Friday, February 10, 2012

அண்ணா பிறந்த நாளுக்காக ஆலயங்களில் சிறப்பு வழிபாடு; சமபந்தி தடபுடல் விருந்து; பல்லிளிக்கும் பகுத்தறிவு!


கைபர்போலன் கணவாய் வழியாக இந்திய துணைக்கண்டத்தில் நுழைந்த ஆரியர்கள்,பிறப்பின் பெயரால் மனிதர்களில் தீண்டாமையை கடைபிடிப்பதையும்,கடவுளின்பெயரால் கற்பனையான மூடநம்பிக்கைகளையும் விதைப்பதையும் கண்ணுற்ற திரு.பெரியார் அவர்கள், அதை ஒழிப்பதற்கான பகுத்தறிவு முயற்சியில் ஈடுபட்டு ஒரு முடிவெடுத்தார். 'மூட்டைப்பூச்சியை ஒழிக்க வீட்டைகொளுத்திய கதையாக' கடவுளின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களை ஒழிக்க கடவுளே இல்லை என்ற பிரச்சாரத்தை முன்வைத்தார். அதே பெரியாருடன் பகுத்தறிவு பாதையில் பயணித்து 'ஆரியமாயை' கண்ட அண்ணா,  பின்னாளில், தி.க.வை உடைத்து  தி.மு.க., ஆனவுடன்  'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற தத்துவத்தை முன்வைத்தார். [இதுதான் இஸ்லாமிய கடவுள்கொள்கையாகும்] 



பிறகு  தி.மு.க. பிளந்து அண்ணாதி.மு.க. உதயமானவுடன், எம்.ஜி.ஆர். மூகாம்பிகையை வழிபட்டார். கருணாநிதியோ மஞ்சள் துண்டுக்கு மாறினார். அதற்கு வியாக்கியானமும் கொடுத்து மறைத்தார்.மேலும், சாய்பாபாவுடனும்,அமிர்தானந்தமயியுடனும் மேடையில் காட்சிதந்து மகிழ்ந்தார். அத்துடன் 'கடவுளை நான் ஏற்றுக்கொள்கிறேனா என்பதைவிட கடவுள் என்னை ஏற்றுக்கொள்ளக்கூடிய பணியை செய்கிறேனா என்பதுதான் முக்கியம்' என்று திருவாய் மலர்ந்தார். ஜெயலலிதாவை சொல்லித்தெரியவேண்டியதில்லை. அவர் அண்ணா தி.மு.க.வை, அத்வானி தி.மு.கவாக நடத்திவருபவர்.

இப்படியான இவர்களின் பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சியாக[?] இந்த ஆண்டும்  அண்ணா நினைவுநாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடும், சமபந்தி விருந்தும் நடைபெற அதில் ஆளுங்கட்சி மந்திரிகள், சபாநாயகர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சமபந்தி விருந்தை ஒரு கட்டு கட்டியுள்ளனர். கோயிலை நம்பக் கூடிய ஒருவர் எப்படி தனது பிறந்தநாள், திருமண நாள், மற்றும் விசேஷ நாட்களில் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொள்வாரோ, அன்னதானங்கள் வழங்குவாரோ அதே போன்று அண்ணாவின் பிறந்தநாள் அதே கோயிலில் அதே சிறப்பு வழிபாடுகள், அன்னதானங்களுடன் அரங்கேறுகிறது. அண்ணா பிறந்த நாளுக்குக்கும் கோயிலுக்கும் என்ன சம்மந்தம் என இந்த பகுத்தறிவு தடுமாற்றத்தை கண்டிக்கவேண்டிய கி.வீரமணியோ கண்டுகொள்ளவில்லை.

இந்த சிறப்பு வழிப்பாடு-மற்றும் சமபந்திவிருந்து நடைபெறும் கோவில்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், நாத்திகரான அண்ணாவின் திதியை கோவில்களில் நடத்துவது ஆலயவிதிமுறைகளுக்கு முரணானது என்றும், கடந்த ஆண்டு அறிவித்த இந்து மக்கள் கட்சி இந்த ஆண்டு 'கப்சிப்'. ஒருவேளை கடந்த ஆண்டு இந்த நிகழ்வை நடத்தியது திமுக., ஆனால் இந்த ஆண்டு நடத்துவது அம்மா கட்சி என்பதாலோ என்னவோ நமக்குத் தெரியவில்லை.

ஆக, தவறான கொள்கைகளில் உறுதியிருக்காது என்ற வாக்கிற்கேற்ப, பகுத்தறிவு என்ற முலாம் பூசிக்கொண்டு பக்தர்களாக வலம்வரும் திராவிட கட்சியினரை, உண்மையான பகுத்தறிவு மார்க்கமான இஸ்லாத்திற்கு அழைக்கிறோம்.' இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து' என்ற பெரியாரின் வாக்கை, நீங்கள் உண்மையில் பெரியாரை பின்பற்றுவதாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்பதன்மூலம் உண்மைப்படுத்த முன்வாருங்கள்.


No comments:

Post a Comment