Thursday, June 9, 2011

ராம்தேவ் ஓர் ஆர்.எஸ்.எஸ் ஏஜெண்ட் – ப.சிதம்பரம்!


அன்னா   ஹசாரேயைப்போல் தானும் ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி மக்கள் கவனத்தை ஈர்க்க முயன்ற ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு பிரசாரத்துக்குப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

“கடந்த மார்ச் மாதம் கர்நாடக மாநிலம் புத்தூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உச்சமன்றமான அகிலபாரத பிரதிநிதி சபா ஓர் கூட்டம் நடத்தியது. அதில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அனைத்து அமைப்புகளையும், தனிநபர்களையும் ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டது. ஏப்ரல் 2-ஆம் தேதி ஊழலுக்கு எதிரான முன்னணியை அமைப்பதாக ஆர்.எஸ்.எஸ் அறிவித்தது. பாபா ராம்தேவ் அதன் ஆதரவாளர். எனவே ராம்தேவின் இந்தச் செயலுக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இருக்கிறது” என தூர்தர்ஷனுக்கு அளித்த பேட்டியில் ப.சிதம்பரம் குறிப்பிட்டார்.
“சில ஊடகங்கள் அன்னா ஹசாரே, ராம்தேவ் போன்றவர்களின் பிரச்சாரங்களைப் போட்டிபோட்டுக்கொண்டு ஒளிபரப்புகின்றன. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும்” எனவும் சிதம்பரம் தெரிவித்தார்.

மேலும், “ஊழலுக்கு எதிராக பொதுஅமைப்புகள் குரல் எழுப்புவதை ஆதரிக்கிறேன். இந்த நாட்டின் அடித்தளம் நாடாளுமன்ற ஜனநாயகம்தான் என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வாக்குறுதிகளையும், பொறுப்புகளையும் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் ஒப்படைப்பதை ஆதரிக்க மாட்டேன்” என சிதம்பரம் கூறினார்.


No comments:

Post a Comment