Thursday, October 31, 2013

திருச்சி தவ்பீக் சுல்தானா மர்ம மரணம் குறித்து பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் MLA எழுப்பிய பிரச்னையும் முதலமைச்சரின் பதிலும்.

திருச்சி தவ்பீக் சுல்தானா மர்ம மரணம் குறித்து பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் MLA எழுப்பிய பிரச்னையும் முதலமைச்சரின் பதிலும்...

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று (அக்டோபர் 29) முதல் துணை நிதி நிலை அறிக்கை மீதான கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்றது.





அந்த விவாதத்தில் பங்குக் கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் அ. சவுந்தராஜன் தமிழ்நாட்டில் சிறுமிகள் மீதான பாலியியல் பலாத்காரக் குற்றங்கள் அதிகரி்த்து வருகின்றன என்று குறி்ப்பிட்டார். அப்போது குறுக்கிட்டு பேசிய நிதி அமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் அவர்கள் உறுப்பினர் பொதுவாக குற்றஞ்சாட்டக் கூடாது.

குறிப்பான நிகழ்வை சொல்ல வேண்டும் என்று பதிலுரைத்தார். அப்போது நான் குறிக்கிட்டு பின் வருமாறு பேசினேன்:

திருச்சியில் கடந்த ஆகஸ்டு மாதம் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த தவுபிக் சுல்தானா என்ற மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு இலக்காகி அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் இரயில்வே இருப்புப் பாதை அருகே கண்டெடுக்கப்பட்டது அந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடியிடம் தமிழக அரசு சிபிசிஐடியிடம் ஒப்படைத்திருக்கிறது. 3 மாதங்கள் ஆகிவிட்டன விரைவிலே குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.



இந்த விவாதம் நடைபெறும் போது (பிற்பகல் 2.45) முதலமைச்சர் அவையில் இல்லை. இருப்பினும் இன்று (அக்டோபர் 30) அன்று முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் நான் எழுப்பிய இந்த விவாகாரத்திற்கு பின் வரும் பதிலை அளித்தார்:

முதல் துணை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு பேசிய மாண்புமிகு உறுப்பினர் திரு. ஜவஹிருல்லா அவர்கள், திருச்சியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி தவுபிக் சுல்தானா என்ற மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு இலக்காகி அந்தப் பெண் கொலை செயப்பட்டு, அவரது உடல் ரயில்வே இருப்புப் பாதை அருகே கண்டெடுக்கப்பட்டது என்றும், அந்த வழக்கை தமிழ்நாடு அரசு சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என்றும், விரைவிலே குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.


இது குறித்த எனது விளக்கத்தினை இங்கே நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

திருச்சி, காஜாமலை பகுதியைச் சேர்ந்த அக்பர் பாட்சா என்பவரின் மகள் தவுபிக் சுல்தானா மேலப்புதூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 13.08.2013 அன்று பள்ளிக்கு சென்ற சுல்தானா, மாலையில் வீடு திரும்பவில்லையென, அவரது உறவினர் ஜமாலுதீன் என்பவர் 14.08.2013 அன்று அளித்த புகாரின் பேரில், பாலக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் காணாமல் போன தவுபிக் சுல்தானா ரெட்டைமடை ரயில்வே தண்டவாளத்திற்கு அருகில் இறந்து கிடப்பதாக தகவல் தெரியவந்ததையடுத்து, காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக திருச்சி ரயில்வே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் அவ்வழக்கு எடைமலைபட்டிபுதூர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

சுல்தானாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், எதிரிகளை கைது செய்ய வேண்டுமெனவும் கோரி, த.மு.மு.க. உள்ளிட்ட முஸ்லிம் அமைப்பினர் கோரிக்கை விடுத்து 15.08.2013 அன்று 16.08.2013 ஆகிய தேதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர்.

இது தொடர்பாக மூன்று வழக்குகள்பதிவு செய்யயப்பட்டன. பின்னர், சுல்தானா குறித்து பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளும் 30.08.2013 அன்று மாநில குற்றப்பிரிவு குற்றப் புலனாடீநுவுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு, மாநில குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையினர் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் இருந்து திரும்பிய மாணவி வழக்கப்படி வீட்டிற்குச் செல்லாமல் ரயில் பாதையில் நடந்து செல்வதைப் பல சாட்சிகள் கண்டுள்ளனர். புகைவண்டியில் இப்பெண் அடிப்பட்டதற்கான அறிகுறிகள் பிரேதப் பரிசோதனையில் காணப்பட்டுள்ளன. இது விபத்து காரணமாக ஏற்பட்டதா அல்லது தற்கொலையா அல்லது வன்முறையினால் நடைபெற்ற மரணமா என்பது புலன் விசாரணையில் இருந்து வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமர்கிறேன்.
 

No comments:

Post a Comment