகாப்டரை தகர்த்து எரித்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

பின்லேடன் கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள் மிகவும் கோரமாக உள்ளது. அவற்ற வெளியிட்டால் பிரச்சினை வரலாம் என கருதுகிறோம். எனவே அவற்றை வெளியிடுவது குறித்து பரிசீலனை செய்த பிறகே முடிவெடுக்கப்படும். பின்லேடன் கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வெளியிடுவது குறித்து தீவிரப் பரிசீலனை நடந்து வருகிறது என்றார்.

வேலைவாய்ப்பை உருவாக்கும் வேளாண்படிப்புகள் (Agriculture studies)

உயர்ந்துவரும் விலைவாசிக்கு மிக முக்கியகாரணங்களில் ஒன்று வேளாண் உற்பத்தி
குறைந்தது, வேளாண் உற்பத்தியை அதிகபடுத்துவதன் மூலமே எதிகால தேவையை பூர்த்தி
செய்யமுடியும், அரசும் , தனியார் துறைகளும் வேளாண் உற்பத்தியில் கவனம்
செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் . உற்பத்தியை அதிக படுத்தாதவரை விலைவாசியை
குறைக்க முடியாது. எனவே வரும் காலங்களில் வேளாண்மை சார்ந்த படிப்புகளுக்கு நல்ல
வேலைவாய்ப்பு கிடைக்கும். பெரும்பாலும் மாணவர்கள் +2 முடித்துவிட்டு, பொறியியல்
, மருத்துவம் சார்ந்த படிப்புகளை அதிகம் தேர்ந்தெடுத்து படிப்பதால் வேளாண்மை
துறை சார்ந்த படிப்புகளில் அதிக கவனம் செலுத்துவது இல்லை. மருத்துவம்(MBBS,
BDS) , பொறியியல் (B.EB.Tech)அல்லாத படிப்புகள் படிக்க விரும்புபவர்களுக்கு
இந்த படிப்புகள் சிறந்தது. வேளாண் துறை சார்ந்த படிப்புகள் படிப்பதால், எங்கும்
வேலைக்கு போய் அலைய தேவை இல்லை, வெளி நாடுகளுக்கு போய் கஷ்ட்டபட தேவை இல்லை,
அரசின் மானியத்துடன் , வேளாண் உற்பத்தியை சுயமாகவே துவங்கலாம், பலருக்கு வேலை
கொடுக்கலாம்.

தமிழக அரசு தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் மூலம் வேளான் படிப்புகளை
மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருகின்றது. தமிழகத்தில் கோவை, மதுரை, தூத்துகுடி,
திருச்சி, பெரியகுளம், மேட்டுபாளையம் ஆகிய 6 இடங்களில் 11 வேளாண் கல்லூரிகள்
உள்ளன. இதில் வேளாண் துறைசார்ந்த கீழ் காணும் படிப்புகள்
பயிற்றுவிக்கபப்டுகின்றன.

*4 ஆண்டு அறிவியல் படிப்புகள் :* B.Sc.(Agriculture, Horticulture, Forestry,
Home Science, Agricultural Engineering)

*4 ஆண்டு பொறியியல் படிப்புகள் :* B.Tech.(Biotechnology) ,
B.Tech.(Horticulture) , B.Tech.(Food Process Engineering) ,B.Tech.(Energy
and Environmental Engineering) , B.Tech.(Bioinformatics) , B.S.(Agribusiness
management ) ,B.Tech.(Agricultural information technology) .

மேற்கண்ட படிப்புகளில் சேறுவதற்கான விண்ணப்பம் 11 வேளாண்பல்கலை கழகங்களிலும் மே
முதல் வாரத்தில் விண்ணப்பிக்க படுகின்றன இன்ஷா அல்லாஹ். விண்ணப்பத்தின் விலை
ரூ.600. மே மாதம் கடைசி வாரத்திற்க்குள் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.

*விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள் :*

Agricultural College and Research Institute, Coimbatore - 641 003
Agricultural College and Research Institute, Madurai - 625 104.
Agrl. College and Res. Inst., Killikulam, Tuticorin District- 628 252
Anbil Dharmalingam Agricultural College and Research Institute, Navalur
Kuttappattu, Trichy - 620 009.
Agricultural Engineering College and Research Institute, Kumulur, Pallapuram
(P.O.), Poovalur (Via),Trichy - 621 712
Horticultural College and Research Inst., Periyakulam - 625 604
Forest College and Research Institute, Mettupalayam - 641 301

*தகுதிகள் :* +2 தேர்வில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல்,
அல்லது கணிதம், இயற்பியல் வேதியியல் படித்து இருக்க வேண்டும், குறைந்தது 55%
மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும் (முஸ்லீம்களுக்கு 50 % ). 21 வயதிற்க்கு
மிகாமல் இருக்க வேண்டும்

*மாணவர்களை தேர்ந்தெடுக்கும் முறை :* மேலே குறிபிட்டுள்ள 4 பாடங்களின்
மதிப்பெண் அடிப்படையில் தகுதி பட்டியல் (Rank list ) தயாரிக்கப்பட்டு அதன்
அடிப்படையில் மாணவர்கள் கல்லூரியில் அனுமதிக்கப்படுவார்கள், இதில்
முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது.

அனைத்து விபரங்களும் www.tnau.ac.in இந்த உள்ளது.

Monday, May 2, 2011

பெருகும் முஸ்லிம் எதிர்ப்புச் சிந்தனைகள் – தீர்வு என்ன…?

மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி அதன் மூலம் அரசியல் அதிகாரத்தை அடைந்திட
வேண்டும் என்கிற தணியாத தாகத்துடன் கடந்த 63 ஆண்டுகளாக செயல்பட்டுவரும்
சங் பரிவாரங்கள் தங்களது சதித்திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்திட
எடுத்துக் கொண்ட வலிமையான ஆயுதம்தான் "அவதூறு பிரச்சாரம்"
நாட்டில் வாழும் முஸ்லிம்களை பற்றி கலாச்சார ரீதியாக, மதரீதியாக,
பொருளாதார ரீதியாக, எப்படியெல்லாம் உண்மைக்கு மாறான செய்திகளை பாமர
மக்களிடம் பரப்ப இயலுமோ அப்படியெல்லாம் பரப்பி வருகின்றனர் இந்த
கோயபல்ஸின் வாரிசுகள்.
உலக அளவில் நவீன ஊடகங்கள் வழியாக தொடர்ச்சியாக செய்யப்பட்டு வரும்
இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு பல காரணங்கள் உண்டு. அதில்
குறிப்பாக சமீப காலமாக 'ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயரும் சமூகங்களால்
ஏற்படும் புவி, அரசியல், பொருளாதார மாறுதல்கள்' என்கிற சமூகவியல்
ஆய்வுகளின் தகவல்கள் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை
அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இன்னும் 30 வருடங்களில் பல ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொகையில்
முஸ்லிம்களின் எண்ணிக்கை சதவீதம் பெரும்பான்மையாக மாறிவிடும் என்கிறது
இந்த ஆய்வுகள். குறிப்பாக ஜெர்மனி, லண்டன் மாநகரம், பிரான்ஸ் போன்ற
நாடுகள் இதில் அடக்கம்.
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய மார்க்கத்தின் வளர்ச்சி விகிதம்
225 சதவீதம் என்ற அளவிற்கு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது ஒருபுறம்
இருக்க,
18 – 19 ஆம் நூற்றாண்டுகளில் எப்படி இஸ்லாத்துக்கு எதிராக பொய்களையும்
புரட்டுக்களையும் அள்ளிவிட்டு இஸ்லாமிய நிலப்பரப்பில் புகுந்து அரசுகளைக்
கவிழ்த்து, அபகரித்துக் கொண்டார்களோ, அது போல தற்போது சோவியத் யூனியன்
வீழ்ச்சிக்குப் பிறகு ஏகாதிபத்திய கொடுமதியாளர்களின் உலகளாவிய
பொருளாதாரச் சுரண்டலுக்கு நிரந்தரமான முடிவுரை எழுதும் ஆற்றலும்
வல்லமையும் வலிமையான
கருத்தியல் கோட்பாடும் இஸ்லாம் ஒன்றுக்கு மட்டுமே உள்ளது என்பதால்
அவதூறுகளை தங்களது பிரச்சார சாதனங்கள் மூலம் அயராது அள்ளிவிடுகின்றனர்.
இதன் தாக்கம் இந்தியாவிலும் இந்தியாவிலும் பெரிய அளவுக்கு
எதிரொலித்திருக்கிறது.
கடந்த 25 வருடங்களாக உலக அளவிலும் இந்திய அளவிலும் இடைவிடாது முஸ்லிம்
சமூகத்தை மையப்படுத்தி அள்ளிவிடப்பட்டு வந்த இந்த அவதூறு மூட்டைகள்
தற்போது நவீனமெடுத்து தொழில்நுட்ப ரீதியாக வலிமை பெற்று அனைத்து
ஊடகங்களின் வாயிலாக அயராமல் ஒலித்து வருகின்றன.
முஸ்லிம் என்கிற அடையாளத்தை தாங்கிய அனைவருமே பயங்கரவாதிகள் என்று ஊதி
ஊதி பாமர மக்களையும் நம்பவைத்து விட்டனர். உலக அளவில் ஓங்கி ஒலிக்கப்
பட்டு வரும் இந்த எதிர்ப்பு பிரச்சாரம் இந்தியச் சமூகத்திலும் உலககச்
சமூகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
நடுநிலை பேணுவோர், ஜனநாயக சக்திகள் சத்தியத்தை நிலைநிறுத்திட தங்களால்
இயன்ற அளவு முஸ்லிம்களுக்கு எதிரான இந்த அவதூறு போரில் தடுப்பு அரணாக
வீற்றிருக்கின்ற போதிலும் அவதூறு பிரச்சாரத்தின் வலிமை சில நேரங்களில்
தடுப்பு அரணையும் தாண்டிச் செல்கிறது.
இதன் விளைவுகளை முஸ்லிம் சமூகம் பெருமளவில் சந்தித்து வருகின்றது.
நீதியரசர் ராஜிந்தர் சச்சார் அவர்கள் தங்களது ஆய்வறிக்கையில் இது
குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.
"They (Muslims) carry a double burden of being labeled as ''anti
national'' and as being "appeased" at the same time. Wile Muslims need
to prove on a daily basis that they are not "anti national" and
"Terrorist".
