Tuesday, August 30, 2011

சாந்தன், முருகன், பேரறிவாளன் குறித்த தமிழக தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது- மத்திய அரசு

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.


இந்தக் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய பேருக்கும் செப்டம்பர் 9ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. எனினும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் 8 வாரம் தடை விதித்துள்ளது. இந் நிலையில் அவர்களுக்கு பொது மன்னிப்பு கோரி சட்டமன்றத்திலும் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இது குறித்து குர்ஷித் கூறுகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது. இதை எவ்வளவு முக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டுமோ, அவ்வளவு முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்படும். அவ்வளவு தான்.

அதே நேரத்தில் உயர் நீதிமன்றத்தின் முடிவில் நான் குறுக்கிட முடியாது. குடியரசுத் தலைவரால் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை மட்டுமே நான் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியும்.


உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் தங்களது கருத்தைத் தெரிவிக்கலாம். அந்த கருத்து இறுதியாக உறுதிப்படுத்தப்படும் வரை அந்த நீதிமன்றங்களின் கருத்து குறித்து நான் எதுவும் கூற முடியாது. சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்புதான் வழங்கியுள்ளது. அதற்கு அரசு உரிய பதிலை அளிக்கும் என்றார்.

No comments:

Post a Comment