Wednesday, January 26, 2011

துரோகம்:கிழக்கு ஜெருசலத்தை இஸ்ரேலிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்ட ஃபலஸ்தீன் அரசு - அம்பலப்படுத்தும் அல்ஜஸீரா!!!

தோஹா,ஜன.25:முஸ்லிம்களின் புண்ணிய நகரமான பைத்துல் முகத்தஸ் என்றழைக்கப்படும்
மஸ்ஜிதுல் அக்ஸா நிலைப்பெற்றிருக்கும் கிழக்கு ஜெருசலத்தில் பெரும்பாலான
பகுதிகளை இஸ்ரேலிடம் ஒப்படைக்க ஃபலஸ்தீன் அரசு ஒப்புக்கொண்டது என்ற தகவல்
வெளியாகியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தையின் போது ஃபலஸ்தீன் அரசு இந்த
வாக்குறுதியை இஸ்ரேலுக்கு அளித்தது என அல்ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி
கூறுகிறது.

ஃபலஸ்தீன் மத்தியஸ்தர் ஸஈப் எரகாத் அன்றைய இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்
சிபி லிவ்னி, அன்றைய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் காண்டலிசா ரைஸ், முன்னாள்
ஃபலஸ்தீன் பிரதமர் அஹ்மத் க்வரியா ஆகியோர் பங்கேற்ற பேச்சுவார்த்தையின்
போதுதான் ஃபலஸ்தீன் மக்களின் விருப்பங்களுக்கு மாற்றமான முறையில் இஸ்ரேலுக்கு
அடிபணியும் விதமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாக அல்ஜஸீரா தொலைக்காட்சி
வெளியிட்ட ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

"யூத வரலாற்றில் மிகப்பெரிய ஜெருசலத்தை உங்களுக்கு தருவதாக நாங்கள்
வாக்குறுதியளிக்கிறோம்"- இது எரகாத் லிவ்னியிடம் கூறிய வார்த்தைகள்.

1967-ஆம் ஆண்டு நடந்த போரில் இஸ்ரேல் சட்டத்திற்கு புறம்பாக அபகரித்து பின்னர்
தொடர்ந்து குடியேற்றங்களை கட்டிவந்த ஜெருசலத்தில் ஒரு பகுதியைத் தவிர இதர
பகுதிகள் அனைத்தையும் இஸ்ரேலுக்கு தாரை வார்ப்பதாக இந்த ஒப்பந்தத்தில்
முடிவெடுக்கப்பட்டது.

ஜபல் அபூ கனீம் என்ற பகுதியை மட்டும்தான் ஃபலஸ்தீன் அரசு கோரியுள்ளது.

1948-49 போர்காலத்தில் அகதிகளை இஸ்ரேல் ஏற்றுக்கொள்வது தொடர்பானது இரண்டாவது
ஒப்பந்தம். ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் ஃபலஸ்தீனர்கள் வீதம் 10 வருடங்களில் ஒரு
லட்சம் பேரை ஏற்றுக்கொள்கிறோம் என இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. ஆனால், போர்
காலக்கட்டத்தில் இஸ்ரேலிலிருந்து வெளியேறியவர்களும், அவர்களின் வாரிசுகளான
பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபலஸ்தீன் அகதிகள் உள்ளனர். இவர்கள் அனைவரையும்
ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஃபலஸ்தீன் பிரதிநிதிகள் கூறியபொழுதும் அதனை
ஏற்றுக்கொள்ள மறுக்கும்விதமாக ஒப்பந்தம் ஏற்பட்டது.

கடந்த 2000-ஆம் ஆண்டிற்கும், 2010 ஆம் ஆண்டிற்குமிடையே இஸ்ரேல், ஃபலஸ்தீன்,
அமெரிக்க தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் 16,076 ஆவணங்கள் அல்ஜஸீராவுக்கு
கிடைத்துள்ளன. நான்கு பகுதிகள் அடங்கிய இதன் ஒரு பகுதி மட்டும்தான் அல்ஜஸீரா
நேற்று முன்தினம் வெளியிட்டது. மீதமுள்ள பகுதிகள் வருகிற நாட்களில் வெளியாகும்.

ஆனால், அல்ஜஸீரா வெளியிட்ட ஆவணங்கள் குறித்து மறுப்பு தெரிவிக்கிறார் எரகாத்.
நாங்கள் ஒன்றையும் மறைக்கவில்லை எனவும், இதில் பெரும்பாலும்
இட்டுக்கட்டப்பட்டது எனவும் அவர் தெரிவிக்கிறார். இது ஃபலஸ்தீன் அரசுக்கெதிரான
சதித்திட்டம் என அஹ்மத் க்வரியா தெரிவித்துள்ளார். இஸ்ரேலுடன் நடத்திய அனைத்து
பேச்சுவார்த்தைகள் குறித்தும் அரபுலீக்கிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக
ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவிக்கிறார்.

2008 ஆம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தை காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்
மூலம் தோல்வியை சந்தித்தது. தாக்குதல் நடத்தும் விபரத்தை இஸ்ரேல் முன்னரே
மஹ்மூத் அப்பாசுக்கு தெரிவித்திருந்ததாகவும் இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை நடந்த விபரத்தை அன்றைய இஸ்ரேல் பிரதமர் எஹூத் ஒல்மர்ட்
உறுதிச்செய்துள்ளார்.

ஃபலஸ்தீன் மக்களின் விருப்பங்களுக்கு எதிராக அப்பாஸும் அவருடைய கூட்டாளிகளும்
இஸ்ரேலுடன் ஒத்துழைப்பதற்கான ஆதாரம்தான் இவை என ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ஸமி
அபூஸுஹ்ரி தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments:

Post a Comment