Sunday, October 25, 2015

இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்களுக்கு மனம் திறந்த மடல்! – (கீழை ஜஹாங்கீர் அரூஸி)

அன்புடையீர்,இந்த மடல் உங்களின் சீரிய சிந்தனைக்கும்,நேரிய வழி பெறுவதற்கும் உதவட்டுமாக.


எனது இந்த மடல் ஊடக வாயிலாகவும் முகநூல் பரிமாற்றங்களின் வாயிலாகவும் உங்கள் பார்வையை வந்தடையும் என்ற நம்பிக்கையில் சில கேள்விகளை? உங்களிடம் முன் வைக்கிறேன்.
இந்திய தேசத்தின் அமைதிப்பூங்காவான மாநிலம் எதுவென்று? யார் எப்போது கேட்டாலும் அது தமிழகம் தான் என்று சிறு பிள்ளைகளும் சொல்லி மகிழ்ந்த காலங்கள் தற்போது உங்களின் நடவடிக்கைகளால் தகர்க்கப்படுவதாக அஞ்சுகிறேன்.
வடமாநிலங்களில் அப்பாவி இந்து(உயர்சாதி) மக்களை மூளைச்சலவை செய்து அவர்களின் சிந்தனையை தலித் மற்றும் முஸ்லிம்-கிருஸ்துவ மக்களுக்கெதிராக திசை திருப்பி விட்டு மதவாத மோதல்களை தொடர் கதையாக்கி வரும் இந்துத்துவா அமைப்புகளின் போக்கினை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
இந்த மதவாத வன்முறைகளால் தான் அந்தந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் தந்திரங்களாக பாஜக,சிவசேனை போன்ற கட்சிகள் பயன்படுத்தி வருவதும் உங்களுக்கு தெரியும்.
அயோத்தியாவின் ராமர் கோயில் பெயரால் வடமாநிலங்களில் மதவெறியை தூண்டி விட்டு இன்று மத்திய ஆட்சியில் அமர்ந்து விட்டனர் பாஜகவினர்.அதன் மூலம் கொல்லப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை பல்லாயிரம்.
தற்போது மாடுகளின் பெயராலும் மதவெறியை தூண்டி ஆயிரக்கணக்கான மக்களை கொல்வதற்கு முனைப்பு காட்டி வரும் வடமாநில பாசிஸ போக்கும் உங்களுக்கு தெரிந்ததே.
இந்துக்களின் பாதுகாவலர்கள் தான் நாங்கள் என்று கூறும் உங்களிடம் நான் கேட்பது இதுதான்:தலித் சமூக மக்கள் இந்துக்களா?இல்லையா?அவர்கள் இந்துக்கள் தான் என்று நீங்கள் கூறினால்…
அரியானா மாநிலத்தில் உயிரோடு பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தி படுகொலை செய்யப்பட்ட இரண்டு பிஞ்சு குழந்தைகளின் மரணத்திற்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
இந்த குழந்தைகளை கொன்றது மேல்ஜாதி ஆதிக்க வர்க்கம் தான் என்று பாதிக்கப்பட்டவர்களும் ஊடகங்களும் தெளிவு படுத்திய பின்னரும் அந்த தலித் மக்களை இந்துக்கள் என்று சொல்ல ஏன் உங்களுக்கு மனம் வரவில்லை?
கர்வாப்சி என்னும் தாய் மதம் திரும்புதல் போராட்டத்தை முன்னெடுக்கும் நீங்கள் இந்த தலித் மக்களை கர்வாப்சி செய்து காஞ்சி சங்கராச்சாரியாருடன் ஒரே தட்டில் உணவருந்த வைக்கும் திராணி உங்களுக்கு உண்டா?
அதே தலித் சமுதாய மக்கள் இஸ்லாத்தின் ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டால்…அவர்களுடன் ஒரே தட்டில் உணவருந்தவும் ஒரே குவளையில் நீர் அருந்தவும் முஸ்லிம்களாகிய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஒருவேளை நீங்களே இஸ்லாத்தின் ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டாலும் அடுத்த கனமே உங்களோடும் ஒரே தட்டில் உணவருந்த நாங்கள் காத்திருக்கிறோம் என்பதையும் மனதில் வையுங்கள்.
மனிதாபிமானமே இல்லாத மேல்ஜாதி இந்துத்துவா கொள்கைக்காக அண்ணன் தம்பிகளாகவும்,மாமன் மச்சான் உறவுகளாகவும் உரிமை பாராட்டி வாழ்ந்து வரும் நமது தமிழகத்திலும் கர்வாப்சி,மாட்டிறைச்சி போன்ற பெயர்களில் பிரிவினையை ஏற்படுத்த நினைக்கும் உங்களின் செயலை தமிழக மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்று தெரிந்தும் கூட நீங்கள் பிடிவாதம் காட்டுவது நியாயமா?
உங்களால் ஒரு தொகுதியை கூட தனித்து நின்று வெல்ல முடியாது என்ற உண்மை இருக்கும் போது எந்த கோட்டையை பிடிக்க நீங்கள் இப்படி ரவுடித்தனம் செய்கிறீர்கள்?
இனம்,மதம்,மொழி,கலாச்சாரம் போன்ற வேற்றுமையில் ஒற்றுமையே நாம் வாழும் தேசத்தின் மிகப்பெரிய அடையாளம் என்பதை மனதில் வைத்து ஆரோக்கியமான நல்லிணக்க சூழலை உருவாக்க முனைப்பு காட்டுங்கள்.
உங்களோடு சகோதரத்துவம் பாராட்டவே நாங்களும் விரும்புகிறோம்.எனது இந்த அழைப்புக்கு உரிய பதிலை உங்களுக்கு மனிதாபிமானம் இருந்தால் ஊடகங்களின் வாயிலாக தெரியப்படுத்துங்கள்.
உங்களுக்கும் உங்களது ஆதரவாளர்களுக்கும் இறைவன் நல்வழி உருவாக்கி தரவேண்டுமென்ற பிரார்த்தனையுடன் நிறைவு செய்கிறேன்.

No comments:

Post a Comment