முஸஃபர் நகர்: அண்மையில் கலவரம் நடந்த உ.பி. மாநிலம் முஸஃபர் நகரில் மீண்டும் நிகழ்ந்த வன்முறையில் 2 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பசேந்திரோட் பகுதியில் ஒரு முஸ்லிம் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரது பெயர் ஆபித் (வயது 28). தனது முடி திருத்தும் கடையில் இருந்து திரும்பும் வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஆபிதின் மீது துப்பாக்கியால் சரமாரி சுட்டார்கள். இதில் ஆபித் பலியானார்.
ஆபிதின் கொலையைத் தொடர்ந்து ஊர் மக்கள் கொந்தளித்தனர். நகரத்தில் துணை ராணுவப் படை நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே அருகில் உள்ள மாவட்டமான மீரட்டின் லவாத் கிராமத்தில் 26 வயது முஸ்லிம் இளைஞர் முஃஸின் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கோபமடைந்த ஊர் மக்கள் போலீஸ் வாகனம் உட்பட பல வாகனங்களை சேதப்படுத்தினர். கடையை பூட்டி விட்டு தனது சகோதரனுடன் வீட்டிற்கு திரும்பும் வேளையில் முஃஸினை தடுத்து நிறுத்திய மர்ம கும்பல் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணையை துவக்கியுள்ளது. இந்நிலையில் மாநில டி.ஜி.பி. விஜய் குமார் முஸஃபர் நகர் சென்றுள்ளார்.
No comments:
Post a Comment