Wednesday, June 8, 2011

அமைச்சரவை மாற்றத்தின்போது தயாநிதி மாறன் பதவி பறிப்பு?

டெல்லி: ஊழல் புகார்களில் சிக்கியுள்ள ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் பதவி, அமைச்சரவை மாற்றியமைக்கப்படும்போது பறிக்கப்படும் என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், ஏர்செல் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டதாக பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் தயாநிதி மாறன். மேலும் பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை அவர் தவறாக பயன்படுத்தியதாகவும் பழைய சர்ச்சை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அவரை பிரதமர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் ஏர்செல் விவகாரம் தொடர்பாக அதன் முன்னாள் தலைவர் சிவசங்கரன் கொடுத்துள்ள சாட்சியத்தின் அடிப்படையில் எப்ஐஆரைத் தாக்கல் செய்ய சிபிஐ தயாராகி விட்டது. இதற்கான அனுமதியை பிரதமரிடமிருந்து அது எதிர்பார்த்துள்ளது. பிரதமருக்கும் இதுதொடர்பாக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தயாநிதி மாறன் பதவியைப் பறிக்க பிரதமரும், காங்கிரஸும் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.

அடுத்த அமைச்சரவை மாற்றத்தின்போது தயாநிதி மாறன் பதவி பறிக்கப்படும் என்று டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.


ஏற்கனவே பெரும் பெரும் ஊழல்களில் சிக்கி ஐக்கிய முற்போக்குக்கூட்டணி உடைந்த கப்பலாக தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தயாநிதி மாறன் மீதும் ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் அது மக்கள் மத்தியில் கட்சி மற்றும் ஆட்சியின் பெயரை மேலும் நாறடித்து விடும் என்று காங்கிரஸ் கட்சியும் அச்சத்தில் உள்ளதாக தெரிகிறது. எனவே தயாநிதி மாறனை பதவியிலிருந்து நீக்க காங்கிரஸ் கட்சியும் ஆர்வமாக உள்ளதாக தெரிகிறது.

முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி ஆகியோரைத் தொடர்ந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் சிக்கியிருக்கும் மூன்றாவது திமுக தலைவர் தயாநிதி மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment