Thursday, December 9, 2010

ஊழல் பற்றி புகார் செய்ய தனி இணையதளம்



புதுதில்லி, டிச. 9: ஊழல் குறித்து புகார் செய்ய தனி இணையதளத்தை
(Vig-eye) மத்திய கண்காணிப்பு ஆணையகம் தொடங்கி உள்ளது.
இதில் ஊழல், லஞ்சம் தொடர்பான விடியோ, ஆடியோ பதிவுகளுடன் புகார் செய்யும் வசதி உள்ளது.


மேலும் மத்திய கண்காணிப்பு ஆணையரிடம் நேரடியாக புகார் செய்ய இந்த இணையதளம் வகை செய்கிறது.

ஊழல் மற்றும் லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்து கண்காணிப்பு ஆணையரிடம் நேரடியாக புகார் செய்ய முடியும். இந்த இணையத்தில் பதிவு செய்யப்படும் புகார் தனியாக அடையாளமிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
கண்காணிப்பு ஆணையம் தொடர்பான விவரங்களையும் இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

இந்த இணையதளத்தை மத்திய கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் வியாழக்கிழமை தொடங்கிவைத்துப் பேசினார்.

கண்காணிப்பு அமைப்பை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊழல் தடுப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கண்காணிப்பு ஆணையம் பிரசாரத்தைத் தொடங்கி உள்ளது. இந்த விழிப்புணர்வு பிரசாரம் மூலம் ஊழலை மக்கள் சகித்துக் கொள்ளாமல் அது குறித்து புகார் செய்ய முன்வருவது அதிகரிக்கும் என்றார் அவர்.



ஊழலற்ற நடைமுறை, பொது வாழ்வில் ஒழுக்கம் போன்ற தார்மிக நெறிகள் குறித்த கல்வி பள்ளிகளில் பாடமாகச் சேர்க்குமாறு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். சர்வதேச ஊழல் தடுப்பு தினத்தையொட்டி தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசினார். மற்றொரு மத்திய கண்காணிப்பு ஆணையர் ஸ்ரீகுமாரும் இந்த கருத்தரங்கில் பேசினார்.

மத்திய கண்காணிப்பு ஆணைய இணையதளமான www.cvc.nic.in ல்  "விக்-ஐ' குறித்த தகவல்களைப் பெற முடியும்.

நன்றி: தினமணி 

No comments:

Post a Comment