Wednesday, October 9, 2013

ஷிண்டேவின் கடிதத்தை பா.ஜ.க. முதல்வர்கள் புறக்கணிக்க வேண்டும்! – வெங்கய்யா நாயுடு

பெங்களூர்: “தீவிரவாதத்தின் பெயரால் எந்த அப்பாவி முஸ்லீம் இளைஞரையும் கைது செய்யக் கூடாது” என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அனுப்பியுள்ள சுற்றறிக்கையைப் புறக்கணிக்கும்படி பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்களுக்கு அக்கட்சி அறிவுறுத்தியுள்ளது.


இது குறித்து அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான வெங்கய்யா நாயுடு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பது: மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே முதல் கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி. பரமேஸ்வர் வரை காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே சிறுபான்மையினரை அரசியல் ஆதாயத்துக்காக வசப்படுத்த முயற்சிக்கின்றனர்.
சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்திவிட்டு,பெரும்பான்மை சமூகத்தை அலட்சியப்படுத்துவதே காங்கிரஸின் மதச்சார்பின்மை தத்துவமாகும். ஷிண்டே தனது சுற்றறிக்கையில் “எந்த அப்பாவி முஸ்லீமும்” என்பதற்கு பதிலாக “எந்த அப்பாவியும்” என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
அவர் தற்போது எழுதியுள்ளது மத சார்பின்மைக்கும், அரசியல் சட்டத்துக்கும் எதிரானது. பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்கள் இந்தக் கடிதத்தை புறக்கணிக்க வேண்டும். கர்நாடக சட்டத் துறை அமைச்சர் டி.பி. ஜெயசந்திரா, முஸ்லிம்கள் மீதான வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்கிறார்.
இதுதான் நிர்வாக முறையா? பெரும்பான்மை, சிறுபான்மை சமூகங்களுக்கு இடையே பாரபட்சம் காண்பது சரியல்ல.
இவ்வாறு வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment