Friday, June 10, 2011

அரை குறையாக சொத்துக் கணக்கை வெளியிட்ட ராம்தேவ்-மதிப்பு ரூ. 424 கோடி மீதி?

 ஹரித்வார் தனது சொத்து கணக்கை முழுமையாக வெளிடப் போவதாக கூறியிருந்த பாபா ராம்தேவ் நேற்று மாலை அரைகுறையான ஒரு சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளார்.  

அவர் கூறிய கணக்குப்படி பார்த்தால் மொத்தம் ரூ. 424 கோடியாகும்.

ஊழலுக்கு எதிராக போராடுவதாக களம் இறங்கியுள்ளார் ராம்தேவ். ஆனால் இவர் ஆர்எஸ்எஸ் பின்புலத்துடன் போராட்டம் நடத்தி வருவதாக மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் குற்றம் சாட்டி வருகின்றன.

மேலும் ராம்தேவ் ஒரு ரவுடி, கூலிப்படையை வைத்து மக்களை திசை திருப்பி வருகிறார். பல நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த நிலையில் ராம்தேவின் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள், நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ரெய்டுகளில் குதிக்கவுள்ளனர்.

இந்த நிலையில், தனது சொத்து விவரத்தை நேற்று பகிரங்கமாக வெளியிடப் போவதாக ராம்தேவ் கூறியிருந்தார். அதன்படி அவர் இன்று மாலை தனது சொத்துக் கணக்கை வெளியிட்டார்.

அவரது உதவியாளர் பால்கிருஷ்ணாதான் இந்த விவரங்களை வெளியிட்டார். அதன்படி மொத்த சொத்து மதிப்பாக ரூ. 424 கோடி என்று பால்கிருஷ்ணா தெரிவித்தார்.

அதில், திவ்ய யோக மந்திர டிரஸ்ட்டின் சொத்து மதிப்பு ரூ. 249.63 கோடி. பதஞ்சலி யோக பீடத்தின் மதிப்பு ரூ. 164.8 கோடி. பாரத் ஸ்வாபிமான் டிரஸ்ட்டின் மதிப்பு ரூ. 10 கோடியாகும்.

இவற்றைத் தவிர வேறு விவரங்களை பால்கிருஷ்ணா தெரிவிக்கவில்லை. மேலும் தங்களது அமைப்பின் பாலன்ஸ் ஷீட் தங்களது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மட்டும் அவர் தெரிவித்தார்.

பால்கிருஷ்ணாவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை சரமாரியாக கேட்டபோது அவர் சரிவர பதிலளிக்கவில்லை. மேலும் அவரது பாஸ்போர்ட் போலியானதா என்ற கேள்விகளுக்கும் அவர் சரிவர பதிலளிக்கவில்லை. எனது பாஸ்போர்ட் தூய்மையானது, நான் இந்தியன்தான் என்று கூறினார். தொடர்ந்து கேள்விகள் குவியவே அவர் எழுந்து போய் விட்டார். சற்று நேரத்தில் பாபா ராம்தேவும் எழுந்து சென்று விட்டார்.

No comments:

Post a Comment