"தேச விரோதிகள்" என்றும் "தாஜா செய்யப்படுகின்றனர்" என்றும் ஒரே
நேரத்தில் குத்தப்பட்ட இரட்டை முத்திரையை இரட்டைச் சுமைகளாக முஸ்லிம்கள்
சுமந்து கொண்டு இருக்கின்றனர்.
நாங்கள் "தேச விரோதிகளோ" "பயங்கரவாதி களோ" அல்ல என்று தினமும் நிரூபிக்க
வேண்டிய கட்டாயத்தில் முஸ்லிம்கள் இருக்கின்றனர்'' – சச்சார் கமிட்டி
அறிக்கை (பக்கம் – 11)
இந்திய நாட்டில் வேறெந்த சமூகத்திற்கும் இதுபோன்ற நெருக்கடி இல்லை என்பது
குறிப்பிடத்தக்கது. எனவே இந்த சமூக பாதிப்புகள் என்பது பல்வேறு
மட்டத்தில் வெளிப்பட்டு வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் கல்வி
வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார ரீதியாக கடும் துன்பங்களை முஸ்லிம்
சமூகம் அனுபவித்து வருகிறது.
பெருநகரங்கள் என்று சொல்லப்படும் மும்பய், டெல்லி போன்ற நகரங்களில்
முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடுகள் மறுக்கப்படுகின்றன. தொழில் செய்வதற்கு
ஏற்ற இடங்களோ, கடைகளோ மறுக்கப்படுகின்றன. சிறந்த பள்ளி கல்லூரிகளில்
முஸ்லிம் என்ற ஒரே காரணத்தினால் அனுமதி மறுக்கப்படுகிறது. ஏறக்குறைய
சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களாக வடமாநில முஸ்லிம்கள்
கருதப்படுகின்றனர். இது
ஒரு தேசிய அவமானம். 63 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஓட்டுப் பொறுக்கி
அரசியல்வாதிகளால் இந்திய அரசியல் அமைப்புச் சட்டதிற்கு இழைக்கப்பட்ட
மாபெரும் அநீதி.
இது குறித்து நீதியரசர் ராஜிந்தர் சச்சார் அவர்கள் தனது ஆய்வறிக்கையில்
கவலையோடு குறிப்பிட்டிருந்தும் கூட அரசின் மெத்தனப் போக்கால் இந்தப்
பிரச்சினை தற்போது பெரிதாகி வருகிறது. சில நாட்கள் முன்பு சிழிழி-மிஙிழி
என்ற செய்திச் சேனல் முஸ்லிம்கள் பெரு நகரங்களில்
புறக்கணிக்கப்படுகின்றனரா என்கிற ஆய்வை நடத்தி செய்தி வெளியிட்டிருந்தது.
அதில் முஸ்லிம்களுக்கு
வீடுகள் வாடகைக்கு கொடுப்பதில்லை என்று வீட்டின் உரிமையாளர்கள்
பகிரங்கமாகத் தெரிவித்தனர்.
தென்னிந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆந்திராவையும்
கேரளாவையும் மத பயங்கரவாதிகள் நிறைந்த பகுதிகள் என்று வழக்கம் போல மத்திய
உளவு அமைப்புகள் தங்களது வேலையைக் காட்டி வருகின்றனர். இவற்றிற்கு
உள்துறைச் செயலாளர் நி.ரி. பிள்ளையும் ஒத்து ஊதுகிறார்.
சென்னையில் பல பகுதிகளில் முஸ்லிம்கள் என்றாலே வீடுகள், கடைகள்
மறுக்கப்படுகின்ற காட்சிகளை நிதர்சனமாகப் பார்க்க முடிகிறது. தமிழகத்தின்
பல்வேறு பகுதிகளில் இந்த நிலை உருவாகி உள்ளது.
வட இந்தியாவில் சங்பரிவார் அமைப்புகளின் திட்டமிட்ட அவதூறு பிரச்சாரங்கள்
இதற்கு காரணம் என்றாலும் சகோதர வாஞ்சையுடனும் அனைவரும் உறவுகளைச் சொல்லி
அழைத்திடும் தென்னிந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் இந்த சிந்தனை
அதிகரித்து வருகிறது. இது ஒரு தேசிய அபாயம்.
தமிழ்ச் சமூகத்தின் தந்தை பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் வாழ்ந்த
மண்ணிலும் இத்தகைய மனப்போக்கு மாறிவருவது மிகவும் வேதனையை தருகிறது.
சமூக பகிஷ்கரிப்பு என்கிற நிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக தள்ளப்பட்டு வரும்
முஸ்லிம் சமூகம் இதிலிருந்து எப்படி விடுபடுவது? பாதிக்கப்பட்ட மக்களான
முஸ்லிம் சமூகம் இந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி மீளுவது? விரிவான
கண்ணோட்டத்தோடு அணுக வேண்டிய விவகாரம் இது.
ஒரு சமுதாயத்தின் முன்னேற்றம் என்பது அந்த சமூகம் தன்னைப் பற்றி எந்த
அளவிற்கு சுயபரிசோதனை செய்து கொள்கிறதோ அதை வைத்தே அமையும்.
முஸ்லிம்கள் பல்வேறு மட்டங்களில் புறக்கணிக்கப்படுவதற்கு வெளியிலிருந்து
வரும் அவதூறுகள் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அதில் சற்றும்
குறைவில்லாத அளவிற்கு முஸ்லிம்களின் உள்ளார்ந்த செயல்பாடுகள் சமூக
தளத்தில் அவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதை
உணர்ந்தும் உணராத மக்களாக முஸ்லிம்கள் இருக்கின்றனர். இதை வலிமையாக
அவர்களிடம்
உணர்த்த வேண்டிய ஆலிம்கள், சமூகத் தலைவர்கள் அதைப் பற்றி கொஞ்சமும்
அக்கறை செலுத்தாமல் முஸ்லிம்களுக்கு ஏற்படும் இதுபோன்ற பாதிப்புகளை
எதிர்மறையாகச் சொல்லி, உணர்ச்சியைத் தூண்டி, எரியும் நெருப்பில் எண்ணெய்
ஊற்றும் வேலையை தவறாமல் ஒவ்வொரு கட்டத்திலும் செய்து வருகின்றனர்.
பிரச்சனையின் விபரீதத்தை உணர்ந்து முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து இதை
மாற்றிட
முன்வரவேண்டும். முதலில் முஸ்லிம்களின் மனநிலை மாற்றப்பட வேண்டும்.
உணர்ச்சிப் பூர்வமாக சிந்திக்கும் எந்த சமூகத்திடமிருந்தும்
அறிவுப்பூர்வமான நடவடிக்கைகள் வெளிவராது. தேவை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை.
கடந்த 25 வருடங்களாக தங்களுக்கெதிராக செய்யப்பட்டு வரும் இந்த "அவதூறு
பிரச்சாரங்களுக்கு" முஸ்லிம் சமூகம் இஸ்லாம் என்கிற அதி நவீன அறநெறி
வாழ்க்கை முறையாலும் வலிமையான இஸ்லாமியப் பிரச்சாரத்தினாலும் மட்டுமே இதை
மாற்ற இயலும்.
எவ்வளவு வலிமையான அவதூறுகள் பரப்பப்பட்டாலும் அல்லாஹ்வின் கலாமிற்கு
(அல்குர்ஆன்) முன்னால், நபி (ஸல்) அவர்களது வழிகாட்டலுக்கு முன்னால்
அனைத்தும் தவிடு பொடியாகிப் போகும் என்பதை முதலில் முஸ்லிம் சமுதாயம்
முழுமையாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.
உலகில் தோன்றும் முஸ்லிம் எதிர்ப்பு அலைகளை இஸ்லாம் என்கிற உள்ளத்தை
புரட்டிப் போடும் ஆற்றலுடைய கொள்கையால் மட்டுமே முறியடிக்க இயலும்.
மனிதர்களால் இயற்றப்பட்டச் சட்டங்களை வைத்தோ அதனடிப்படையிலான தண்டனைகளை
வைத்தோ எதிர்ப்புகளை அடக்கிவிட இயலாது. இதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.
முஸ்லிம்களுக்கு எதிராக செய்யப்படும் அவதூறு பிரச்சாரங்களை முறியடித்து
எல்லா சமூகத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட மக்களாக முஸ்லிம்கள் பரிணமிக்க
முஸ்லிம்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று மட்டும்தான். இது "இஸ்லாத்தின்
பண்பாடுகளை, பழக்க வழக்கங்களை முழுமையாக பேணுவதோடு பிற மக்களையும் பேணச்
சொல்ல வேண்டும்" இந்த வழக்கம் நடைமுறைக்கு வருகின்றபோது மிகப்பெரும்
சமூகப் புரட்சி ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
அதிகாரம் தன் மடியில் வர வேண்டும் என்றால் உன் கலாச்சாரத்தைப் பரப்பு
என்றான் ஒரு அறிஞன்.
அவதூறுப் பிரச்சாரங்களை முறியடித்திட முஸ்லிம்கள் செய்ய வேண்டியவை.
1. அண்டைவீட்டுக்காரன் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் முஸ்லிம் அல்ல
என்கிற நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை முழுமையாகப் பின்பற்றிட
வேண்டும். அண்டை வீட்டுக்காரன் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் என்ற
அவசியமில்லை.
2. சுத்தம் என்பது இறை நம்பிக்கையின் ஒரு பகுதி என்ற இஸ்லாமியத் தத்துவம்
ஒவ்வொரு முஸ்லிமாலும் கடைப்பிடிக்கப்பட்டு தனது வசிப்பிடத்தோடு
சுற்றுச்சூழலையும் ஒரு முஸ்லிம் சுத்தமாகத்தான் வைத்திருப்பான் என்பதை
நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும்.
3. அமானிதத்திற்கு மாறு செய்யமாட்டான் முஸ்லிம் என்கிற நம்பிக்கையை
தங்களது நடவடிக்கை மூலம் பிற மக்களிடம் விதைப்பது ஒவ்வொரு முஸ்லிமான ஆண்
பெண் இருசாரர் மீதும் இஸ்லாம் கடமையாக்கி வைத்துள்ளதை மறக்காமல்
கடைபிடிக்க வேண்டும். இது இஸ்லாமிய விழுமங்களை பிற மக்களிடம் உயர்த்தும்.
4. பெரும் செல்வந்தர்கள் என்றாலும் எளிமையான வாழ்க்கை முறையை
முஸ்லிம்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற பேச்சு பிற மக்களிடம்
ஏற்பட வாழ்ந்திட்டால் அங்கே இஸ்லாமிய மார்க்கத்திற்கு பெருமை.
5. தான தர்மங்களில் சாதி மதம் பாராமல் ஈகை குணத்தின் சிகரங்களாக, வாரி
வழங்கும் வள்ளல்களாக முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களை பின்பற்றி வாழ்ந்தால்
குரோதங்களும் விரோதங்களும் இருந்த இடம் தெரியாமல் போகும்.
6. அளவு நிறுவைகளில் மோசடி செய்யாமல், கலப்படம் செய்யாமல், பொருட்களை
பதுக்கி வைக்காமல், உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாமல் நபி (ஸல்)
அவர்களைப் போல நேர்மையான வியாபாரிகள் தான் முஸ்லிம்கள் அவர்களின்
சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமில்லை என்கிற பெயரை நிலைநிறுத்தும்
போது எதிர்ப்பு பிரச்சாரங்கள் கரைந்து ஓடிவிடும்.
7. வாடகைக்கு வீடு தரும் உரிமையாளரிடம் ஒப்பந்தத்திற்கேற்ப நடந்து
கொள்வதும், உரிமையாளர் ஒப்பந்தத்தை முறிக்கின்ற போது அமைதியாக மாற்று வழி
தேடுவதும் தான் இஸ்லாமிய நடைமுறை என்று முஸ்லிம்கள் நடந்து கொள்வது
சமூகத்தில் மிகப்பெரும் இணக்கத்தை ஏற்படுத்தும்.
8. அநியாய வாடகையும், அளவுக்கு மீறிய முன்பணமும் (அட்வான்ஸ்) இஸ்லாமிய
மார்க்கத்தில் விருபத்தக்கதல்ல என்பதை நிலைநிறுத்தி ஹலால்
(அனுமதிக்கப்பட்டது) ஹராமை (விலக்கப்பட்டது) முழுமையாக பேணும்
முஸ்லிம்களாக வீட்டின் உரிமையாளர்கள் வாழும்போது பிற மக்களிடம்
நெருக்கத்தை ஏற்படுத்தும்.
9. முஸ்லிம்களின் வாக்கும், வாழ்வும், சுத்தம் நிறைந்தது. தனது பேச்சால்
எந்த ஒரு மனிதனையும் நோகடிக்க மாட்டான் என்கிற நிலையை உருவாக்கினால்
இந்தியாவில் இஸ்லாத்திற்கு வெற்றி நிச்சயம்.
10. தொழிலாளி முதலாளி என்கிற பாகுபாடு இல்லாமல் தான் உண்ணுவதை உண்ணக்
கொடுத்து, உடுத்துவதை உடுத்தக் கொடுத்து வாழ்பவன் தான் முஸ்லிம்
வியாபாரி. உழைத்த வியர்வை காயும் முன் ஊதியம் கொடுத்து மகிழ்வான்
முஸ்லிம் முதலாளி என்பதை தனது செயலால் உணர்த்திடும் போது சமூகப்புரட்சி
ஏற்படும்.
11.முஸ்லிம்கள் அதிகப்படியாக பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்க வேண்டும்.
முஸ்லிம்களால் நடத்தப்படும் தற்போதுள்ள பள்ளி கல்லூரிகளில் இஸ்லாமியப்
பண்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் அதிகம் அதிகம் நடத்தப்பட வேண்டும். பிற
சமூகத்துடனான தொடர்புகள் அனைத்தும் இஸ்லாமிய நெறியின் அடிப்டையிலேயே
அமைந்திட வேண்டும்.
12. ஜனநாயகத்தில் அநீதி இழைக்கப்பட்ட பிற மக்களின் உரிமைப் போராட்டங்கள்
அனைத்திலும் முஸ்லிம் சமூகம் பெருமளவு கலந்து கொண்டு குரல் கொடுக்க
வேண்டும். அநீதம் இழைக்கப்பட்டவர்களோடு துணை நின்று போராடுவதும் ஒரு
''இபாதத்'' (வழிபாடு) என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்
இப்படி பன்முகச் சமூகத்தில் உள்ளடங்கி வாழும் முஸ்லிம் சமூகம் தன்னை
தற்காத்துக் கொள்ள இஸ்லாமிய மார்க்கத்தை சிறுபான்மையாக வாழ்வின் எல்லா
நிலைகளிலும் கடைபிடிக்கும் போது இந்த பூமியையே சொர்க்கச் சோலையாக
மாற்றிவிடும் ஆற்றல் இஸ்லாமிய மார்க்கத்திற்கு இருக்கிறது.
இத்தகைய ஆற்றல் மிகுந்த இஸ்லாமியப் பண்புகளை முதலில் முஸ்லிம்களிடமும்
அதோடு பிற சமூகத்தாரிடமும் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும்
இஸ்லாமிய இயக்கங்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் ஆலிம்களுக்கும்
இருக்கிறது.
குறிப்பாக சகமனிதர்களோடு உறவுகளைப் பேணுவதில் பெருமானாரைப் பின்பற்றும்
சமூகம் எந்தக் காலத்திலும் சோதனைகளை சந்திக்காது. முஸ்லிம்கள் அது போன்று
வாழும் நேரத்தில் மாறிவரும் விபரீதத்தை உணர்ந்து முஸ்லிம்கள் கடமையாற்ற
வேண்டும். முஸ்லிம்களாக சாட்சி கூறி உம்மாவில் சேர்ந்து இருப்பது
இஸ்லாமிய மார்க்கத்தை நிலைநாட்ட அன்றி வேறு எதற்காகவும் இல்லை.

CMN.SALEEM