Friday, February 3, 2012

கூடங்குளம் அணு உலை விவகாரம்: காங்- மனிதநேய மக்கள் கட்சி மோதல்

சென்னை: கூடங்குளம் அணு உலை மிகவும் பாதுகாப்பாக இருப்பதால் மின் உற்பத்தியை உடனே தொடங்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாததில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்தனர்.

காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத் பேசுகையில், கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது. 14 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டு 12 ஆண்டுகளாக அங்கு அணு மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்தப்பகுதி மக்களுக்கு எந்தப்பாதிப்பும் இல்லை என்பதை நிபுணர்கள் தெளிவாக தெரிவித்துள்ளனர். ஆனால் சமூக விரோதிகள் சிலர் இதை எதிர்த்து வருகிறார்கள். இது வெளிநாட்டு சதியாக இருக்குமோ என்ற அச்சம் கூட உள்ளது. முதல்வர் விலை இல்லா மிக்சி, கிரைண்டர், வழங்குவதாக அறிவித்துள்ளார். அதற்கு மின்சாரம் மிகவும் தேவை என்றார் அவர்.

பின்னர் பேசிய மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா, கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். அவர்களது கோரிக்கை நியாயமானது. அவர்களது அச்சத்தைப் போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர், பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார். ஆனால் அது இதுவரை ஏற்கப்படவில்லை.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை தொடங்கினால் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. 300 மெகா வாட் மின்சாரம்தான் கிடைக்கும். 1.75 சதவீத மின்சாரம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கே தேவைப்படும் என்றார்.

இதற்குப் பதிலளித்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ரங்கராஜன்,கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் தமிழகத்திற்கு 950 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். கூடங்குளம் அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது என்று பல்வேறு நிபுணர்கள் கூறி உள்ளனர். ஆனால் இங்கு பேசிய உறுப்பினர் தவறான தகவல் தருவது கண்டனத்திற்குரியது என்றார்.

தொடர்ந்து பேசிய ஜவாஹிருல்லா, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழுவினர்- இந்து முன்னணியினரால் தாக்கப்பட்டுள்ளனர். இதை காங்கிரஸ் பாராட்டி உள்ளது என்றார்.

இதற்கு பதிலளித்த ரங்கராஜன், காங்கிரசார் யாரையும் பாராட்டவில்லை. இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் கூட கலெக்டர் அலுவலகத்தில் கூடங்குளம் அணு உலை வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறார். தாக்குதல் நடத்தியவர்கள் யாரையும் அவர் பாராட்டவில்லை என்றார்.

No comments:

Post a Comment