Monday, February 7, 2011

நான் முஸ்லிம் என்பதால் என் வங்கிக் கணக்கை மூடிவிட்டனர்!


புதுடெல்லி,பிப்.6:தன்னுடைய ஏடிஎம் கார்டு ஏன் வேலை செய்யவில்லை? என்பதை அறிந்து வர வங்கிக்குச் சென்றார் வாலிபர் ஒருவர். அவமதிப்போடும் ஏச்சு பேச்சுகளோடும் திரும்பி வந்தார். காரணம்? அவர் ஒரு முஸ்லிம்!

18 வயதான காலித் அலீ அப்பாஸி, டெல்லியில் ஒரு கலைக் கல்லூரியில் சமூக அறிவியல் பாடம் படித்து வருகிறார். சிண்டிகேட் வங்கியின் யமுனா விஹார் கிளைக்கு தனது ஏடிஎம் கார்டு வேலை செய்யாததைப் பற்றி விசாரிக்கச் சென்றார். கிளை மேலாளர் மஹேஷ் சந்த் ஷர்மாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் காலித். மக்கள் குழுமியிருந்த அந்த இடத்தில் மதத்தைக் காரணம் காட்டி இவரைத் திட்டி அவமதித்திருக்கிறார் கிளை மேலாளர்.

கிளை மேலாளர் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துகளைக் கூறிவிட்டு அப்பாஸியின் வங்கிக் கணக்கை நிரந்தரமாகத் தடை செய்துவிட்டார்.
அவர் முரட்டுத்தனமாக, "உங்கள் முஸ்லிம்களுக்கு ஒன்றும் தெரியாது. நீங்கள் சட்டவிரோதமாக வணிகம் செய்து, பணத்தை வங்கிகளில் சேமிக்கிறீர்கள். இரு... உன் கணக்கை இப்போதே தடை செய்கிறேன்" என்று கத்தினார் மஹேஷ். பின்னர் பாதுகாவலரை அழைத்து காலிதை அப்புறப்படுத்த கட்டளையிட்டார்.

அவரும், "இங்கிருந்து வெளியே சென்றுவிடு முஸ்லிமே" என்று கூறினார். நான் செல்லாமல், "இது போல் செய்யக் கூடாது. எனக்கு என் கணக்கைப் பற்றித் தெரிந்துகொள்ள உரிமை இருக்கிறது" என்று கூறினேன். அதற்கு கிளை மேலாளர், "என் கணக்கை தடைசெய்து விடுவேன் என்று மிரட்டினார்" என்று அப்பாஸி கூறுகிறார்.

மேலாளரிடம் இதுபற்றிக் கேட்டபோது, "இந்தக் குற்றச்சாட்டு தவறானது, இட்டுக் கட்டப்பட்டது" என்று கூறினார்.

முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசியது குறித்துக் கேட்கப்பட்ட போது, "நான் படித்தவன், சமய சார்பற்றவன், பொது இடங்களில் இது போன்ற வார்த்தைகளை விடமாட்டேன்" என்று கூறினார்.

இதுக்குறித்து அப்பாஸி டெல்லி சிறுபான்மையினர் ஆணையத்திலும், இந்திய ரிசர்வ் வங்கியிலும் தனது புகாரைப் பதிவு செய்திருக்கிறார்.

source:ndtv

No comments:

Post a Comment