Friday, October 25, 2013

மஃதனி கண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி!

பெங்களூர்: பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு அநியாயமாக பெங்களூர் பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள பி.டி.பி. கட்சித் தலைவர் அப்துந் நாசர் மஃதனியின் நீண்ட நாள் போராட்டத்தின் விளைவாக கண் சிகிச்சைக்காக உச்சநீதிமன்றத்தின் அனுமதி கிடைத்தது.



அதன்படி பெங்களூரிலுள்ள அகர்வால் கண் மருத்துவமனையில் அவர் கண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று நண்பகல் 12.10 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மதியம் 1.20 மணிக்கு அகர்வால் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் நீரேஷின் தலைமையில் நான்கு மருத்துவர்கள் கொண்ட மருத்துவக் குழு அவரைப் பரிசோசித்தது.
நான்கு நாள் நீடிக்கும் பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகே அறுவை சிகிச்சை பற்றி முடிவெடுக்க முடியும் என்று டாக்டர் நீரேஷ் கூறினார்.
மூன்றரை மாதங்களுக்கு முன்பு அகர்வால் மருத்துவமனையில் மஃதனிக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் அதன் தொடர்ச்சியாக அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்படாததால் இப்போது மீண்டும் அனைத்துப் பரிசோதனைகளும் செய்ய வேண்டும். அதன் பிறகே தொடர் சிகிச்சை குறித்து தீர்மானிக்க முடியும் என்று டாக்டர் நீரேஷ் கூறினார்.
எப்படியிருந்தாலும் பார்வை முழுதும் பாதிக்கப்பட்ட இடது கண்ணுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். வலது கண்ணின் பார்வை 70 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது என்று முன்பு நடந்த பரிசோதனைகளில் தெரிய வந்தது.
மஃதனியின் மனைவி ஸூஃபியா மஃதனி, உறவினரும் பி.டி.பி. கட்சியின் பொதுச் செயலாளருமான முஹம்மத் ரஜீப், வழக்குரைஞர் பி. உஸ்மான் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment