Thursday, July 7, 2011

செங்கடலில் அகதிகள் படகு மூழ்கி செளதிக்கு சென்ற 197 பேர் பலி

அதிபா (சூடான்): சூடானிலிருந்து 200 அகதிகளை ஏற்றிக் கொண்டு செளதி அரேபியாவுக்குச் சென்ற படகு தீப்பிடித்து எரிந்து, கடலில் மூழ்கியதில் 197 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கடும் கலவரம் நடந்து வரும் சூடான், சோமாலியா, எரித்ரியா, எதியோப்பா ஆகிய நாடுகளில் நிலவும் அமைதியின்மை, பசி, பட்டியினியிலிருந்து தப்பி செளதியில் தஞ்சம் புக 200 பேர் நாட்டுப் படகில் சூடான் நாட்டின் அதிபா நகரிலிருந்து கிளம்பினர். இந்தப் படகு 4 மணி நேரம் பயணித்த நிலையில் அதில் தீப்பிடித்துக் கொண்டது.


இதையடுத்து அந்தப் படகு எரிந்து கடலில் மூழ்கியதில் 197 பேர் பலியாகிவிட்டனர். 3 பேர் மட்டும் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமையே நடந்துவிட்டதாகவும், ஆனால், சூடான் அரசு இப்போது தான் அதை வெளியில் சொல்வதாகவும் தெரிகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக படகின் உரிமையாளரான ஏமனைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் நைஜீரியா, சாட், சோமாலியா, எரித்ரியாவைச் சேர்ந்த 247 பேரை ஏற்றிக் கொண்டு செளதிக்குச் செல்ல இருந்த ஒரு படகும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment