Friday, October 11, 2013

மோடி பிரதமரானால் கலவர வழக்குகள் மறக்கடிக்கப்படும் – குஜராத் முன்னாள் டி.ஜி.பி. ஸ்ரீகுமார்!

கொச்சி: நரேந்திர மோடி பிரதமரானால் குஜராத்தில் அவர் தலைமை வகித்த கலவரம் தொடர்பான வழக்குகள் காணாமல் போகும் என்று மோடிக்கு எதிரான சட்ட ரீதியான போராட்டங்களின் மூலம் பிரசித்தி பெற்ற குஜராத் மாநில முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி. ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.



கொச்சிக்கு வருகை தந்த ஆர்.பி. ஸ்ரீகுமார் தேஜஸ் மலையாள நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியது: வழக்குகளை அழித்தொழிக்கவே மோடியை பிரதமராக்க பா.ஜ.க. படாத பாடு படுகிறது. மோடிக்கு எதிராக வாக்குமூலம் அளித்தவர்கள் தற்போது அச்சத்தால் மெளனம் சாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. பொய்ப் பிரச்சாரங்கள் மூலம் நாட்டு மக்களிடையே மோடி தங்களது பாதுகாவலன் என்ற எண்ணத்தை ஏற்படுத்த பா.ஜ.க. மற்றும் மோடியால் முடிந்துள்ளது.

சங்க் பரிவார் அல்லாத சாதாரண இந்துக்கள் மத்தியிலும் அத்தகையதொரு பிரச்சாரம் செல்வாக்கு பெற்றுள்ளது. அவ்வளவு தூரம் நாட்டு மக்களின் உள்ளங்கள் வகுப்புமயமாக்கப்பட்டு வருகின்றன. குஜராத்தின் பொய்யான வளர்ச்சிவாதங்கள் ஒரு புறம் வேகமாக பரப்புரை செய்யப்படுகின்றன.
தற்போது மூன்று வகையான மக்கள் நாட்டில் உள்ளனர். 1. என்ன நடந்தாலும் சங்க் பரிவாரத்தையும், மோடியையும் ஆதரிப்பவர்கள். 2. நடுநிலையான மோடியை எதிர்ப்பவர்கள். 3. மோடியை மகானாக கருதும் கற்பனையில் உழலுபவர்கள். இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். முன்பு ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற பிரச்சாரத்திற்கு உபயோகித்தது போலவே அனைத்து விதமான பிரச்சார உத்திகளையும் பயன்படுத்தி இந்த 3-வது பிரிவினரை ஈர்ப்பதற்கான அனைத்து விதமான முயற்சிகளும் நடந்து வருகின்றன.
அதில் அவர்கள் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுள்ளார்கள். குஜராத்தில் 90 சதவீத ஹிந்துக்களும் வகுப்புமயமாக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு ஆர்.பி. ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment