Sunday, December 12, 2010

போங்கய்யா...நீங்களும் உங்க பத்திரிகை தர்மமும்! எழுதியவர் மாதவராஜ்

விக்கிலீக்ஸ் வெளியிட்ட அந்த வீடியோக்களை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். அமெரிக்காவுக்கு எதிரான ஆத்திரமும், அபிப்பிராயங்களும் பரவிக்கொண்டு இருக்கின்றன.

உலகமே துடிதுடித்துப் பார்த்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிற அமெரிக்காவின் அந்த அராஜகங்கள் எதுவும் நமது அருமையான பத்திரிகைகளுக்கு முக்கியமாகத் தெரியவில்லை போலும். எதுவுமே நடக்காதது போல மலை விழுங்கி மகாதேவன்களாக, வேறு செய்திகளை வாசித்துக்கொண்டு இருக்கின்றன.



“ஆத்தூரில் மான் வேட்டை : 2 பேர் கைது”, “வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை தப்பியோடியது” போன்றவை கூட தினமலரின் முக்கியச் செய்திகள். இளவரசர் சார்லஸின் கார் விபத்து உலகச் செய்தியாகிறது. விஜயகுமார், அவரது மகள் விவாகரங்கள் உள்ளூர் செய்திகளாகின்றன. அதே வேலையில், “ஐரோப்பிய யூனியனுடன் பொருளாதார ஒத்துழைப்பு: மன்மோகன் சிங்” மற்றும் “நோபல் அமைதிப் பரிசு வழங்கும் விழா: இந்தியா உள்பட 46 நாடுகள் பங்கேற்பு” போன்ற செய்திகளைப் போட்டு தங்கள் பிறவிப்பயனை அடைந்து இருக்கின்றனர்.

தேடிப்பார்த்தால் விக்கிலீக்ஸ் பற்றிய செய்தியொன்றை தினகரன் கடைசிப்பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. "பேச்சு சுதந்திரம் பற்றி அந்த மனிதர் பேசிய பேச்சில் மயங்கினார் அந்த 27 வயதுப் பெண்” என்று ஆரம்பித்து விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச்சை ஒரு பெண் பித்தராக சித்தரித்து இருக்கிறது. இதுதான் அவர்களின் தரமும், தர்மமும் போலும்.


அமெரிக்காவின் மீது இந்த பத்திரிகை முதலாளிகளுக்குத்தான் எத்தனை விசுவாசமும், அடிமை மோகமும். ஓபாமாவின் வருகையை முன்பக்கத்தில் பிரசுரிக்க முடிந்த இந்த பூதகணங்களுக்கு, விக்கிலீக்ஸ் வெளியிட்ட வீடியோக்களையும், செய்திகளையும் பற்றி, எதாவது ஒரு மூலையிலாவது எழுதிவைக்க தெம்பு இருக்கிறதா? ஊடக அரசியலின் சூட்சுமங்களும், சூழ்ச்சிகளும் பிடிபடுகிற இடம் இது.

ஆறுதலும், ஆதரவும் இணையவெளிதான். கருத்துரிமைக்காகவும், மனித உரிமைக்காகவும் அவர்களே குரல் கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள். மாற்று ஊடகமாகவும், மக்களின் ஊடகமாகவும் இந்த வலைப்பக்கங்கள் பரிணமிக்கட்டும்.

இன்று மகாகவி பாரதியின் பிறந்த நாள். அவரது எழுத்தில் இந்த வெகுஜனப் பத்திரிகைகளுக்கு ஒரு செய்தி.
மாறுபட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய்   போ போ போ!
சேறுபட்ட நாற்றமும் - தூறுஞ் சேர்
சிறியவீடு கட்டுவாய்   போ போ போ!
உண்மைகளைத் தயங்காமல், உலகுக்கு எடுத்து வைக்கும் இணையவெளிக்கும் ஒரு செய்தி மகாகவியிடம் இருக்கிறது.
தெளிவுபெற்ற மதியினாய்
சிறுமை கண்டு பொங்குவாய்  வா வா வா!
எளிமைகண்டு இரங்குவாய்
ஏறுபோல் நடையினாய் வா வா வா!


நன்றி : www.madhavaraj.com

No comments:

Post a Comment