Thursday, June 2, 2011

இலங்கையில் நடந்த போர்க்குற்ற கொடூரக் காட்சிகள்-முழுமையாக வெளியிடுகிறது சேனல் 4

லண்டன்: இலங்கையில் நடந்த ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் இலங்கை ராணுவம் நிகழ்த்திய மிகக் கொடூரமான போர்க்குற்றக் காட்சிகள் அடங்கிய வீடியோவை முழுமையாக வெளியிடப் போவதாக லண்டனைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ் இளைஞர்களை இலங்கை ராணுவ ரவுடிகள், நிர்வாணப்படுத்தி, கைகளை பின்னால் கட்டி உட்கார வைத்தும், நிற்க வைத்தும் பின்னாலிருந்து தலையில் சுட்டு கோரமாக கொல்லும் நெஞ்சைப் பதற வைக்கும் காட்சிகளையும் சேனல் 4தான் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுபோன்ற மேலும் பல கொடூரமான, கோரமான காட்சிகள் அடங்கிய முழுமையான வீடியோத் தொகுப்பை வெளியிடப் போவதாக சேனல் 4 அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை ராணுவ ரவுடிகளின் கோர, பிசாசு முகத்தை கிழிக்கும் வகையில் இந்தக் காட்சிகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காட்சித் தொகுப்பை ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது சேனல் 4.


உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான போர்க்குற்றக் காட்சிகள் இதில் இடம் பெற்றிருப்பதாகவும், போரினால் பாதிக்கப்பட்டோர் அளித்த வாக்குமூலங்கள், சாட்சியங்கள், போர்க்குற்ற ஆவணங்கள் உள்ளிட்டவை இதில் இணைக்கப்பட்டிருப்பதாகவும் சேனல் 4 கூறியுள்ளது.

இந்த வீடியோ தொகுப்பு சுமார் ஒரு மணி நேரம் ஓடக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இத்தனை செய்தாலும் இந்த உலகம் ஈழத் தமிழர்களுக்காக அசைந்து கொடுக்குமா என்பதுதான் இப்போது நம் முன் உள்ள மிகப் பெரிய கேள்வி.

No comments:

Post a Comment