Tuesday, July 12, 2011

அரசின் புதிய மருத்துவக் காப்பீடு

உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்காக இதுவரை அமலில் இருந்த கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா மாற்றி அமைத்துள்ளார்.
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 950 வகையான மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளில் ஒரு குடும்பம் அதிகபட்சமாக ரூ. 4 லட்சத்துக்கான மருத்துவச் செலவினைப் பெறலாம் என முதல்வர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
"மாநிலத்தில் சுகாதாரமான சூழ்நிலையை உருவாக்க வேண்டுமெனில் அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கப்பட வேண்டும். ஆனால் இப்போதுள்ள மருத்துவக் காப்பீட்டு திட்டம், மக்களின் சுகாதாரத் தேவைகளை முழுமையாக நிறைவு செய்யத்தக்க வகையில் இல்லை.

மேலும், இந்த காப்பீட்டுத் திட்டம், தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவமனைகளும் வளர்ச்சி அடையவே வழிவகுத்தது. எனவே, ""அனைவருக்கும் தரமான மருத்துவச் சேவை வழங்கும் நோக்கத்தை எட்டக்கூடிய வகையில் ஒரு புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்தி அனைவரும் மருத்துவ வசதி பெறுவதை உறுதி செய்யும்'' என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இப்போதைய காப்பீட்டு திட்டம்: இந்த அறிவிப்புக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் முழுமையான புதிய காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.
இப்போதைய காப்பீட்டுத் திட்டம் ஜூலை 5-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதிமுக அரசால் புதிதாக தொடங்கப்பட இருக்கும் காப்பீட்டுத் திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் வரவேற்கப்படும்.
புதிய காப்பீட்டுத் திட்டம்: முந்தைய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு அதிகபட்ச மருத்துவச் செலவாக நான்கு ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் வீதம் வழங்கப்பட்டது. புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு ரூ.1 லட்சமும், குறிப்பிட்ட சில நோய்களுக்கு ரூ.1.5 லட்சம் வரையிலும் அனுமதிக்கப்படும். அதாவது, நான்காண்டுகளில் ஒரு குடும்பம் அதிகபட்சமாக ரூ.4 லட்சத்துக்கான மருத்துவச் செலவினைப் பெற இயலும்.
முந்தைய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 642 வகையான சிகிச்சை முறைகள் அனுமதிக்கப்பட்டு இருந்தன. இந்த சிகிச்சை முறைகள் மாற்றி அமைக்கப்பட்டு இப்போது மருத்துவ மேலாண்மை மற்றும் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகளையும் சேர்த்து இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 950 வகையான சிகிச்சை முறைகள் அனுமதிக்கப்படும்.
அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்: மருத்துவ சிகிச்சை அளிக்கும்போது அதனுடன் தொடர்புடைய பரிசோதனைகளும் காப்பீட்டுக்காக வரையறுக்கப்பட்ட தொகையில் அடங்கும்.
அரசு மருத்துவமனைகளின் மூலமாகவோ, மருத்துவ முகாம்களின் மூலமாகவோ பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்குப் பரிசோதனைக்காக செலவிடப்பட்ட தொகை, அறுவைச் சிகிச்சை தேவைப்படாத பட்சத்திலும் காப்பீட்டுத் தொகையில் அடங்கும் வகையில் வழிவகை செய்யப்படும்.
ஏற்கெனவே இருந்த காப்பீட்டுத் திட்டத்தில், அறுவை சிகிச்சை மேற்கொள்ளாத இனங்களில் பரிசோதனைச் செலவு வழங்குவதற்கு வழிவகை செய்யப்படவில்லை.
நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திருப்பி அனுப்பப்படும் நாளில் இருந்து 5 நாட்களுக்கு செய்யப்படும் பரிசோதனைக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான தொகையும் இந்தத் திட்டத்தில் வழங்கப்படும்.
இந்த வகையிலான கட்டணங்களைப் பெறுவதற்கு முந்தைய காப்பீட்டுத் திட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தொடர் சிகிச்சை தேவைப்படும் சில வகை நோய்களுக்கு வரையறுக்கப்பட்ட தொகை தனியாக நிர்ணயித்து வழங்கப்படும். இதுவும் முந்தைய திட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை.
அரசு மருத்துவமனைகள் மற்றும் அதன் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், இப்போதுள்ள முறைகளை மாற்றி சிகிச்சைக்காக வரையறுக்கப்பட்ட தொகையை தனியார் மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படுவது போன்று அரசு மருத்துவமனைகளுக்கும் முழுமையாக வழங்கப்படும்.
சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே அனுமதிக்கப்படும்.
தனி-சிறப்புப் பகுதிகள்: புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படும் அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டத்துக்கென அனைத்து வசதிகளுடன் கூடிய தனி மற்றும் சிறப்புப் பகுதிகள் அமைக்கப்படும்.
இதனால் புதிய காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற மக்கள் அரசு மருத்துவமனைகளை அதிக அளவில் நாடி வருவர்.
அரசே நேரடியாக வழங்கும்: புதிய காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுவத்துவதற்கான காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
புதிய காப்பீட்டுத் திட்டம் தொடங்குவதற்கு முன் இடைப்பட்ட காலத்தில் உடனடியாக உயிர் காப்பதற்கான சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு இப்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஏற்கெனவே வரையறுக்கப்பட்டுள்ள மருத்துவச் செலவில் சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கான மருத்துவக் கட்டணத்தை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு அரசே நேரடியாக வழங்கும்' என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

வித்தியாசம் என்ன?

திமுக அரசின் காப்பீட்டுத் திட்டம்

1 குடும்பத்துக்கு 4 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம்
642 வகையான சிகிச்சை முறைகளுக்கு அனுமதி
பரிசோதனைக்கான செலவுத் தொகை
காப்பீட்டுத் திட்டத்தில் அடங்காது
சிகிச்சை முடிந்த பிறகு பரிசோதனை மற்றும் இதர செலவுகள் வழங்கப்படாது

அரசின் புதிய காப்பீட்டுத் திட்டம்

1 குடும்பத்துக்கு 4 ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம்
950 வகையான சிகிச்சைகளுக்கு அனுமதி
பரிசோதனைக்கான செலவுத் தொகை காப்பீட்டுத் திட்டத்தில் அடங்கும்
பரிசோதனை மற்றும் இதர செலவுகள் காப்பீட்டில் சேர்க்கப்படும்.

No comments:

Post a Comment