Wednesday, October 9, 2013

பாலியல் பலாத்கார வழக்கில் ஆசாராம் பாபுவின் மகன் தேடப்படும் குற்றவாளி!

சூரத்: பாலியல் புகாரில் சிக்கியுள்ள சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண சாய் மீது பாலியல் வழக்கு பதிவு செய்து, தேடப்படும் குற்றவாளியாக சூரத் காவல்துறை திங்கள்கிழமை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் சாமியார் ஆசாராம் பாபு ஏற்கெனவே கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில், சூரத்தைச் சேரந்த இரண்டு சகோதரிகள் ஞாயிற்றுக்கிழமை கொடுத்த புகாரின் பேரில், சாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண சாய் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சகோதரிகள் இருவரும் கடந்த 2001-2006 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அகமதாபாத் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண சாய் ஆகியோர் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர்கள் புகாரில் கூறியிருந்தனர்.
புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, நாராயண சாயை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் ராகேஷ் ஆஸ்தானா தெரிவித்தார்.
நாராயண சாய் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்கும் வகையில், குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவரைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் ஆஸ்தானா மேலும் கூறினார்.
இதனிடையே, ஜெய்ப்பூரில் கர்தானி பகுதியில் உள்ள ஆசாராம் ஆசிரமம் மீது, பாலியல் புகார்களால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். ஆசிரமத்துக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ், 2 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களையும் அவர்கள் சேதப்படுத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment